Friday, November 15, 2013

மறக்க முடியுமோ? - சிறுகதை

"எங்க இந்த பக்கம்?" நித்யா தன் தோழி காந்தாவைக் கேட்டாள்.

"ரவிய பார்க்க வந்தேன்."

"ரவியா?" நித்யாவின் புருவம் சுருங்கியது.

"ஞாபகமில்லையா? நம்ப காலேஜ்ல படிச்சானே? எல்லாத்லையும் பர்ச்ட்... ரொம்ப சமத்துன்னே சொல்லலாம்."

"ஓ! அவனா? இங்க பக்கத்லையா இருக்கான்?"

"இல்ல, அமெரிக்காலதான் இருக்கான். இங்க எதோ வேலைன்னு வந்தான்... நீ அவனோட டச்ல இல்லையா?" காந்தா வினவினாள் .

நித்யா இல்லையென்று தலை அசைத்தாள்.

"ஒங்க ரெண்டு பேருக்கும் தானே எப்பவுமே போட்டி?" காந்தா நகைத்தாள்.

"அதெல்லாம் அந்த காலம். இப்போ அதெல்லாம் மறந்தே போச்சு."

காந்தா  அரை மணிநேரம் இருந்து விட்டு கிளம்பினாள். தன் முகத்தில் பழைய ஞாபகங்கள் நடத்தும் போரை எப்படி மறைத்தாள் தன் நீண்டநாள் தோழியிடம் என்று நித்யாவிற்கு தெரியவில்லை. இன்னும் ஒரு நிமிடம்கூட தாக்கு பிடித்திருக்க முடியாது.

போட்டியிடுபவரிடமே மனதையும் பரி கொடுத்திருந்தாள் நித்யா. ஆனால் அந்த சமுத்தோ அவள் ஜாடைமாடையாக வெளிப்படுத்திய எந்த துப்பையும் புரிந்துகொள்ளவில்லை. காலேஜ் முடிந்து எங்கு மறைந்தானோ! அந்த ஏக்கத்தை மட்டும் இவளிடம் ஒப்படைத்திருந்தான். அது இன்றும் மனதை வாட்டியது. இப்ப காந்தா அதை மறுபடியும் தூண்டி விட்டுச்சென்றாள்! அவன் நம்பரை வாங்கிக்கொண்டிருக்கலாமோ என்ற கேள்வி மனதை வாட்டியது.

வாச பெல் அடித்தது. "அம்மா" என்று அந்த சிறுவன் இறுகக்  கட்டிக்கொண்டான்.

"என்னடா ரவி, இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ணின?" என்று கேட்கும் பொழுது அன்பு பொங்கியது - தன் மகன் மேல் மட்டுமல்ல.