Sunday, December 23, 2012

எங்கே மனிதன்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?

கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?

ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?

மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?

மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!

மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.

Saturday, December 15, 2012

துப்பாக்கி கலாசாரம்

இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!

Saturday, December 1, 2012

கிராதகி

செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்

இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்

வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்

அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்

அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்

எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்

Sunday, November 11, 2012

பட்டாசு வைபோகம்

வெடிக்கு பயந்து, என்னிடம் இருக்கும் சக்கரம் புஸ்வாணம் எல்லாவற்றையும் வெளிச்சம் இருக்கும் பொழுதே ஏத்தி விட்டு, மற்றவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது அறையில் கதவை சாத்திக்கொண்டு, காதலி மூடிக்கொண்ட நாளும் நினவிலிருக்கறது.

பிறகு கையில் ஊசிப்பட்டாசை கொளுத்தி வீரமாக எறிந்த ஞாபகமும் இருக்கு.
புச்வாணம் முகத்தில் வெடித்து கண்ணாடி சிதறியதும் ஒரு அனுபவம்.
அந்த வெடியை கொளுத்தி காதை மூடி தூர ஓடிய நினைவுகளும் முகத்தை மலரச்செய்யும்.

இப்பொழுது அடுத்த தலைமுறை மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் பொழுது, வருடத்தில் ஒரு நாள் அவர்களை தடுப்பதா என்ற ஒரு சிந்தனையும் மனதை தாக்குகிறது. நாம் வருடம் முழுதும் நம் சுற்று வட்டாரத்தை நாசம் செய்வதை விடவா இந்த குழந்தைகள் ஒரு நாளில் செய்து விடுவார்கள்?

அவர்கள் சுதந்திரமாக, ஜாக்ரதையாக பட்டாசு வெடிக்க இடம் விடாமல் கட்டிடங்கள் கட்டியது யார்? எல்லா இடங்களிலும் நடக்க கூட இடம் விடாமல் வண்டிகளை நிறுத்தியது யார்?

Friday, October 26, 2012

இது ஒரு டைம் பாஸ்

"சாரி, நாங்க ஆரம்பிக்க லேட் ஆயிடுச்சு. ஆனா நீங்க சீக்கரம் முடிச்சிடறீங்களா?" என்று அந்த நடன நிகழ்ச்சி தலைவர் வந்து கூறும் பொழுது, அவனுக்கு ரொம்ப கோவம் வரத்தான் செய்தது. ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டு சரி என்று தலை ஆட்டினான். இதுதான் எல்லா இடங்களிலும் வழக்கமாக ஆயிற்றே!

நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து - "ஒரு மணிநேர கச்சேரி, 12 பேர்களாவது ஆட வேண்டும்... ஒரு 8 பாட்டுகள் இருக்குமா? கொஞ்சம் கிளாச்சிக்கல், கொஞ்சம் விறுவிறுப்பா சில பாட்டுகள் - இப்படி நல்ல ஒரு மிக்ஸ் இருக்கட்டும்," என்றெல்லாம் வறுத்தி எடுப்பார்கள். பிறகு, "ஆடுபவற்கள் எல்லாம் ப்ரொபெஷ்னல் தானே? ஓஹ்! இவ்வளவு கட்டுப்படியாகாதே! கொஞ்சம் கொறச்சுக்கொங்க! ஆனா 8 பாட்டாவது வேணும்... சரிதானே?" என்று பேரம் பேசுவார்கள். "அப்பொறம், உடை, ஆபரணமெல்லாம் புதுசா, பளிச்சுன்னு இருக்கணம்... சரியா?" இப்படி வேற ஒரு கவலை.

"அண்ணா! கால் சுளுக்கின்றிச்சு அண்ணா!" என்று ஆடுபவர்களில் ஒருவன் திடீரென்று ஜகா வாங்குவான். "ரொம்ப ஜுரம் அண்ணா..." என்று ஒருத்தி மூக்கை உருஞ்சுவாள். எப்படியோ ஒன்று, எல்லாரும் தயாராக நிற்கும் வேளையில், பார்பவர்கள் மெதுவாக, ஆடி அசைஞ்சு வந்து சேரும் வேளையில் நிகழ்ச்சி நடத்துபவர் மணிக்கட்டைப்பார்த்துக்கொண்டே - "சில பாட்டுகளை கட் செஞ்சிடுங்க. அடுத்தது சாப்பிட போவாங்க, பசிக்குதாம்" என்றும் பொழுது இதை ஞாபகப்படுத்தி, தானும் தன் குழுவும் கஷ்டப்பட்டதை ஒரு மாசம் ஒழைச்ச்சதை நினைத்தால் ச்சே என்றாகி விடும். முடிந்தவுடன், "அடடா, கிளாச்சிகால் பீஸ் இன்னும் ஒன்னு இருந்திருக்கலாமே," என்று வேற வேதனைப்படுவது போல ஒரு பாவனை!

அவனுடை நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பு இவ்வளவுதானா என்று தோணும். கலை என்ன ஒரு வெறும் டைம் பாசா என்றுக்கூட வெறுத்துப்போகும். ஆனால் பிழைப்பதற்கு இது ஒரே வழி... இதை தெரிந்துதானே இந்த வழியை நாம் மேற்கொண்டோம் என்ற விவேகம் அவனை இதை பொறுத்துக்கொள்ள செய்கிறது!

Thursday, September 27, 2012

வாழ்க்கைக்கல்வி - கவிதை

கல்லில் தடுக்கி விழுந்து எழுந்து
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்

மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்

வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்

சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்

சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து 
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்

வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்  

Sunday, September 16, 2012

காசேதான் கடவுளடா

நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.

இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!

ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?

Sunday, August 26, 2012

இயற்க்கை செய்யும் வேடிக்கை

 வளைந்து நெளிந்து ஓடும் பாதை
மலையை துளைத்த  நதிப்போல்
மரங்கள் பூக்கள் செடிக்களால்
அலங்கரித்த காவியமாய்

மேகங்களின் மூட்டம்
உருவங்களின் மாயம்
வெள்ளியின் ஓரத்துடன்
ஜொலிக்கும் பஞ்சு மெத்தை

இங்கும் அங்கும் தெளிவாய்
சிறிய அலைகள் மிதக்க
பளிச்சென்று கண்ணாடிபோல்
குட்டைகளும் ஏரிகளும்

பறவைகளும் வியக்க வைக்கும் 
எத்தனை வகையில் பறக்கும்
நிறங்களும் உருவங்களும்
படைத்தவனை போற்றும் 

குளிர்ந்த காற்று வீசும்
மிதமாய் மனது சிலிர்க்கும்
இனிய மணம் மிதக்கும்
மனதை அமைதிப்படுத்தும்

இரண்டே நாள் போதும்
இந்த அனுபவம் புதுப்பிக்கும்
தளர்ந்த மனதைக்கூட
மறுபடியும் ஊக்கவிக்கும்

Sunday, August 12, 2012

வாசம்

 என்றோ மலர்ந்த  புஷ்பம் 
அதன் வாசம் இன்றும்
எங்கோ வீசும் மெலிதாய்
மனதின் மூலையிlலே

மாயமாய் மறையும்
மறுபடியும் திரும்பும்
இன்பமான வேதனையை
இனிதாய் களறும்

நினைவுகளின் பொக்கிஷம் 
இதமாய் மிதக்கும்
அதைப் பற்ற கை எழும்
தயக்குத்தடன் பின் வாங்கும்

நினைவுகளை பஞ்சுப்போல
பறக்க விடுவதில் காணும் சுகம்
அதை மனதில் அடைத்து
நாற வைப்பதில் கிடைக்காது

Sunday, July 29, 2012

பேட்டி

"என்ன படிச்சிருக்கீங்க?" அவள் கேட்டாள்.

"பீ.ஈ" அவன் சொன்னான்.

"இந்த வேலைல எத்தன நாளா இருக்கீங்க?"

"மூணு வருஷமா..."

"இது உங்க முதல் வேலையா? என்ன சம்பளம்? அப்ரைசல்ல என்ன சொன்னாங்க?"

அவன் முழித்தான். "நல்ல வேலை பண்ணறேன்னு..."

"வெளி நாட்டுக்கு அனுப்புவாங்களா? அதுக்கு சம்பளம் எப்படி?"

"ரெண்டு சம்பளம்..."

"ம்ம்ம்..." அவள் இன்னும் மிருதுவான குரலில் பேசினாள். "நான் வேலை செய்வத பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"அது உங்க இஷ்டம்."

"எனக்கு வெளியூர்ல வேலை வாய்ப்பு கடச்சா நீங்க  ஒத்துப்பீங்களா? நீங்களும் கூட வருவீங்களா?"

"ம்ம்..." அவன் தயங்கினான். இந்த கேள்வி அவனை குழப்பியது. பெண் பார்க்க வந்த இடத்தில் வேலைக்கு பேட்டிக்கு வந்தவனை கேள்வி கேட்பதைப்போல கேட்டுவிட்டு இப்படி கேட்டதும் அவனுக்கே ஒரு நிமிடம் தடுமாற்றம். ஆனால் அவன் தாய் சொல்லி அனுப்பியிருந்தாள். நிறைய தேடிய பிறகு இந்த பெண் வீட்டார் அவனைப்பார்க்க ஒப்புக்கொண்டிருந்தார். "எதையாவது ஒளறி கெடுத்துடாத!" என்று எச்சரித்து அனுப்பியிருந்தார். "உங்களுக்கு அதில்தான் இஷ்டம்னா எனக்கு ஓகே" என்று அரைகுறை மனதுடன் சொன்னான். அவனுக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்துக்கொள்ளாமல் எப்படி இதுக்கு ஒத்துக்கொள்வது "உங்க ஹோப்பீஸ் ஒண்ணுமே சொல்லலையே."

"அதான் வாழ்க்கையே இருக்க தெரிஞ்சிக்க... அதுக்கு என்ன அவசரம்?" என்று அவன் வாயை பொத்தினாள் அவள். "ஓ, முக்கியமா, சமைக்க தெரியுமா? பிகாஸ் எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் இன் மானேஜிங் தி ஹவுஸ்."

என்ன ஒரு அழகான சிரிப்பு சிரித்தாள்! 


Sunday, July 22, 2012

குழப்பம் - சிறுகதை


சிறுப் பிள்ளைகள், பந்து விளையாடிக்கொண்டிருந்தன. பந்து வீசியப் பையன் ஸ்டும்ப்சை குறிப் பார்த்து வீசினான். அவன் குறி தப்பவில்லை. "போல்ட்!" என்று எல்லாரும் கையை தூக்கினர்.

பேட் செய்துக்கொண்டிருந்தப் பையன் "இல்லை! சீடிங்!" என்றான்.

"என்னடா சீடிங்? நேர விக்கெட்ல பட்டுது," என்று ஒரு பையன் வந்தான்.

பேட்டால் அவன் நீட்டிய கையை அடித்து அந்தப் பையன், "இல்ல! சீடிங்" என்று சாதித்தான்.

"டேய் மறுபடியும் அடிக்கறான்! வாங்கடா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லலாம்." எல்லாப் பிள்ளைகளும் கிளம்பின.

அந்தப் பையன் ஓடிக்கொண்டே தன் அம்மாவிடம் சென்று "அம்மா, எல்லாரும் என்ன வளையாட விடமாட்டேங்கறாங்கமா," என்று அழுதான்.

"இல்ல ஆண்டி அவன்தான்..."

"என் பையன போட்டு எப்பப்பார்த்தாலும் ஏமாத்தாதீங்க!" என்று விஷயம் தெரிந்துக்கொள்ளாமலேயே அந்தத் தாய் தன் மகனுக்காக பறிந்து வந்தாள்.

"இல்ல ஆண்டி அவன்தான் பேட்டால் அடிச்சான்." தன் சிவந்தக் கையை அடி வாங்கிய பையன் காட்டினான்.

அந்தத்  தாய் திரும்பிப் பட்டென்று தன் மகனை அடித்தாள். எல்லா பிள்ளைகளும் வாயடைத்து நின்றன. "இனிமே அடிப்பயா?"

அந்தப்பையன் அழுதுக்கொண்டே தலையசைத்தான். "எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கள். மறுபடியும் அவன் அடித்தால் என்னிடம் சொல்லுங்கள். ஆனால் வளையாட்டுல செர்த்துக்கணம், சரியா?" என்று சொல்லி அந்தத்தாய் தன் பொறுப்பை நிறைவேற்றின திருப்தியில் தன் வேலைகளை கவனித்தாள்.

அடித்து "அடிப்பது தவறு" என்று கற்றுக்கொடுக்கும் இந்தத்தாய் வாழ்க.

Saturday, July 14, 2012

தனிமையும் சந்தேகங்களும்

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி - பல படித்தப்பெண்கள் இல்லத்தரசியாக மட்டும் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த வாழ்க்கை கசந்துப் போய் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று. மேலோட்டமாக பார்த்தால் இப்படிப்பட்ட பெண்களை பார்த்து கோவம் தான் வரும். ஆனால் யோசித்துப்பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது.

மணமாகிய முதல் பல வருடங்களில் பொறுப்புகள் இருக்கும் - அது உண்மையே. ஆனால் முன் மாதிரி அதுவே வாழ்க்கை ஆகும் அளவிற்கு இல்லை. நவீன உபகரணங்கள், தனி குடுத்தனம் - வீட்டு பொறுப்புகளை ஒரு விதத்தில் சுலபமாகி விட்டன. தனிமையும் தான் அதிகரித்துவிட்டது. அதனால்   தானோ என்னமோ, துணிமணி வாங்குவதே சில பெண்களுக்கு பொழுதுபோக்காகி விட்டது. அப்படி செய்ய முடியாதவர்களோ அல்ல விரும்பாதவர்களோ மனதை தளரவிட்டு வாழ்க்கையையே துறந்துவிடுகிரார்கள்.

தவறுதான். ஆனால் இதை தவிர்ப்பதருக்கு வழிகள் தேவை. வெறும் "இப்படிக்கூட செய்வார்களா" என்று கேட்பதில் ஒரு பயனுமில்லை. வெளியில் போய் வேலை செய்வது ஒன்று தான் வேலை இல்லை. வீட்டு வேலை மட்டும்  செய்வதில் மனதில் நிம்மதி இல்லை. அதனால் மற்ற கலைகள், திறமைகளையும் சிறிய வயதிலேயே வளர்க்க வேண்டும். அந்த திறமைகள் மனதில் நிம்மதியையும் கொடுக்கும், தன்னம்பிக்கையையும் வளரச்செய்யும். குழந்தைகள் இறக்கை முளைத்து கூட்டை விட்டு பறந்த பிறகு இந்த திறமைகளே கை கொடுக்கும்...  

Monday, July 2, 2012

மொபைல் போனும் நாமும்

ஒரு காலத்துல புத்தி சரியா இல்லாதவங்கதான் தனக்குத்தானே பேசிண்டு, சிரிச்சிண்டு போவாங்க. இப்போ தான் எவ்வளவு பிஸின்னு காட்டறதுக்கு இது ஒரு வழி. வாக் போனாலும் சரி, வண்டி ஓட்டினாலும் சரி, காதுல ஒரு வயற மாட்டிண்டு, கத்தி பேசினாதான் தனக்கு மதிப்புன்னு ஆயிடுத்து!

நடக்கரவங்க அப்படி பண்ணினா பரவா இல்லன்னு சொல்ல முடியாது... ஆனா அதுல மத்தவங்களுக்கு ஆபத்து கொறச்சல். வண்டி ஓட்டரவங்கள எவ்வளவு தான் எச்ச்சரிக்கறது! இந்த பேருந்து விபத்துக்கு அப்பறமாவது புத்தி வருமா? ஒரு பாலத்துக்கு மேலேந்து விழுந்தா அந்த பேருந்துல இருக்கறவங்களுக்கு மட்டுமில்ல, கீழே போறவங்களுக்கும் எவ்வளவு ஆபத்து!

சாதாரணமாவே பேருந்து ஒட்டறவங்க ரோடு தனக்காக மட்டும் தான் போலவும், மத்தவங்க கொசு மாதிரியும் நெனப்பாங்க. இப்போ தன்  வாழ்க்கைக்கே கூட முக்கியத்வம் கொடுக்கலையே!

இந்த மொபைல் போன் வந்ததுக்கு முன்னாடி நாம எல்லாம் வாழலையா? ஏன் இப்படி அடிமையாயிட்டோம் அதுக்கு?

Wednesday, June 20, 2012

பறவைகளின் விளையாட்டு

பள்ளிகரணை ஏரியின் அருகில் நிற்க முடியாது! அவ்வளவு துர்நாற்றம்!

ஆனால் அதையும் மிஞ்சி ஒரு அதிசயமான காட்சி கண்ணை பறித்தது! சிறிய பறவைகளும் காக்கையும் காற்றுடன் விளையாடும் விளையாட்டு. அந்த வேகமாக அடிக்கும் காற்றில் இந்த பறவைகள் சிறகடிப்பதை நிறுத்தி காற்றில் பின்னால் தள்ளப்படுவதை மிக ரசித்தன. அதை பார்க்க பார்க்க, நாமும் அப்படி பறந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

அதே காட்சி, இந்த வாரம் மகாபலிப்புரத்திலும் கண்டேன். கடலோர கோவில் உச்சியில் காகங்கள் பறப்பதை நிறுத்தி காற்றால் பின்னால் தள்ளப்பட்டதை ரசித்துககொண்டிருந்தன.

நமக்கு மட்டும்தானா விளையாட்டுகள்! உண்ணுவதையும் பெறுவதையும் தவிர இந்த பறவைகளுக்கும் தான் வாழ்க்கையை ரசிக்க தெரியும் என்று அன்று நான் கண்டுகொண்டேன். 

Tuesday, June 12, 2012

முள்

பூவில் மட்டுமா?
நாவிலும் அல்லவா?
சுள்ளென்று தைத்ததெது?
உன் வாயிலிருந்து உதிரும்
ஆணியைப்போல சுளீரென
குத்தும் வார்த்தைகள் தானே?

நான் உன்னில் காணும்
அந்த முள்ளை
என்னிலும் காண்கிறாயா!
என்ன அதிசயம்!
என் தேனையும் விட
இனிய சொற்களில் விஷமா!

இருவரும் மனதில்
ஒருவரை ஒருவர்
தேளைப்போல கொட்ட
என்ன அற்புதமான
உறவிது! பூப்போல
மலரும் சிரிப்பில்
ஒளிந்திருக்கும் ஒரு முள்

Friday, June 1, 2012

மூடிய கதவு

ஹீனமாக 'காப்பாத்து'
என்றது அந்த குரல் 
அதை நெருங்கினாலோ
ஆபத்து தெரியவில்லை
விலக விலக அதே குரல்
நெருங்க நெருங்க 
மாயமாக மறைந்ததேன்! 

தட்டினாலோ யாரும் இல்லை
ஆனால் உதவியோ தேவை
நீட்டிய கையை தள்ளுவது யார்?
எனக்கா! என்று கேட்பது யார்?
எனக்கென்ன அபாயம்
என்று சீறுவது யார்?
நீயா இல்லை உன் அஹமா!



Saturday, May 26, 2012

தோல்வி

வெகு நாட்களுக்கு பிறகு நேற்று கிரிக்கெட் பந்தயம் பார்த்தேன். குழந்தைகள் சென்னை சூப்பர் கிங்க்சுக்கு விசல் போட்டார்கள், ஆனால் எனக்கோ ஒரே கடுப்பு. கொஞ்ஜம் தோல்வியும் வாழ்க்கையில் முக்கியம் இல்லையா!

முரளி விஜய் வெளுத்து வாங்கினான். ஆனால் என்னை பொறுத்த வரையில் அது மட்டும் இல்லை சென்னையின் வெற்றிக்கு காரணம். டெல்லி குழு பந்து வீசும் பொழுதே தோல்வியை எதிர்பார்த்தார் போல் இருந்தது. ஒவ்வொரு ஆறுக்கும், நான்குக்கும் பந்து வீசுபவன் தன் தோல்வியை ஒப்புகொண்டார்போல முகத்தை தொங்க போட்டுக்கொண்டனர். ஒரு கேட்ச் மிஸ் ஆகும் பொழுது அந்த பீல்டர் அழுது விடுவானோ என்று தோணியது.

ஏனோதானோ என்று தான் டெல்லி ஆட்ட வீரர்கள் பேட் செய்ய வந்தார்.

எனக்கு ஆட்டத்தைப்பற்றி ரொம்ப தெரியாது என்றாலும் இப்போதெல்லாம் பேச படும் 'பாடி லாங்குவேஜெய்' வைத்து தோல்விக்கு அறிகுறி என்ன என்பதற்கு அவர்கள் பலத்த உதாரணம்.

கொல்கடாவாவது இன்னும் தைரியத்துடன் ஆடும் என்று எதிர்பார்க்கிறேன்.

Monday, May 21, 2012

மேகத்தின் நடுவில்

 மலை பிரதேசம். சுத்தி தேனீர் செடிகள். நதியும் நீர் மலையிலிருந்து கொட்டும் காட்சிகளும் மனத்தை ப்ரமிக்க வைத்தன. இந்த கோடை காலத்திலும் இப்படி குளுமையா என்று ஆச்சர்யமாக இருந்தது.

முன்னார் மற்ற மலை பிரதேசங்களை விட இயற்கையில் செழிப்பாக இருந்தது. செயற்கையான இயற்கை - ஏன்னென்றால் மரங்களை வெட்டி தேனீர் எஸ்டேட்கள் உருவாயிருக்கும் அல்லவா? ஆனாலும் பசுமையை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.

ஆனால் ஊர் முழுதும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணியா பொழுது ஒரு மலை மேல்  காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. வெய்யிலில் செல்லும் பொழுது ஒரு மலை புகைத்து கொண்டிருப்பது போல் இருந்தது. அங்கு தான் செல்கிறோம் என்று கூட அறியாமல் இரு பாறைகளுக்கு இடையில் புகுரும் பொழுது எதோ தேவலோகம் சென்று விட்டார் போல பிரமிப்பு. அப்படிஒரு மேக மூட்டம். பத்தடி தாண்டி தெரியக்கூட இல்லை.

ஏழாவது சொர்க்கம் என்பது இது தானோ என்று கூட தோணியது. அந்த மாதிரி அனுபவம் இந்த ஜன்மத்தில் நான் எதிர்பார்க்க வில்லை...

Friday, May 11, 2012

சுற்று சூழல்


 ஒரு இடத்திற்கு சென்ற உடனே நம்மை அது சில சமயம் கவர்ந்து விடுகிறது. சில நேரங்களில், என்ன தான் அழகாக இருந்தாலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோணி விடும். சில மனிதர்களை பார்த்தால் சுகமாக இருக்கும். சிலர் என்ன சிரித்துப் பேசினாலும் மனதிற்கு கசப்பாகவே இருக்கும். 

எத்தனை சபைகளில் ஆடினாலும், கோவில்களில் ஆடுவது போன்ற ஒரு சுகம் கிடைப்பது அறிது. முயற்சி, உழைப்பு எல்லாவற்றிற்கும் ஒன்றுதான் என்றாலும் சாமிக்கு முன்னால் ஆடுவது போன்ற சுகம் சபையில் ஆடும் பொழுது கிட்டாது. இதுவும் அந்த இடத்தின் ஆற்றலை காமிப்பது என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. 

பூஜை, தியானம், இதற்க்கு உள்ள வலிமை, நிறைய மக்கள் திரண்டு, தன் நினைவுகளை எல்லாம் ஒரு சிலையின் மேல் செலுத்தும் பொழுது அதற்க்கு எல்லாருடைய மன ஆற்றலும் போய் சேர்வதுதான் இதற்க்கு காரணம் என்றால் நாம் கூடி சாதிக்க கூடியது எவ்வளவு இருக்கிறது! இந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவதற்கும் அதே மனோபலம் தானே தேவை! நல்லது செய்ய என்ன தடை?

Tuesday, May 1, 2012

பூஜையில் கரடி

 என்னையே கரடி என்று சொல்லிக்கொள்ளும் நிலமைக்கு வரவல்லை இன்னும். ஆனால் இந்த சிந்தனை ஒன்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

இருவர் தோழர்கள். மூன்றாவது தோழன் அவர்களுடன் சேரும் பொழுது கலக்கம் ஏற்படுவது ஏன்? இது கணவன் மனைவி விஷயத்தில் மட்டும் அல்லாமல், நட்பில் கூட பாதங்கள் ஏற்படுத்துகிறது.

"உனக்கு அவன் சொன்னால் ஒசத்தி,அவன் தான் முக்கியம்" என்று டக்கென்று ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.

"அவள் உன்னை பத்தி என்ன சொன்னா தெரியுமா?" என்று வம்பு பேச தூண்ட வைக்கிறது.

"அவ எப்பவுமே ப்படித்தான். நான்தான் விட்டு கொடுக்கணம்," என்று குறை பட வைக்கிறது.

ஒரு நேரத்தில் நம்மால் ஒருவருடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியுமோ? அதை விட அதிக பேர்கள் இருந்தால் அது கட்சியாக மாறி விடுகிறதே! ஒரு வித அச்சம் - நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் - அந்த உறவை மாற்றி விடுகிறது. எவ்வளவு இருந்தும் என்ன, நமக்கு நம் மேலேயே நம்பிக்கை இருப்பதில்லையே! மற்றவர்கள் ஆமொதிப்பதற்கு தானே காத்திருக்கிறோம்! 

Friday, April 27, 2012

கலைக்கு மரியாதை

 நேற்று ஒரு நாட்ய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சென்றேன். ஆறு மணிக்கு ஆரம்பித்து விடும், பன்னிரண்டு சிறிய சிறிய, வெவ்வேறு விதமான ஆட்டங்கள் இருந்தன. எல்லாமே விறுவிறுப்பாக இருந்தன. ஆடுபவர்களின் உழைப்பு அவர்கள் சிந்திய வேர்வையில் தெரிந்தது. இதில் ஆடுவது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு முறையும் உடை மாற்றம் வேறு. அந்த உடை மாற்றும் நேரத்தில் தான் நான் தொகுப்பாளராக அடுத்து வரும் ஆட்டத்தைப் பற்றி பேசுவேன்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க ஆறரை மணி ஆகி விட்டது. கடைசியாக ஒரு நடனம் இருக்கும் பொழுது நடத்துனர் வந்து "நேரமாகி விட்டது, சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள்" என்ற பொழுது கோபம் பொங்கி எழுந்தது. இதே அனுபவும் எனக்கும் ஒரு நிகழிச்சியில் நடந்தது. ஆறு மணி என்று சொல்லி ஆறரை ஆகியும் ஆரம்பிக்க வில்லை. பிறகு கடைசியில் தில்லானா ஆடுவதற்குள் முடித்துக்கொள்ள சொன்னார்கள்.

ஆடும் பொழுதும், பேசிக்கொண்டே இருப்பது, போனில் பேசுவது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்கு பெருமையான விஷயங்கள் போல. ஒரு நிகழிச்சியில் பத்து நிமிடம் ஆடுவதற்கு கூட கிட்ட தட்ட அரை மணி நேரம் தினம் ஆடினால் தான் மேடையில் நன்றாக ஆட முடியும். அந்த முயற்சிக்கு ஒரு மதிப்பே இல்லாதது போல ஆகி விடுகிறது இந்த மாதிரி சில பேர்களுடைய நடத்தையை பார்த்து. இது அந்த கலைக்கு செய்யும் அவமானமில்லையா?

நேரத்திற்கு ஆரம்பிப்பது, நிகழ்ச்சி நடக்கும் பொழுது அமைதி காப்பது, முடிந்தவடுன் கலைஞ்யரை ஊக்குவிப்பது - இது அல்லவா நம் பண்பாடு? இது எங்கே மறைந்ததின்று? 

Saturday, April 21, 2012

வெயில் காலம்

கொளுத்தும் வெயில்
மலரும் செடிகள்
கடல் காற்று
இடியுடன் மழை

லீவு, விளையாட்டு
தோழமை, பகைமை
வேர்வை, தாகம்
சிரிப்பு, கசப்பு

சந்தோசம், ஏமாற்றம்
என்று பல சுவைகள்
அற்புதமாக கலந்தது
வெயில் காலம்

Saturday, April 14, 2012

நல்ல வேளை

"கடவுள் தான் காப்பாற்றினார். ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்." ஒரு விபத்து நடக்கும் பொழுது அதில் பிழைத்தவர்களைப்பற்றி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை.

அப்படி என்றால், இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா? கடவுள் கை விட்டு விட்டாரா? பிழைத்தவர்களுக்கு மரணமே இல்லையா? ஏதோ ஒரு வழியில் அந்த முடிவு எல்லாருக்கும் தான். இந்த விபத்தில் இல்லையென்றால், வேறொரு விதத்தில் சாவு நிச்சயம். பின்னே எதற்கு கடவுளை பிழைத்தால் மட்டும் இழுக்கிறோம்?

சில நேரங்களில் பிழைக்காமல் இருப்பதுகூட நல்லதுக்காக இருக்கலாம் அல்லவா? அந்த விபத்தில் இருந்து தப்பித்து வேறு பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளலாம். அப்பொழுது அதை எந்த கண்ணோட்டத்தில் பார்போம்?

எதற்கு இப்படி மண்டையை கொழப்பிக்கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு பெரிய சிறிய விபத்தில் பிழைத்தவர்களை பற்றி இப்படி பேசும் பொழுது தோணக்கூடிய சிந்தனை இது. இறந்தவர்கள் மட்டும் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் கொடூரமாக, மனதை திகிலடிக்கவைக்கும் இறப்பு அவர்களுக்கு என்று...

Thursday, April 5, 2012

ஆசை, பேராசை

"என்ன போட்டுக்கபோற?" நீலா மதுவை கேட்டாள்.

"தெரியல," என்று மது தோளை குலுக்கினாள். அலமாரி கதவை தறந்து, அதில் உள்ள நூற்றுக்கணக்கான துணி மணிகளை ஆராய்ந்தாள். "ஏற்கனவே போட்டுக்கொண்டவை தான் இருக்கு. புதுசா ஒண்ணுமே இல்ல," என்று முகம் சுளித்தாள்.

"துணி கடைக்கு போகலாமா? என் கிட்டயும் ஒண்ணும் இல்ல," என்று நீலாவும் சொன்னாள். இருவர் கண்களிலும் குதூஹலம் தெரிந்தது... "வா!" என்று சேர்ந்து சொல்லி உடனே புறப்பட்டார்கள். தேவை ஒரு ஆடைகூட இல்லை, ஆனால் பொருக்கி வந்தது ஒவ்வொருவருக்கும் நாலாவது இருக்கும். போட்டுக்கொள்ள காரணமா கிடைக்காது!

**

"என்னடா, புது காரா?" சரவணன் கேட்டான்.

"அமாண்டா." யது சொன்னான்.

"பழசுக்கு என்ன ஆச்சு? சரியா இல்லையா?"

"இல்லடா, அஞ்சு வருஷம் ஆச்சு, அதான். பிளஸ், பெரிய கார் தேவ பட்டிச்சி..." யது பல்லிளித்தான். 

*
"நடக்கறதுக்கு நாட்டுல எடமே இல்ல. இதுல மரம் வளர்ப்பாங்களா இல்ல ரோடு போடுவாங்களா?" என்று கேட்டுக்கொண்டே போனாள் மது.

"ஏய், புது மால் வரதாம் எங்க பேட்டைல," நீலா சொன்னாள்.

"ஒ வாவ்! இந்த மால் எல்லாம் போர் அடிக்கறது. புதுசா ஏதாவது பிராண்ட்   வரதான்னு பாக்கலாம்."

*
"இவங்க எப்போத்தான் இந்த ட்ராபிக் பிரச்சனைய தீக்கப்போராங்களோ தெரியல! வண்டி ஓட்டரதவிட சிக்னல்ல நின்னு போற டைம் தான் அதிகமா இருக்கு," யது முணுமுணுத்தான்.

"உன் பைக் இருக்கறச்சே ஈசியா இருந்துது இல்ல?"

"ஆமாம், ஆனா இந்த வெய்யில்ல தாக்கு பிடிக்க முடியல."

"அது சரிதான். ஆனா கார் அதிகமாக அதிகமாக, ரோட்டு போடறதுக்காக மரத்த இல்ல வெட்டிடறாங்க."

யது அலுத்துக்கொண்டான். எ/சியை அதிகரித்தான்.




Sunday, March 25, 2012

பன்னி பிடிக்கும் கலாட்டா

சரியாகத்தான் படித்தீர்கள். இன்று காலை, ஒரே சத்தம், என் பக்கத்து காம்பௌண்டில். மெட்ரோ ரயில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஒரு கர்பமான பன்னி தன் குட்டிகளை எதிர்பார்த்து அந்த இடத்திலேயே தனக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது.


நல்ல எண்ணத்தில் தான், மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. நாலு ஆட்கள்  பத்து ஆட்களுக்கு சமமான சத்தத்தை போட்டுக்கொண்டு பன்னி பிடிக்க வந்திருக்கிறார்கள்.

அவர்கள் சத்தத்தை கேட்டு பன்னி இங்கும் அங்கும் ஓட இவர்கள் அதை விலகி ஓடுகிறார்களா பிடிக்க ஓடுகிறார்களா என்று புரியவில்லை. கடைசியாக எப்படியோ அந்த பன்னி பிடிபட்டாயிற்று. பாவம் - இந்த கர்பமாக இருக்கும் தருணத்தில் இவ்வளவு ஓட்டம் அதற்க்கு நல்லதோ இல்லையோ! அதைப்பற்றி யாருக்கு கவலை?

Monday, March 19, 2012

சும்மா ஒரு தமாஷ்

மதுசூதனன் என்ற பெயரை செல்லமாக "மது" என்று கூப்பிடுவது வழக்கம்.

இதில், மது என்பது அரக்கனின் பெயர். கடவுள் பெயரை வைத்து கூப்பிடவேண்டும் என்ற பண்பாட்டிற்கு மாறாக, நாம் அப்பெயர் உள்ளவர்களை அரக்கனின் பெயரை வைத்து கூப்பிடும் கட்டாயம்.


சரி, அப்போ சூதனன் என்று கூப்பிடலாம் என்று பார்த்தல் அதற்க்கு அர்த்தம் "கொன்றவன்" என்றாகி விடுகிறதே! பேசாமல் பேரை மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன்!

Sunday, March 11, 2012

புதுமை

 ஆர்வத்துடன் நீட்டினான் அவன் தான் எழுதிய கட்டுரையை. "படித்துப்பார்த்து சொல் எப்படி இருக்கிறது என்று?" என்று ஆவலாக கேட்டான் அவன்.

இவன் அதை வாங்கி கொண்டு, "ம்ம்ம், நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்," என்றான் உர்ச்சாகமின்றி. வேலை 
செய்யும் இடத்தில் இதற்க்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கும்!

 சிறிது முகம் சுருங்கினாலும், நேரத்தின் பதிப்பை அறிந்த அவன், "நான் வெயிட் செய்வேன். உன் வ்யுஸ் கேட்டப்பரம் தான் பத்திரிகைக்கு அனுப்புவேன்," என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

இவன் ஒரு வாரம், இரு முறை ஞாபகம் படுத்திய பிறகு தான் அந்த கட்டுரையை படித்தான். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொன்னான், "தாட் ப்ளோ இருக்கு... ஆனா புதுமையா ஒண்ணுமே சொல்லலையே?"

அவன் முகம் வாடியது. "நீ சொல்வது சரி தான்," என்று அவன் தன் கட்டுரையை வாங்கிக்கொண்டான். அவன் தலைமரைந்ததும், இவன் தலையில் அடித்துக்கொண்டான் "எல்லாரும் எழுத வந்திடறாங்க" என்று.

ஆறு மாதம் கழித்து அவன் மலர்ந்த முகத்துட்டன் எதிர்பட்டான். கையில் ஒரு காகிதம். "அண்ணே, என்னோட ஒரு புத்தகம் வெளி வரது. அதுல இந்த முன்னுறை எழுதறேன்... கொஞ்சம் படிங்க."

ஆச்சர்யமாக பார்த்தான் இவன். கையில் வாங்கிக்கொண்டான் அந்த காகிதத்தை. நெஞ்சில் குத்தியது போல இருந்தது.

"இந்த புத்தகத்தின் மூலாதாரமே என் அண்ணன் தான்" என்று இவன் பெயர் இருந்தது. மேலும் படித்தான். "எல்லாரும் எழுதுவதையே நீயும் எழுதாதே என்று அவர் வழி காட்டினார். அதிலிருந்து பிறந்த தேடல் தான் இந்த புத்தகம். அவர் அன்று என் கட்டுரையை போலியாக புகழ்ந்திருந்தால் நான் புதுமையாக எதையும் செய்திருக்க முடியாது..."

தான் வஞ்சனையுடன் சொன்ன வார்த்தையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அவன் காலில் விழ வேண்டும் போலிருந்தது இவனுக்கு.

Monday, March 5, 2012

சச்சரவு - சிறுகதை

தன் கணவனை முறைத்துப் பார்த்தாள் அவள். "எப்பொழுதுமே நான்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா?  ஒரு முறையாவது என் ஆசைப்படி நடந்துகொண்டிருக்கயா?"

"ஏன் அப்படி சொல்ற!" அவன் பதிலுக்கு கோவம் கொண்டான். "ஒனக்கு எப்பவுமே திருப்தி கடயாது! நீ உன் பிரெண்ட்ஸ பார்க்க போகணம்ங்கரச்சே நான் ஒன்ன கொண்டு போய் விடலையா?  எனக்கு அன்னிக்கி எவ்வளவு வேல இருந்துது தெரியுமா? டிரைவர் மாதிரி என்ன ட்ரீட் பண்ணிட்டு இப்ப இப்படி ஒரு கேள்வியா?"

"என்னையும் தான் ஒரு குக் இல்ல மெய்ட் மாதிரி நெனைக்கற. நீ வீட்ல நோழயரச்சே காபி கைல கொடுக்கணம். இங்க அங்க போட்டுப்போற சாமான் எல்லாம் பொருக்கி வெக்கணம். உங்க வீட்லேர்ந்து உறவுக்காரங்க வந்தா சமைச்சுப் போடணம்!  இதுக்கா நான் இன்ஜினியரிங் படிச்சேன்?"


"ஏய், நானா ஒன்ன வேலைய விட்டுட்டு வீட்ல ஒக்கார சொன்னேன்? நீதான் வேலைக்கும் போய் வீட்டையும் பாத்துக்க முடியலன்னு சொன்னே!"


"ஏன்னா நீ எனக்கு ஒரு ஒத்தாசையும் செய்யல வீட்ல! எப்படி எல்லாத்தையும் என்னாலையே பார்த்துக்க முடியும்? ஆள வெச்சுக்கலாம்னா அதுக்கும் ஒதுக்க மாட்டேங்கற!"


"ஆள் இருக்கறதெல்லாம் அள்ளிண்டு போய்ட்டா? அப்பறம் யார் திண்டாடறது?"

"கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆச" என்று அவள் தன் தாடையை தோளில் இடித்தாள்.

"எத்தன பொம்பளைங்க வீட்டையும் பாத்துண்டு வேலைக்கும் போறாங்க?"

"அவங்க புருஷன் எல்லாம் எப்படி தாங்கறாங்க!"

"ஏதோ நான் தாங்காத மாதிரி!"

"எப்பவும் நீ நெனைக்கறதுதான் சரி! எனக்கு என்ன ஒத்தாச செஞ்சிருக்க?"


ஓ - இந்த பாய்ண்டில் தான் நாம் நுழைந்தோமோ!  இப்படியே சுற்றி சுற்றி எத்தனை நேரம்தான் இந்த சண்டை தொடரும்? விட்டுக்கொடுங்கப்பா! அப்பத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றும்!

Saturday, February 25, 2012

ஏமாற்றம் - சிறுகதை

ராகவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு வருத்தம், இதற்க்கா என்று! ஏனோ நண்பன் சோமுவை பார்க்கும் பொழுது எல்லாம் ஆத்திரம் பொங்கி வந்தது. எப்படி அவன் மேல் இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது? ஏன் அது பொய்யானதும் இவ்வளவு மனத்தாக்கல்? ச்சே! தான் என்ன சிறு பிள்ளையா? "நீ எமாத்தினாய், அதனால் நான் உன் பேச்சுக்கா" என்று நினைக்க தூண்டும் இந்த எண்ணம் அவனுக்கே அறுவறுப்பாக இருந்தது.


ஆனாலும், இவ்வளவு பழகியும், சேர்ந்து ஓட்டப்பந்தயத்திர்க்கு பயிற்ச்சிப் பெற்றது மட்டும் அல்லாமல், இவன் மனம் நொந்தபோது கூட இருந்தது சோமுதானே? தன்னால் முடியுமா என்று இவன் பயந்த பொழுது, "வா, இன்னும் ஒரு முறை ஓடலாம்" என்று தேற்றியவனைத்தானே நண்பன் என்று எண்ணினான்?


அவன் அந்த பந்தயத்தை பார்க்க வருவானா என்ற சந்தேகம் கூட ராகவன் மனதில் எழவில்லை. தன் மனதின் சஞ்சலங்களை புரிந்துக்கொண்டவன், அந்த உழைப்பிற்கு பலன் தரும் நாளன்று பார்வையாளர்கள் இருக்குமிடத்திலிருந்து கை தட்டி உற்சாகப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பு எப்படி இவன் மனதில் உருவாயிற்று? 


"சாரி மச்சான், பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பட போலாம்னு கூப்பிட்டாங்க... அதான்," என்று எவ்வளவு சுலபமாக கூறி விட்டான்! நிறைய பேர் வந்து கை குலுக்கியும், அந்த சோமு இல்லாத ஏமாற்றம் தான் இன்று பெரும் மலையாக அவன் மனதில் நின்றது.


இதற்க்கு சோமு காரணமா, இல்லை அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பா?

Saturday, February 18, 2012

ஒரு கலக்கம்

பல மாதங்களாக இன்றைய தினத்திற்காக உழைத்தது இன்று என்ன பலனை கொடுக்குமோ...

உனது தருமத்தை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் நெருங்கும் பொழுது எங்கிருந்தோ மனதில் ஒரு கலக்கம் ஆரம்பிக்கிறதே! உடலில் லேசாக ஒரு நடுக்கம்! 

மற்றவர்களுக்காக ஆடும் பொழுதுதான் அந்த பயம். உனக்காகவும், உன்னை படைத்து இந்த கலையை கொடுத்தவனுக்காக செய்தால் அதில் என்ன பயம்? கொடுத்தவன் கை விடமாட்டான் என்ற நம்பிக்கையுடன் லயத்தில் ஒன்றினால்...

பலனுக்கு என்ன வேலை அங்கே? 

Saturday, February 11, 2012

வழிகாட்டி

ஒருவன், சிறுவன். பதினைந்து வயது என்கிறார்கள். ஆனால், குழந்தையை போல, தன்னை சொல்லிவிட்டார் பார்த்தாயா என்ற ஆதங்கம். வழி காட்ட யாருமா இல்லை?

ஒரே செயலில் இரு குடும்பங்களில் துன்பம். தன் ஆசிரியையை கொன்று அவன் தப்பிக்கலாம் என்று நினைத்தானா? எப்படி தப்பிப்போம் என்ற நம்பிக்கை வந்தது? இல்லை, மாட்டிக்கொள்வோம் என்ற பயம் கூட இல்லையா! எதற்க்காக இந்த காரியத்தை செய்கிறோம் என்று யோசித்தானா? இதை செய்ததில் அவனுக்கு நிம்மதியா? அவன் பெற்றோர்கள்? என்ன செய்வார்கள்? "உன்னால் தான்" என்று ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்களா?

அந்த ஆசிரியைக்கு இரு மகள்கள். தந்தை கூட இல்லை. என்ன செய்வார்கள்? தாயையும் இழந்து, வாழவும் வழி இல்லாமல் திணறும் அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்லமுடியும்?

இனி எந்த ஆசிரியராவது தவறாக செல்லும் மாணவரை கண்டிப்பாரா? ஏன், பெற்றோர்கள் கூட யோசிக்க மாட்டார்கள்? பின்னே அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி யார்?

அந்த சட்டசபையில் ஆபாச படத்தை பார்க்கும் தலைவர்களா?

Sunday, February 5, 2012

இளமையில் முதுமை

ஏதோ ஒரு பள்ளியில் படித்து எப்படியோ முன்னுக்கு வந்த தலைமுறை நம்முடையது. ஆனால் இன்று தன குழந்தைகளுக்கு ஒசத்தியான படிப்புத்தான் கொடுக்க வேண்டும் இன்று திண்டாடும் தலைமுரையாகி விட்டது. அதில் மாட்டி முழிப்பவர்கள் - 
  • காசு கொடுத்து, அல்ல சிபாரிசு மூலம் பள்ளியில் சேர்க்க மாட்டேன்; 
  • வெறும் வருட கடைசியில் பரீட்சையில் நல்ல எண் வாங்கினால் போதாது, என்ன படிக்கிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும்; 
  • படிப்பு மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் என் குழந்தைக்கு வளர்ச்சி வேண்டும்

இப்படி நினைக்கும் பெற்றோர்களுக்கு இன்று பள்ளி தேடுவதே நரகம் என்று கண்டு கொண்டேன்.
காசு மட்டும் இருந்தால் போதாது, சிபாரிசும் வேண்டும்.
அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் வேறு எதாவது பிறப்பிலேயே குறைகள் இருந்தால், ஐயோ! பிறப்பதே தவறு! கல்வியை பற்றி நினைக்கவே கூடாது.
மற்ற விஷயங்களுக்குத்தான் வெளியில் அவ்வளவு வகுப்புகள் இருக்கே! அதில் ஏதாவது ஒன்றில் சேர்த்தால் போதாது. எல்லாவற்றிலும் சேர்த்து குழந்தையின் குழந்தைத்தனத்தையே அழித்துவிடவேண்டும்.
அந்த குழந்தையின் சிந்தனையும் எப்படியாவது சிறிய வயதிலேயே பழுத்து விடவேண்டும். அப்பொழுதுதான் வாழ முடியும்.
மொத்தத்தில் இயற்கையை அழிப்பதுதான் நம் பெரியோர்களின் வேலை போல!




Tuesday, January 31, 2012

நிம்மதி

சத்தம் சுற்றும் முற்றும்
பறக்கும் புழுதியும் தூசும்
வண்டிகளும் வெய்யிலும்
வெப்பமும் வேர்வையும்

இதையெல்லாம் தாண்டியும்
இதே வறண்ட பூமியிலும்
இருக்குமா இப்படி ஒரு இடம்
சொர்கத்தை மெச்சிடும்

நீர், பசுமை, பறவைகளும்
மிருதுவான குளிர்ந்த காற்றும்
நிசப்தம் நிறைந்து எங்கும்
மனதில் பரவும் நிம்மதியும்

Tuesday, January 24, 2012

மாற்றம்

சிங்கம் வேட்டையாடும்
மான்தான் ஒளிய வேண்டும்
பருந்து முயலை கவ்வ தான் செய்யும்!
முயல் தானே பதுங்க வேண்டும்!

பாம்பு தவளையை தின்னுமென்று தெரிஞ்ச
தவளை தன் வாயை மூட வேண்டும்
ஆண் மனது தத்தளிக்கும் என்று அறிந்த 
பெண் தானே அடக்கமாக இருக்க வேண்டும்!

ஆஹா! முன்னேறி விட்டோம்
என்று நினைக்கும் நாம் தான்
நம் நினைப்பை சுதாரித்துக்
கொள்ள வேண்டும்!

இங்கு இன்றும் காட்டு ராஜ்ஜியம்
வெளியில் மாறினாலும்
மனிதன் இன்னும் தன் 
மிருகத்தனத்தை மறக்க வில்லை 



Wednesday, January 18, 2012

1970யிலிருந்து இன்று வரை

 எமெர்ஜென்சி காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு புத்தகமும் இதை பற்றி சமீபத்தில் படித்தேன். அந்த காலத்தில், யாராவது அரசுக்கு எதிராக நடந்து கொண்டால், அவர்களை போலீஸ் காரர்களே விசாரணை என்று கொன்று விடுவார்களாம்.  நல்ல வேளை அந்த காலம் முடிந்து போயிற்று என்று நிம்மதியாக இருக்க முடியவுல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.


எங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் பைக் மீது இன்னொரு பைக் மோதிற்று. தொடர்ந்த வாக்குவாதத்தில் அந்த இன்னொருத்தர் இவரை வந்து நன்றாக அடித்திருக்கிறார். போலீஸ் புகார் கொடுக்க போகும் இடத்தில் அந்த ஆளும் வந்திருக்கிறான். அவனும் ஒரு போலீஸ்  கான்ஸ்டபள்    என்று அங்கு சென்ற உடன் தெரிய வந்தது. அந்த  கான்ஸ்டபலோ 'எனக்கு எதிரா புகார் செய்வாயா! என்ன செய்கிறேன் பார்' என்று மிரட்டியதால் இவர்கள் வந்து விட்டார்கள். ஆலோசனை கேட்டால் மற்றவர்களும் 'விட்டு விடு' என்று சொல்லி விட்டார்கள்.


இப்படி இருக்கு, என்ன செய்ய முடியும்? சாதாரண மனிதர்களுக்கு நீதி பெற என்ன வாய்ப்பு?


Sunday, January 15, 2012

Chasing Her Shadow - Literary Fiction Novel - love, unrequited, short

Chasing Her Shadow - Literary Fiction Novel -  on modern complexities of human relationships. My official debut novel, which my friends liked and encouraged me to write more. Only now woke up to the fact that I can share this on blog too...

Awaiting your feedback

வெய்யில் - நிழல்

இன்னிக்கு எதை நாம் கொண்டாடுகிறோம் என்று என் மகள் மூன்று முறை கேட்டு விட்டாள். அவளுக்கு அவளுடைய பள்ளியிலும் பொங்கலைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வயல் என்பதையே எதோ காரில் துலைவு தூரம் போகும் பொழுது தான் கண்டிருக்கிறாள். அவளிடம் இதுதான் வயல், இங்கிருந்துதான் உணவு வருகிறது. சில நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. வயலில் யாருக்குமே வேலை செய்ய இஷ்டமில்லை என்றெல்லாம் நாம் சொன்னால் என்ன புரிய போகிறது?


சரி, புரியும் படி அந்த கதிரவனை வணங்கு என்று சொன்னால், அது மட்டும் போதுமா? அதை கண்டு பயந்து தானே நாம் இன்று அறைகளுக்குள்ளேயே பதுங்கி இருக்கிறோம்! யாரை கேள், வைட்டமின் டி பத்தவில்லை என்ற குறைபாடு கண்டு பிடித்திருக்கிறார்களாம். ஏன் இருக்காது! வெய்யிலில் சென்றால் தோல் கருத்துவிடும் என்று வெய்யிலே படாமல் நிழலிலேயே வாழ்வதின் விளைவுதானே இது! இவ்வளவு வெய்யில் இருக்கும் நம் நாட்டிலே வெய்யில் பற்றாகுறை வியாதி கேட்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.

அறிவியலினால் நாம் பல விஷயங்களை சுலபமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூடவே அதின் தீங்குகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறோம். நன்மை இருந்தால் தீமையும் கூடவே வரும் என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

காலச்சக்கரத்தில் நாம் மீண்டும் இருளில் தள்ளப்படப்போகிறோம், அந்த நாளை நோக்கி மிகு வேகமாக நாம் போய்  கொண்டிருப்பது பீதியை கிளப்புகிறது. கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விவேகம்... தேவை இன்று நமக்கு.



Tuesday, January 10, 2012

தேடல்

வானை நோக்கி
எழும்பிய அலைகள்
பூமியை நோக்கி
பாயும் மழை


அக்கரையிலிருந்து
வரும் பறவைகள்
அக்கரைக்குப் போக
ஏங்கும்  மிருகங்கள்


அது கிடைக்காதா
என்று ஏங்கும் மனம்
கிடைத்தது வேண்டாம்
என்றும் புறக்கணிக்கும்


இந்த தேடலிலேயே
வாழ்க்கைச் சக்கரம்
சுழண்டு சுழண்டு
தன்னை ஓட்டும்


முன்னேற இதுதானா
ஒரே வழி?
எப்பொழுதுமே ஒரு
நீங்காத ஏக்கம்?

Wednesday, January 4, 2012

வசதி: சிறுகதை

குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பதே அவளுக்கு ஒரு பொழுதுபோக்கு. தன் வீட்டு மாடியில் இருந்து அவர்கள் பந்தாடுவதை மணிகணக்காக பார்க்க முடியும் அவளால். ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் இதெல்லாம் போய் விடுமே என்று மனம் வருந்தியது. புது வீடு கட்டியாயிற்று. இந்த இடத்தை விட இன்னும் வசதியான இடம். வீடும் பெரிது. பார்த்து பார்த்து, ஒவ்வொரு கல்லாக கட்டிய வீடு. அக்கம்பக்கத்தில் குழந்தைகள் இருப்பார்களா என்று தெரிய வில்லை. இருந்தாலும் இந்த மாதிரி வந்து விளையாடுவார்களா? இல்லை கம்ப்யூட்டர் கேம்ஸ், டிவி என்று வீட்டிலேயே அடைந்திருப்பார்களா?


ஒரு மாதம் கழித்து வீடு மாற்றியாகி விட்டது. பரீட்சை நேரம், அதனால் குழந்தைகள் இருப்பதும் இல்லாததும் தெரியவே இல்லை. ஆனால் சில நாட்களில் சத்தம் கிளம்ப ஆரம்பித்தது. பெண்கள் கயிறை வைத்து குதிப்பது... பசங்கள் பந்தை வைத்து விளையாடுவது.

வெளியில் ஓடி வந்து பார்த்தாள். சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அந்த பந்து வீட்டுச்சுவரை தாண்டி உள்ளே விழுந்தது. அவள் மனம் பக்கென்றது. அந்த ஜன்னல் கண்ணாடிக்கே எவ்வளவோ நூறு செலவாயிற்று!

"ஆன்டி," என்று ஒரு பையன் மேலே பார்த்தான்.

"எடுத்துக்கோ. ஆனா இனிமே இந்த பக்கம் அடிக்கக்கூடாது, சரியா?" என்று எச்சரித்தாள்.

"ஓகே" என்று அந்த பையன் உள்ளே வந்தான். ஐயோ! அவள் ஆசையாக வைத்த செடிகள் மீதெல்லாம் நடந்து நாஸ்தி செய்ய போகிறான்! ஓடி கீழே வந்தாள். "நானே எடுத்து தரேன்" என்று அவனை வாசலிலேயே நிறுத்தினாள்.

இரண்டு நாள் இதே மாதிரி ஆயிற்று. அவர்களுடைய கார் வேற சில நேரங்களில் வாச பக்கத்தில் நிற்கும்.

"இந்த பக்கம் விளையாடாத. அந்த பக்கம் போ," என்று விரட்டிநாள்.  "உங்க வீட்டு பக்கம் போங்க. ஏன் இங்க வெளயாடறீங்க!" என்று கோபித்துக்கொண்டாள். பார்த்து பார்த்து கட்டின வீடு. விலை உயர்ந்த கார்!  இதற்க்கெல்லாம் இந்த குழந்தைகள் சேதம் செய்தால் யார் ஈடு கட்டுவது! பொருப்பே  இல்லாத பெற்றவர்கள். வீட்டிலேயே எதையாவது விளையாட வைக்க வேண்டியது தானே! என்று புலம்பத் தொடங்கினாள்.