Monday, December 25, 2017

வெளிச்சத்தில் இருட்டு

பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எது ஆரம்பம் என்று
நினைவு இல்லை
இருட்டைக் கிழித்து
வெளிச்சத்தில் இருக்கும்
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்

எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
அதை எண்ணிப் பார்க்க
நெஞ்சில் வீரம் இல்லை
எதிரே இருக்கும் இருட்டு
அதை மறந்துப் போக 
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை  

செல்லும் வழியும்
சீராக இல்லை
கரடுமுரடாய்
முள்ளும் மலருமாய்
வறுமையும் செழிப்புமாய்
தனிமையும் இனிமையுமாய்
செல்லும் வழியும்
சீராக இல்லை

இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 
காயோ கனியோ 
இனிப்போ கசப்போ 
பொருளோ சுகமோ 
புகழோ இகழ்ச்சியோ 
இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 

மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?
எதிரே தெரியும் இருட்டு 
வெறும் ஒரு திரையா?
இங்கே தெரியும் வெளிச்சம் 
மெய்யா பொய்யா?
மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?

வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான் 
பகட்டைக் கண்டு 
சிரிக்கிறேன் நான் 
ஒளியைக் கண்டு 
பதுங்குகிறேன் நான் 
வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான். 



Saturday, December 2, 2017

சிறுதுளி, பெருகும் உள்ளம்

மேகங்களின் மூட்டம் கிளப்பியது
மனதில் விளங்காத குதூகலம்

ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்

Saturday, November 18, 2017

பேசுவதும் கலை

"கொஞ்சம் நேரமாவது வாயை மூடேன்," என்று அம்மா கெஞ்சினாள் மகள் அஞ்சுவிடம்.

"இல்லைம்மா, இதை மட்டும் சொல்லிடறேன்...கேளேன்," என்று எதற்கும் மசியாத அஞ்சு தொடர்ந்தாள். தன்னையும் மிஞ்சி அம்மா சிரித்து விட்டாள். அதற்கு மேல், மகள் விளாவரியாக விளக்கி வரும் விஷயத்தை அதிகம் காது  கொடுத்துக்  கேட்கவில்லை ஆனால் புரிந்துகொண்டாள்.  "சரி, சரி, இப்பொழுதாவது உன் வேலையை கவனி," என்று அனுப்பிவைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் போனில் தன் தோழி ஒருத்தியுடன் முடிவே இல்லாமல் பேசுவதைக் கேட்டு, "போறாதா! நிறுத்து, படி," என்று இருந்த இடத்திலிருந்தே கூறினாள்.

Wednesday, November 1, 2017

ஆஹா மழை, ஐயோ மழை

அடுத்த வேளை நீருக்கு என்ன செய்வதென்று திணறினாள் ஈஸ்வரி. இன்று வந்த தண்ணீர் லாரியில் அவளால் இரண்டு நாளைக்கு வேண்டிய அளவுதான் பிடித்துக்கொள்ள முடிந்தது. மூன்றாவது நாள் வரவில்லையென்றால் என்ன செய்வது?

இதே கதைதான் ஊர் முழுக்க - தண்ணீர் பஞ்சம். எங்கெங்கேயோ வெள்ளம் வந்து பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி மட்டும் வருகிறது. அந்த பாழாப்போன மழை இங்கு பெய்யக்கூடாதா?

பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஒவ்வொரு  நொடியும் அவள் குடும்பத்தினர் செலவழிக்கும் நீரைக் கண்காணித்து வந்தாள். இரண்டு வருடமாக மழை காலை வாரி விட்டது. அதற்கு முன்னால் பெய்த மழை நீரை சரியாகச் சேகரிக்காதலால் எல்லாம் கடலில் சேர்ந்துவிட்டதாம்!

வெயில் காயும் வானத்தைக் கண்டு எத்தனை முறை, மழை வந்து தொலையக்கூ டாதா என்று கடிந்து கொண்டதுண்டு; ஐயோ பெய்ய மாட்டாயா என்று கெஞ்சியதுண்டு; ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளிடம் புலம்பியது உண்டு. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை, இது நியாயமா !

சாலையில் செல்லும் போது நீரை இறைத்துக்கொண்டுபோகும்  லாரிகளைக்  கண்டாலே வயிறு பற்றி எரியும். தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்கக்கூடாதா? தண்ணியை மிச்சப்ப படுத்தக்கூடாதா என்று லாரி ஓட்டுபவனை நிறுத்தி கேட்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த வருடமாவது பெய்யுமா என்று தினம் வானத்தைப் பார்ப்பதும், எல்லோரிடமும் அதைப் பற்றி சர்ச்சை செய்வதுமே ஜோலியாகி விட்டது.

பெய்யாது என்று சொன்ன மழை திடீரென்று அந்த நகரை விஜயம் செய்தது. ஈஸ்வரிக்கு தலைகால் புரியவில்லை. மண்வாசனை தூக்க, வெளியே ஆவலுடன் எட்டிப்பார்த்தாள். தூறல் ஆரம்பித்தவுடன் தன் குழந்தைகளுடன் வேகமாக வெளியே சென்று முதல் மழையின் இனிமையில் நனைந்தாள். இந்த முறை தண்ணீர் பிரச்னை தீரட்டும் என்று ஊர் ஜனங்களுடன் வேண்டிக்கொண்டாள்.

வீட்டுக்குள் நுழைந்தாள். கூரையிலிருந்து நீர் சொட்டியது. அதற்கடியில் பானை ஒன்றை வைத்தாள். விடா மழையில் அந்த பானையும் தான் எத்தனை தாங்கிக்கொள்ளும்? போறாததற்கு வெள்ளம் வேறு! சாலைகள் நதியாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன... சில இடங்களில் பாம்புகள் கூட நெளிந்து சென்றதாக வதந்திகள்.

ஐயோ, எப்படா சூரியனைப் பார்ப்போம், மழை போதுமடா சாமி! லாரியில் கூட தண்ணீர் வாங்கிவிடலாம் ஆனால் இந்த வெள்ளமாக ஓடும்  நீரை சேமிக்கவும் முடியாமல் உபயோகிக்கவும் முடியாமல் திணறுவதை  பொறுத்துக்கொள்ள முடியவில்லை!

ஈஸ்வரி வானத்தை நோக்கி சூரிய பகவான் அருள்  புரிய வேண்டும், மறுபடியும் காட்சியளிக்க வேண்டும், மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .

Sunday, October 8, 2017

அன்பின் பல முகங்கள்

"உங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது," என்று சுகுணா மறுபடியும் லதாவிடம் கூறினாள்.

அவர்கள் சந்தித்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி சந்திக்க வேண்டி இருந்தது. பழக்கம் அதிகரிக்க சுகுணாக்கு லதாவின் வேகம், விவேகம், திறமை, எல்லாமே ஆச்சர்யத்தை அளித்தன.

வேலைக்கு போய் கொண்டிருந்த லதா, தன் மாமனாருக்கு உடல் நலம்  சரியாக இல்லாத போது, வேலையை விட்டு அவரைப் பார்த்துக் கொண்டாள். அந்த சில மாதங்களில் அவள் நகை செய்யக் கற்றுக்கொண்டாள். தெரிந்தவர்கள் மூலம் விற்பனை செய்ய, அவளுடைய பொருள்கள் பிரசித்தி பெற்று, இப்பொழுது தெரியாதவர்கள் கூட அவளிடம் வாங்க வந்தார்கள்.

ஒரு சிறிய கடை ஆரம்பித்து, இரு பெண்களை அமர்த்தி, இப்பொழுது அவளுடைய கடை ஓகோ என்று ஓடியது. மாமனாரிடமும் நல்ல பெயர். வேலை அனுபவத்தினால்  நிர்வாகமும் நன்றாகச் செய்தாள். சுயமாகக் தொழில் செய்வதினால் அவளுடைய தன்னம்பிக்கையும் மெச்சிக்கொள்ளும் படி இருந்தது. அவளுடைய குழந்தைகளும் பொறுப்பாக, தாய்க்கு பெருமை சேர்ப்பவர்களாக, சுதந்திரமாக வளர்ந்தார்கள். கணவன் எல்லாவற்றிற்கும் பக்க பலமாக இருந்தான்.

லதா தானே எல்லாம் செய்வதையம், அவள் குடும்பம் அவளுக்கு ஆதரவாக இருப்பதையும் கண்டு சுகுணா மாய்ந்து போனாள்.  அவளும் நன்றாகப் படித்தவள் தான். ஆனால் படித்து  முடித்த உடனேயே திருமணம், பின்னோடு குழந்தைகள், அவர்களின் பராமரிப்பு... தனியாக எங்கேயும் செல்லவோ, எதையும்  செய்யவோ வேண்டிய அவசியமே எழவில்லை. எல்லாவற்றிற்கும் கணவன் வரதன் துணையாக இருந்தான். போராததற்கு வேலை ஆட்கள் வேறு.

லதா எப்பவும் போல் புன்னகையுடன், "நீ படித்தவள்... உன் திறமையை நன்றாக உபயோகிக்கலாம்," என்று ஊக்குவிட்டாள்.

"அவரும் அதையேத் தான் கூறுகிறார். என்ன வேண்டுமோ எடுத்துச் செய் என்று. குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள். சில நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை நச்சு செய்கிறேன்," என்று அவளே சிரித்துக் கொண்டாள்.

"நீங்கள் கணக்கு வழக்கு பார்ப்பேள் என்றால் எனக்கே ஒத்தாசையாக இருக்கலாமே," என்று லதாவும் எப்பவும் போல் கூறினாள்.

"ஆமாம், இல்லை? நீங்களும் என்னிடம் இதை கூறியிருக்கிறீர்கள். எனக்கு தான் தயக்கம். இன்றைக்கே அவரைக் கேட்கிறேன்."

அன்று மாலை, இரவு உணவு உண்ணும் பொழுது, தான் லதாவை சந்தித்ததைப் பற்றிக் கூறினாள். "கெட்டிக்காரி," என்று வரதன் லதாவைப் புகழ்ந்தான். "கொஞ்சமாவது அவளை போல ஆக வேண்டும் என்று என்றைக்காவது நினைத்திருக்கிறாயா?" என்று மனைவியையும் விளையாட்டாக இடித்துப் பேசினான்.

"அதையேத்தான் சொல்ல வந்தேன். அவள் கடையிலேயே கணக்கு பார்க்க கூப்பிடுகிறாள்."

"நீயா! உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் அவளுடைய கடையையும் இழுத்து மூடிடுவாய்!" என்றான் அவன்.

முகம் சுளித்தாள் சுகுணா. "உங்களுக்கு என் மீது நம்பிக்கையே இல்லை."

"அப்படி இல்லைடா, கண்ணா," என்று வரதன் உடனே தன் தொனியை மாற்றிக்கொண்டான். "நீதான் குழந்தைகளை இவ்வளவு நன்றாக வளர்த்தாய், வீட்டை நன்றாகக் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நமக்கு வேற என்ன வேண்டும்? வேலைக்கு போனால்தான் திறமையா?"

சுகுணாக்கு பெருமையாக இருந்தது. "ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்."

"நீ குழந்தைத் தனமாகப் பேசுகிறாய். இனிமேல்தான் அவர்களுக்கு நீ தேவை... எதுவாக இருந்தாலும் நீ தானே பார்த்துக்கொள்ள வேண்டும்!"

ஆமாம் என்பது போல் தலையாட்டினாலும் மனதில் சந்தேகம் தொக்கி நின்றது. "இன்னும் அவர்களுடைய கல்யாணம், காட்சின்னு பார்க்க வேண்டும். எத்தனை பொறுப்புகள் உன் மீது. நான் சம்பாதிக்கிறேன், நீ பராமரிக்கிறாய்... எவ்வளவு பெரிய விஷயம் அது," என்று அவளை சமாதானப் படுத்தினான் வரதன்.

அதற்கு பிறகு அவள் லதாவை வேலையைப் பற்றி கேட்கவில்லை, அவளுடன் பழகுவதும் குறைத்துவிட்டாள். ஒரு வித சங்கோசம் என்றும் சொல்லலாம்.

லதாவும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வேலையில் மும்முரமாக இருந்தாள். பெண்கள் அவளிடம் கேட்டு பிறகு எங்கே சென்றார்கள் என்றே தெரியாமல் அவள் வாழ்க்கையிலிருந்து விலகுவது பழகிவிட்டது.

ஆசை நிராசை

Saturday, September 16, 2017

கரடுமுரடான உறவின் பாதைகள்

காயத்ரி வீட்டுக்குள் நுழைந்து, தன் பையை அதன் இடத்தில் வைத்தாள். முகம், கை மற்றும் கால்களை அலம்பிக் கொண்டு, சமையல் அறையில் நுழைந்து, இரவு சாப்பாட்டிற்கு வேண்டியதைச் செய்யத் தொடங்கினாள்.

போன் மணி அடித்தது. மாமியாருடைய நம்பர் தெரிந்தது. ஒரு நொடிக் கண்ணை மூடிக்கொண்டு, மனதைத் தேற்றிக்கொண்டு பேசுவதற்காக அதைக் கையில் எடுத்தாள்.


Tuesday, August 22, 2017

கல்லிலும் இருக்கும்

காலில் பட்டு, தூணில் இடித்து,
துள்ளிச்சென்றது ஒரு சிறியக் கல்
அதற்கும் விளையாடத் தோன்றியதோ?
அதன் உற்சாகத்தைக் கண்டு மகிழுங்கள்.

Sunday, August 20, 2017

ஊருக்கு உபதேசம்

"மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரர் தன் வண்டியை பொது பார்க்கிங்கில் விட்டிருக்கிறார்," என்று நளினி தன் கணவன் பார்த்திபனிடம் புகார் கொடுத்தாள்.

அவர்கள் வாழும் 100 வீடுகள் இருக்கும் குடியிருப்பில் பார்த்திபன்தான் செயலாளராக இருந்தான். விதிகளை அமல் படுத்தவேண்டும் என்பது அவனுடைய அழுத்தமான நம்பிக்கை மட்டும் இல்லாமல் அதற்காக அவன் எவ்வளவு கடுமையாக வேண்டுமென்றாலும் நடந்துகொள்ள ஆயத்தமாக இருந்தான். அவனைக் கண்டாலே பல பேர்களுக்கு ஆகாது என்று அறிந்திருந்தும் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

Tuesday, August 1, 2017

பூவின் பயணம்

பூங்காவில் பூத்தன பல பூக்கள்

ஓ, என்ன அழகு, என்று
ஒரு கை அதில் ஒன்றைப் பறித்தது
ஒரு விரல் ஒன்றை ஆசையில்
லேசாக வருடிப் பார்த்தது

Sunday, July 16, 2017

மெல்லத் திறந்த கதவு

"ஒரு வாரம் லீவு... சுற்றுலா போக திடீர் திட்டம்... அடுத்து ஞாயிறு சந்திக்கிறேன்..." மஞ்சுவின் மெசேஜ் வந்தது.

"நயவஞ்சகி," என்று சாரதா அவளை மனதிலேயே திட்டிக்கொண்டாள். "நேற்று வரை லீவுக்கு எங்கேயும் போகப்போறதில்லை என்று கூறி விட்டு இன்றைக்கு திடீரென்று எப்படிக் கிளம்பினாள்?" என்று முணுமுணுத்தாள்.

Friday, June 30, 2017

இறுதியில்

இந்நாள், இந்நொடி, இக்கணம்
இனிதே கிடைக்கும் நிஜ சுகம்
பத்து நிமிடம், பத்து நாள், பத்து வருடம்
யாருக்குத் தெரியும் என்ன நடக்கும்?

இப்பொழுதை வீணாக்கும் பாவம் மனம்
நாளையில் தேடும் பேரின்பம்
நேற்றைய நினைவுகளை இறுக்கமாக பிடிக்கும்
சோகமே வாழ்க்கை என்றுகூட நினைக்கும்

இந்த ஒரே நொடி வாழ உனக்கு
என்ன செய்வாய் நீ இதற்கு
எப்படி வாழ்ந்தாய் என்ற கணக்கு
இழுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கு

வாழ்க்கை அநித்தியம் என்று அறிந்தும்
மனம் வீணாக சஞ்சரிக்கும்
இறுதியில் ஒரே முடிவு எல்லோர்க்கும்
அது ஒன்றே நினைவில் இருக்கட்டும்.


Tuesday, June 20, 2017

முதல் மழை

வறண்ட பூமியில் பிளவுகள்
நரம்புபோல் ஓடும் கோடுகள்
உறுப்புகளைபோல் மண் கட்டிகள்
காணவில்லை எங்கும் நீர்ப் புனல்

வெப்பத்தில் காய்ந்த பூமி
ஒரு துளி நீருக்காக ஏங்கி
வானத்தைப் பார்த்து கைகளை ஏந்தி
மழைபெய்வதற்காக வேண்டி

காற்று மெல்ல வீச
மேகங்கள் மெதுவாய்த் திரள
கதிரவன் சற்றே இணங்க
மனதில் நம்பிக்கை வளர

முதல் மழையில் பூமி நனைய
மரங்கள் அதன் வேகத்தால் பணிய
நீர்ப் புனலில் பிளவுகல் ஒளிய
பூத்தெழுந்ததே பூமி இனிய.

Saturday, June 10, 2017

குருவே நமஹ

அவர் வகுப்பில் நுழைந்தாலே எனக்கு குலை நடுக்கம் தான். அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருந்த வால் தானே சுருண்டு காணாமல் போய் விடும். அவர் என் பக்கம் பார்க்க மாட்டாரா என்ற ஏக்கம் ஒரு பக்கம், பார்க்கும் பொழுது கண்களில் தீ பொறி தட்டினால் - ஐயோ சாமி. இதற்கு பார்க்காமலேயே இருக்கலாம், என்று தோன்றும்!

தெரிந்த பாடங்கள் கூட மறந்து போகும். "ஏண்டா, ஒன்பதாம் வகுப்புல நான் உனக்கு பெருக்கக் கற்றுக்கொடுக்கணுமா?"  என்று எல்லோர் முன்னேயும் அவர் கேட்கும் பொழுது அவமானமாக இருக்கும். என்னுடைய ஒரு வடிகால், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, கணக்கை சிரத்தையுடன் போடுவதுபோல நடித்து நான் வரையும் கேலிச்சித்திரங்கள்தான்.

Monday, May 29, 2017

எனக்குள் எழுந்தது ஒரு கேள்வி

வானத்தையே பார்த்து நின்றேன்
அதன் நீலம் தூண்டியது ஒரு கேள்வி
பூமியையே பார்த்திருக்கும் நீ
கண்டது பல பல விந்தை
கேள்விப்பட்ட வதந்திகளில்
எது பொய், எது உண்மை?

Wednesday, May 24, 2017

வெயில் காயும் நேரம்

"தோட்டக் காரனை வரச்சொன்னாயா?" ஸ்ரீதர் தன் மனைவி மனோஹரியைக் கேட்டான்.

"ஆமாம்," என்று வாச உள்ளுக்கு வந்தாள் மனோஹரி. "என்னப்பா, காலைல ஒன்பது மணிக்கு வான்னு சொன்னேன், இப்படி எட்டு மணிக்கே வந்துட்ட?"

Saturday, May 13, 2017

சுதந்திர பறவை

"ஏண்டி, தனியாகவா வெளியூருக்கு போகப்போகிற?" தாய் மஞ்சு சற்று கவலையுடன் கேட்டாள். "அப்பா ஒத்துக்க மாட்டாரே!"

"அப்பாவை சமாளிப்பது உன் பொறுப்பு! நான் படிச்சவ. படிக்க வைச்சதே நீங்கதான். இப்ப இப்படி பேசினால்? எனக்கு அசிங்கம்!" மகள் விஜி பதில் கூறினாள்.

Saturday, April 29, 2017

பிழை காலம்

தன் சுகத்திற்கு 
ஏரிகள் அடைத்தோம்
காடுகள் அழித்தோம்
நதிகளை மாசுப்படித்தினோம்

Saturday, April 22, 2017

அழைப்பு மணி

ட்ரிங் ட்ரிங் - அதன் மண்டையில் தட்டினால் அது போடும் சத்தத்திற்குத் தான் எத்தனை வலிமை! உடனே சேவகன் உள்ளே வருவான், டீ, காபி, உள்ளே இருக்கும் விருந்தாளியை வெளியே அனுப்புவது, வெளியே இருப்பவரை காக்க வைப்பதா அல்லது உள்ளே அழைத்து வரவா என்று நிர்ணயிப்பது... எத்தனை ஆற்றல் அதற்கு. அந்தப்  பெரிய இருக்கையில் அமரும்பொழுது, தன் பதவி, அதற்கு கிடைக்கும் மரியாதை... 

வீட்டிலும் தன்னைச் சுற்றி உறவுக்காரர்கள். "அண்ணே..." "மாமா..." "சித்தப்பா..." என்று எத்தனைக் கோரிக்கைகள்.

தன்னால் எத்தனைப் பேர்களுக்கு புது வாய்ப்புகள்... புது வாழ்க்கை.

சும்மா தெருவில் நடந்தாலே நாலு பேர் விசாரிப்பார்கள். கோவிலுக்கு போனாலும் சரி, கல்யாணத்திற்குச் சென்றாலும் சரி, முதல் மரியாதை அவனுக்கே.

ஆஹா, அது அன்று.

இன்றும் பெரிய இருக்கை. மணி அடித்தால் ஓடி வருவதற்கு ஆட்கள். "என்னங்க?" என்று, குரலில் தன் அலுப்பை காட்டிக்கொள்ளாமல் கேட்கும் மனைவி . அவன் மௌனமாக சைகை செய்தால், புரிந்துகொண்டு, அவன் நினைப்பது நிறைவேற்றிவிடுவார்கள். 

ஆனால், அவனால் வெறும் மணியைத்தான் அடிக்க முடிந்தது. நகருவதற்கு கூட சக்கரவண்டித்தான். "எப்படி மாமா இருக்க? ஏதாவது வேணும்னா சொல்லு," என்று ஸம்ப்ரதாயத்திற்காக கூறும் உறவினர்... நிமிர்ந்து நின்ற உடல் கூனிக்குறுகி, நெஞ்சிலிருந்து உரம் குறைந்து...

மணி அடித்து அடித்துக் கூப்பிடுவது மனிதர்களையா என்ன? 

ஆனால் மணி அடித்தால் வருவதற்கு யமன் அவன் சேவகனில்லையே!

  

Thursday, April 13, 2017

பச்சைக் கொடி, முத்துச் சரம்

 செடி கொடியை பார்த்து மகிழும் எனக்கு அதை வளர்க்கும் அளவிற்கு ஆர்வம் கிடையாது. எதுவுமே தானாக வந்தால் சரி, நான் முயற்சி எடுக்க வேண்டுமென்றால் சற்று தயங்குவது வழக்கம்.

ஒரு துளசி - எங்கிருந்தோ தேடி வரவே ஒரு தொட்டி வாங்கி வைத்தேன். நன்றாக வளர்ந்ததை பார்த்து எனக்கே ஆச்சர்யம். ஆனால் நான் பிரசவத்திற்கு என் தாய்வீட்டிற்கு சென்றபொழுது அது உயிரை விட்டது. பராமரிப்பு இல்லாமலா இல்லை அதன் காலம் முடிந்ததனாலா என்றுகூட தெரியாது.

பிறகு குழந்தைகள், பொறுப்புகள்... அவர்கள் சற்று வளர வளர, ஒன்று, இரண்டு என்று தொட்டிகள் அதிகரித்தன.

இன்று இருபதுக்கு மேல் இருக்கின்றன. செடியைப் பார்க்கும் பொழுதுதான் வாழ்க்கையில் ஆர்வம் என்பது என்ன என்று புரிந்துகொண்டேன். எனக்கு ஆர்வத்திற்கு என்றும் குறைச்சல் கிடையாது. அதைப் பற்றி சொல்லவில்லை. உயிர் என்பது எவ்வளவு ஆர்வத்துடன், பிடித்துக்கொள்ள ஒரு இடத்தை தேடி விடுகிறது. நாம் நடாத  செடி, நம் தோட்டத்தில் நட்டத்தை விட செழிப்பாக வளர்கிறது. வைத்தச் செடிகளில் பூச்சிப்  பொட்டு வரலாம், ஆனால் நடாததில்  வருவதும் இல்லை, அது வேகமாக குட்டிகளையும் போட்டு விடுகிறது.

சில நேரங்களில், நட்ட செடி போய்விட்டது என்று நினைக்கும்போது, துளிர் விட்டு மனதை குதூகலப் படுத்துகிறது.

எத்தனை விதங்கள் வாழ! குளுமை, எளிமை, அடக்கம் - இருக்கும் இடம் தெரியாமல், மௌனமாக, தன் வேலையைச் செய்துக் கொண்டு... நீர், வெயில், நிலம்... போதும்... அன்பு கிடைத்தால் இன்னும் தாங்காத சந்தோசம். வாங்குவதைவிட அதிகம் கொடுக்கும் பண்பு... பேர் கிடைக்கிறதோ இல்லையோ பூத்து குலுங்குவது பழக்கம்.

எழுந்தவுடன் என் சிறிய தோட்டத்தில் ஐந்து நிமிடம் இருந்தாலே போதும், மனதில் புத்துணர்ச்சி பெருகும்.

எதையுமே செய்ய முடியமா என்று நினைப்பது வீண். செய்து பார்த்தால் தானே தெரிந்துவிடும்.

Tuesday, March 28, 2017

கண்ணாடி

கண்ணாடியின் முன்னாடி
நான் என்னுடன் விளையாடி
என் கண்களுடன் உறவாடி
என் உண்மையென்ன என்று தேடி

அறிந்த பின்னும் அறியாமல்
பார்ப்பதெல்லாம் புரியாமல்
தவறுகள் சிலது  தெரியாமல்
அதைச் சகிக்க முடியாமல்

விழுந்தது கண்களில் திரை
நாடகம் அதில் பல வகை
தினம் ஒரு புதுக்  கதை
அதற்கும் இருந்தனர் பல ரசிகை

நிழலே நிஜமாக
பொய்யே மெய்யாக
பிம்பம்  தடுமாற
உயிர்  ஊசலாட

கண்ணாடி பொய்யாகுமா?
கண்கள் தடுமாறுமா?
கற்பனை உண்மையாகுமா?
தன்னையே ஏமாற்றமுடியுமா?

மனதும் தெளிந்தது
திரையும் கிழிந்தது
கண்ணும் கண்ணும் சந்தித்தது
புது நம்பிக்கை பிறந்தது

இதுவே நான்
நானே தான்
என் நிஜம் இதுதான்
இதில் எனக்கு பெருமைதான். 

அகமும் முகமும் ஒன்றே
நிஜத்தால் பொய்யைய் வென்றே
நம்பிக்கையுடன் முன்னே சென்றே
வாழ்வேன் இனி நன்றே 

Tuesday, March 21, 2017

நினைவுகள் விலைபோகும்

டாக்ஸியிலிருந்து மல்லிகா இறங்கினாள். வீட்டைப் பார்க்கும் பொழுது இடி விழுந்தது போல் தோன்றியது. ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் பழுது படிந்து, பாழடைந்து கிடந்தது. கண்ணில் தேம்பி நின்று கண்ணீரை மறைக்க முயன்று, டிரைவருக்குக் காசை கொடுத்து அனுப்பிவிட்டு, பெட்டியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தாள். உள்ளே தூசி படிந்திருந்தது. மூக்கை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு, பெட்டியை வாச அறையில் வைத்து, துடைப்பம் இருக்க வேண்டிய இடத்திற்கு சென்றாள். ட்ரெயினில் வந்த கிளைப்பு, மேலும் பூமியிலிருந்து எழும் தூசி... அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னாடி வர வேண்டிய அவசியமென்ன? மூத்த மகள், பொறுப்பெடுத்து பழகி விட்டது.

Saturday, February 25, 2017

இக்கரைக்கு அக்கரை - II

ருக்கு மனதில் அலைப்பாய்ந்தது . அவன் காதலித்தவளைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாததற்காக வருந்துவதா, தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுவதா, இல்லை தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயப்படுவதா?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?

Tuesday, February 21, 2017

இக்கரைக்கு அக்கரை - I

"ருக்கு, ரெடியா? எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகிறது," பட்டாபி குரல் கொடுத்தான்.

"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.

Friday, February 10, 2017

பூ கிளப்பிய புயல்

..
"பெண்கள்  பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது  அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."

Friday, February 3, 2017

கைக்கட்டு

கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!

Monday, January 16, 2017

தடை கட்டுகள்

ஆடி ஓய்ந்த சிவா என்னும் சிவகாமி வீட்டிற்குள் நுழையும் பொழுது அவள் தாய் சரளா அவளை என்றும் இல்லாத மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். அதாவது, இன்று புன்னகைத்தவிதம் மற்ற நாட்களைவிட ஏதோ காரணத்தினால் இன்னும் மலர்ந்திருந்தது போல் தோன்றிற்று சிவாவிற்கு.

அதற்கு காரணமும் இதோ, கூடவே சொன்னாள்.