Tuesday, December 30, 2014

புகலிடம்

"ஆஆ... அம்மா!" அலறினாள் பானு.

"என்னடா?" என்றுப் பதறிக்கொண்டு ஓடி வந்தாள் சந்த்யா.

"பூச்சி!" கையை நீட்டினாள் 10-வயது மகள்.

"சீ!" என்ற சந்த்யாவின் உடல் சிலிர்த்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து அதை வேகமாக அடித்துக் கொன்றாள்.

அவள் மகள் முகம் சுளித்தாள். "ஏன்தான் இவ்வளவு பூசிகள் இந்த புது வீட்ல வரதோ!"

"சுத்தி நறைய மரங்கள் இருக்கறதுனாலத்தான்!" அவள் அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். சின்னச சின்ன பூச்சிகள் இரவில் வீட்டிற்குள் நுழைவதால் ஜன்னக்கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டியிருந்தது.ஒரு முறை ஒரு வௌவால் கூட வந்து இவர்களை ஆட்டி வைத்தது. புறா மொட்டை மாடியை தன இருப்பிடமாகக்கொண்டிருந்தது. நாள் முழுக்க பறவைகளின் சச்சரவு அமைதியை கெடுத்தது.  இரவில் ஒருமுறை ஆந்தை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வந்ததை மறந்தே விட்டாளே!

இதில்  காலையில் அவர்கள் வீடு இருந்த குடியிருப்பு சமுதாயத்தில் பாம்பு பார்த்ததாக வதந்தியா நிஜமா என்று வேற தெரியவில்லை.

நகரத்தைவிட்டு தள்ளி இருக்கலாம் என்று இங்கு வந்தால் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் இடையில் வாழ வேண்டியிருக்கே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது சந்த்யாவிற்கு.

அந்த வாரமே அந்த சமுதாயத்தில் பொது சந்திப்பில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசி எப்படி இந்த உபத்ரவத்தை எப்படி சரி செய்வது என்று கலந்தாலோசித்தாள்.

தாங்கள் இருக்குமிடத்தை ஆக்கிரமித்து தங்களையே இருப்பிடம் இல்லாமல் செய்வது மட்டுமில்லாமல் உயிரையே பிடுங்கும் இந்த மனிதர்களின் உபத்ரவத்தை எப்படி சரி செய்வதென்று இந்த பூச்சிப்பொட்டுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தெரியவில்லையே! இன்று புகலிடமே இல்லாமல், சிமன்ட் தரைகளில் அவஸ்தை படும் இந்தப் பிராணிகளும் ஒரு மாநாடு போட்டால்...?

Saturday, November 8, 2014

விட விட தொடரும்

"நேரம் ஆறது. கிளம்பலாமா?" அனுராதா கணவன் சரவணனைக் கேட்டாள்.

தோழன் வீட்டிற்கு ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். "என்ன அவசரம்?" சரவணன் முணுமுணுத்தான்.

திடீறென்று ஒரு புது வரவினால் மற்றவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டா மாதிரி இருந்தது. சரவணனும் எட்டிப்பார்த்தான். அட, ஷ்ரேயாவா இது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். "காக்கா மாதிரி இருந்த நீ எப்போ கிளியா மாறின?" என்று நேராகவே கேட்டுவிட்டான்.

அவன் தோளை ஆசையாக குத்திவிட்ட ஷ்ரேயா, "நீ மட்டும் என்னாவாம்? ஒட்டட குச்சி மாதிரி இருப்ப, இப்ப நல்ல ஆஜானுபாஹுவா ஆயிட்ட?" என்று பதிலுக்கு கிண்டலடித்தாள்.

அனுராதா கண்ணை உருட்டினாள். அவர்கள் பேசும் தோரணையைப் பார்த்தால் இன்று அவர்கள் வார்தாலாபம் முடியும் என்று தோணவில்லை.

சரவணனுக்கு போரவில்லைத்தான்! ஷ்ரேயாவின் நம்பர் வாங்கிக்கொண்டான். தொடர்பு கொண்டான். சந்தித்தார்கள். நட்பு வளர்ந்தது. அது வளர வளர காதலா அல்ல ஆசையா - இனம் தெரியாத ஒன்றும் கூடவே வளர்ந்தது.

தனியாக இருக்கும் ஷ்ரேயாவின் வீடு சந்திப்புகளிற்கு சௌகரியமாக அமைந்தது. தொட தொட தொடரும் ஆசையில் சரவணன் மூழ்கினான். வீட்டில் மனைவி, மகன், அப்பா, அம்மா எல்லாரும் எதிரிகளாகத் தென்பட்டனர்.

"எங்கேயாவது போய்டலாம் வா," ஷ்ரேயாவும் தூண்டி விட்டாள். கொழும்பில் சந்தோசமாக இருக்கும் தருணம், அனுராதா - அவன் ஆபிஸ் வேலையாக பொயிருக்கிறான் என்ற நம்பிக்கையில் - மெசேஜ் அனுப்பினாள், "அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. உடனே கிளம்பி வரவும்."

அனு சந்தேகப்படுகிறாளோ? இது இவனைப் பிடிப்பதற்கு சூழ்ச்சியோ என்றுக்கூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான். அதுதான் உண்மை, தந்தைக்கு பக்கவாதம் என்று தெரிந்ததும், தலை தெறிக்க சென்னைக்கு திரும்பினான்.

அடுத்த சில மாதங்கள், அவன் வாழ்க்கை தந்தையின் உடல் நிலையை சுற்றியே அமைந்தது. அதில் ஒரே வடிகால் அவன் ஷ்ரேயாவுடன் இருக்கும் சில நேரங்கள் தான்.

அனுவோ படுக்கையில் தலை வைக்கும்முன்னே தூங்கி விடுவாள். அவள் தலையை வருடிக்கொடுக்க அவனுக்கு ஒரு சில நேரம் தோன்றும். ஆனால் கடந்த சில மாதங்களில் உறவே இல்லாததால் புதுமையாக இருந்தது. அவள் இருவருக்கும் நடுவில் தாம்பத்திய உறவு இல்லாததைப்பற்றி வருந்துவதாகக்  கூட தெரியவில்லை.

இந்த நினைப்பு வரும்பொழுது, அவள் மீது எரிச்சல் கூட வரும். பேசாமல் ஷ்ரேயாவுடனேயே போய் இருக்கலாமா என்றுகூட தோண ஆரம்பித்தது.

ஷ்ரேயாவிடம் கேட்டே விட்டான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளை உற்று நோக்கினான். "என்ன, நான் சொன்னது பிடிக்கலையா?"

"அனு தன் அலுப்ப போக்க எங்க போவாங்க?"

அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"போங்க சரவணன், வீட்டுக்கு போங்க. சந்தோசத்துல பங்கேற்பவங்கள விட கஷ்டத்துல கை கொடுக்கரவங்கதான் மேல். இந்த நேரத்துல அனு உங்க பாரத்த சுமக்கறாங்க. நீங்க அங்கிருந்து தப்பிக்க இங்க வந்துட்டீங்கன்னா உங்களுக்கே உங்க மேல மதிப்பு இருக்காது."

அவள் சொல்வதிலுள்ள உண்மையை அறிந்த சரவணன் முதலில் தன் கடமைகளை சுமக்க கிளம்பி விட்டான்.




Friday, October 10, 2014

கேள்வி எழும் நேரம்

"ஏன் இவ்வளவு கம்மி மார்க் வாங்கிருக்கே?" லக்ஷ்மி கோவமாக தன் மகளைக் கேட்டாள்.

சுவாதி வாயை இறுக மூடிக்கொண்டு நின்றாள்.

"என்ன கொழக்கட்டையா முழுங்கிருக்க? கேக்கறேனில்ல?"

அப்பவும் சுவாதி பதில் சொல்லாமல் இருக்க லக்ஷ்மி இன்னும் கோபமாகக் கேட்டாள், "மாசத்துக்கு அவ்வளவு காசு கொடுத்து ட்யுஷன் அனுப்பறேனே? வாங்கற பாதி சம்பளம் அதுக்குத்தான் போறது, தெரியுமில்ல? ஒன்ன கூட்டிட்டு பொய் வர ஒரு கார், ஒரு டிரைவர் வேற! மாசத்துக்கு இருபதாயிரமாவது உன் படிப்புக்கே போறது. அது தவிர ஸ்கூல் பீஸ் வேற. கணக்கு போட்டுப்பார்!"

"நானா கேட்டேன்?" என்று வடுக்கென்று சுவாதி கேட்டாள். பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது. "என்ன திமிரொனக்கு!"

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே, கண்ணில் பொங்கிய நீரை அடக்கிய சுவாதி எதிர்த்துப் பேசினாள், "எனக்கு நீயே வீட்ல சொல்லிக்கொடு, நான் படிக்கறேன்னு நான்தான் திருப்பி திருப்பி சொல்றேனே!"

அந்து 13-வயதுப் பெண் குரலில் தன் தாயுடன் சிறிது நேரமாவது கழிக்க வேண்டும் என்ற ஏக்கம் அந்த கோவத்தில் குமுறும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பொறுப்புகளில் அமுங்கி இருக்கும் லக்ஷ்மிக்கு கேட்டால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த சண்டை இப்படியே நீடிக்க, பக்கத்துக்கு அறையில் துணிகளை மடித்துக்கொண்டிருந்த பாக்கியம் கண்களில் நீர் ததும்பியது.

"நீ மட்டும் படிச்ச்சிருந்தன்னா எனக்கு ஒத்தாசையா இருந்திருக்கும் இல்லையாம்மா?" என்று ஊரில் இருந்த மகள் வித்யா இன்று பகல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. அவளும் சுமாராகத் தான் மார்க்ஸ் வாங்கி இருந்தாள்.

"படிச்சிருந்தாலும் இப்படி வேற ஊருல இருந்தா என்ன பலன்?" என்று பாக்கியம் அலுத்துக்கொண்டாள்.

"படிச்சிருந்தா நம்ம ஒரே எடத்துல இருந்திருக்கலாம். உன்னால என்னையும் சென்னை கூட்டிட்டு போயிருக்க முடியுமே!" என்று வித்யா கூரியப்பொழுது பெருமையாக இருந்தது.

ஆனால் தான் வேலை செய்யும்  இடத்தில் நடக்கும் கூத்தைப்பார்த்தால் சந்தேகம் எழுந்தது. படித்திருந்தால் தன் மகளுக்கு ஒத்தாசையாக இருந்திருப்போமா அல்ல தன் வேலையில்  மூழ்கி இருந்திருப்போமா என்ற கேள்வி மனதை உளைத்தது. அருகில் இருந்தும் இல்லாத தாய்மார்கள் போல் ஆகி விட்டிருப்போமா என்று தன்னையே  ஆராய்ந்தாள்.

படிப்புடன், வேலையில் பொறுப்புகளுடன், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன், தன் குடும்பத்தை பராமரிக்கவும் தன் மகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மறுநாளே லீவெடுத்துக்கொண்டு அவளைத் தேற்றி விட்டு, படிக்க ஊக்கம் கொடுத்து கிளம்பி விட்டாள் பாக்கியம்.





Thursday, August 14, 2014

கதை சொல்லும் நேரம் - Time for Stories

ஹரிஸ்ரீயில் தமிழில் கதை சொல்லவேண்டும், சொல்கிறாயா என்று கிழக்கு பதிப்பகத்தில் இருந்து என் தோழி கேட்டவுடன்,  என்று உடனே சொல்லிவிட்டேன்.



இந்த காலத்துப்பசங்களுக்கு ஒரு கதையும் தெரிவதில்லை என்ற அதே தவறான கணக்குப்போட்டேன். சரிப்பார்த்துக்கொண்ட பல கதைகள் ஒரு சில குழந்தைகளுக்கு தெரியவே செய்தது. அதனால் கடைசியில், நானே என் குழந்தைகளுக்காக கற்பனை செய்த ஒரு கதை - சபக் சபக் என்றது பூதம் என்ற கதையை சொன்னேன். அவர்கள் அதை ரசித்தது எனக்கு பத்திற்கு பத்து மதிப்பெண் போட்ட திருப்தி.

புதிதாக ஒன்றை செய்த பெருமை...

Harishree Vidyalayam needed a Tamil storyteller on the occasion of Tamil Day in their school. When my friend from New Horizon Publishing asked me if I would, as ever, I was ready.

Going with the common view that children of today do not know many of the popular tales, I prepared a few and unleashed it on them. But, a few seemed to know all of them.

Finally, I narrated the story, Chapak Chapak Goes the Ghost, which I had written for my children. The Harishree children enjoyed it thoroughly. I felt as if they had marked me ten on ten.

I felt proud at having tried something new.







Saturday, July 26, 2014

சிதறியப் பூக்கள் - பாகம் 3

"ஹாய் காவ்யா! என்ன, ஜாக்பாட் அடிச்சிருக்க போல இருக்கு?" என்று நயனா கேட்டாள். அவள் மகள் கீர்தி அதிதியின் வகுப்பில் படித்தாள். என்ன என்பதுபோல காவ்யா பார்த்தாள். "ஐ, ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கற பார்த்தயா? நீங்கெல்லாம் அமெரிக்கா லீவ்ல போறதா அதிதி சொன்னா?"

காவ்யா முழித்தாள். "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே..." கேதார் ஏதாவது உளறினானோ அதிதியிடம் என்று யோசித்தாள். "என்னடா, அமெரிக்கா போகப்போறதா சொன்னயாமே?" என்று தன் மகளை அன்றிரவு மெதுவாகக் கேட்டாள் அவள்.

"சும்மா தமாஷுக்கு" என்று அதிதி சொன்னதும் நிம்மதியாயிற்று.

ஆனால் இந்த சின்னப் பொய்கள் துளிர் விட்டு பெரிய மரமாகுவதை அவள் முதலில் கவனிக்கவில்லை. சிறிய பெரிய புகார்கள் வர ஆரம்பித்தன. வீட்டில் சண்டைகள் அதிகரித்தன. இப்பொழுது அதிதிக்கு 10 வயது. விவரம் புரிய ஆரம்பிக்கும் வயது. பொய்களின் மாளிகையோ அவள் வயதிற்கு மீறியவையாக வளரவே காவ்யா திக்குமுக்காடினாள். படிப்பிலோ சறுக்கு மரம் போல விளையாடினாள். ஒரு முறை மதிப்பெண் ஏறினாள், மறுமுறை அதள பாதாளம் தான்! படிக்க வைப்பதைவிட இமாலய மலை ஏறி விடலாம்.

அப்படி மோசமாக ஏதாவது நடக்கும் நேரத்தில் கேதார் பேசினால் அன்று முழுவதும் ஏதோ ஒரு சச்சரவு, சொல்ல முடியாத கோபம். சின்னச்சின்ன விஷயங்களிற்கு அழுகை, எரிந்து விழுதல், கூச்சல், சண்டை.

 விசாரிக்கக் கூட பயந்தாள். அதிதியை விட்டு  கேதார் தாராவிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது விஷயத்தை ஊகித்துக்கொண்டாள் காவ்யா.

அப்பவும் பெரிய மகளிடம் பேசத் தயங்கினாள். எப்படி விபரீதமாக போகமோ என்று பயந்தாள்.

ஆசிரியர்கள் அழைத்துப் பேசினார்கள். "கிளாஸ்ல கவனிக்க மாட்டேங்கறா, மத்தப்பசங்களையும் தொந்தரவு பண்ணறா."

"இந்த மாதிரி மக்கு நம்ப குடும்பத்துல இருந்ததே இல்ல. அந்த தறுதலையன் கொடுத்த சொத்து," என்று தந்தையும் சேர்ந்து தன் மகளைத் திட்டும் பொழுது உடைந்து போனாள் காவ்யா.

வேறு வழி இன்றி மகளை இது அது என்று ஏதோ விஷயங்களைத்தொட்டு என்ன பிரச்னை என்று தயங்கித்தயங்கி பேச்சைத்தொடங்கினாள்.

"அப்பா ராணி ஆண்டிய அம்மான்னு கூப்ட சொல்றாங்க. நான் மாட்டேன்னு சொன்னதுனால என்கூட பேச மாட்டேன்னு சொன்னார்," அதிதி சொல்லி முடிப்பதற்குள் தாரா அங்கு வந்தாள்.

"அம்மா, ராணி ஆன்டிய அம்மான்னு சொன்னா அப்பா என்ன அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நான் சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டேன் அப்பாவும் என்ன கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார்," என்று சந்தோஷத்தில் பூரித்துவரும் தாராவை அணைத்துக்கொள்வதா  இல்லை மடியில் சாய்ந்து விக்கி விக்கி அழும்  அதிதியை சமாதானப்படுத்துவதா என்று காவ்யாவிற்கு புரியவில்லை.

பாகம் 1
பாகம் 2





Saturday, July 19, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 2


காவ்யா குழந்தைகளை தன் தந்தை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்தாள். கேதாருக்கு அன்று மாலை தொலைபேசியில் தகவல் சொன்னாள்.

"என்ன? உன் தந்தை வீட்டிற்கா? அதான் உறவு இல்லைன்னு முருக்கிகிட்டார் இல்ல? இப்போ என்ன கரிசனம்?"

"நீங்க ராணியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரப்ப நான் எங்க போவேன்?" என்று அவள் சுட்டிக்காட்டினாள்.

"இங்கேயே பக்கத்துல எங்கையாவது வீடு பாத்துக்க. எனக்கு குழந்தைகள வாரத்துல ஒரு நாள் பார்க்கறத்துக்கு அனுமதி உண்டு. அத நான் உன் அப்பன் வீட்டில வந்து பார்க்க மாட்டேன்."

காவ்யா ச்தம்பித்துவிட்டாள். "நான் கூட்டிட்டு வரேன்."

கேதார் முதலில் மௌனமாக இருந்தான். "உங்கப்பனையே செலவுகளையும் பார்த்துக்க சொல்லு," என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

காவ்யா பிரமித்துப்போனாள். அவள் விவாகரத்திற்கு பிறகு எங்கே வாழ வேண்டும் என்ற சுதந்திரம் கூட போய் விட்டதா? தன் தந்தைக்கு உடனே விஷயத்தைச் சொன்னாள்.

அவர் கோபம் இன்னும் பயத்தைக் கொடுத்தது. "என்ன! அவன் இதை சாக்காக  காட்டி தப்பிக்க பார்க்கிறான்! நீ வா. அப்படி ஏதாவது பிரச்சன பண்ணினான்னா கோர்ட்ல பாத்துக்கலாம்."

தன் தந்தை சொன்ன வார்த்தைகள் ஆறுதலை கொடுத்தாலும், கேதார் ஏதோ திட்டத்தோடு செயல் படுவது புரிந்தது காவ்யாவிற்கு.  அவன்  ஏன் மாறிவிட்டான்?  இல்லை, அவன் எப்பவுமே இப்படித்தான். ஆனால் விட்டுக்கொடுத்து பழகிவிட்டதால் அது பெரிய விஷயமாக அப்பொழுது தெரியவில்லை. இப்பவும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பி வாழ்க்கையை தொடர்ந்தாள்.

அவன் மிரட்டினாற்போல் பள்ளிக்கூடத்தில் பணம் கட்ட மறுத்தப்பொழுது அவள் தந்தை வானம் பூமி ஒன்றாக்கி, நீதிமன்றம் மூலம் அவனை மடக்கினார். இது எப்படி பாதிக்குமோ என்று நினைத்த காவ்யாவிற்கு பதில் மறுநாளே கிடைத்தது. "அதிதி இடம் போன குடு," என்று அந்த எட்டு வயது குழந்தையை தூதாக உபயோகிக்க ஆரம்பித்தான்.

சுர்ரென்று மனதில் பொறாமை தலை எடுத்தது. ச்சீ! மகளிடம் பொறாமையா? "என்ன சொன்னார் அப்பா?" அதிதி போனை வைத்தப்பின் கேட்டாள், "ஒண்ணுமில்லை," என்று அந்தப்பெண் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பில் பூரித்து மிதப்பாள். தாய் வாய் திறந்து ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

தாயிடம், "ரொம்ப குண்டா இருக்க, அதுனாலத்தான் அப்பா நம்மை விட்டு போயிட்டார்," என்று ஒரு நாள் அவள் சொன்னதும் அதிர்ச்சியடைந்தாள். மகளிடம் சொல்லவேண்டிய விஷயமா இது? "அம்மா, நீ ஒடம்ப கொரச்சா அப்பா திரும்பிவந்திடுவாங்களா?" என்று தெனாவட்டாக போன மகள் பரிதாபமாக கேட்கும் பொழுது மனம் உருகினாள். என்ன சொல்லி இந்த பிஞ்சு மனதைத்  தேற்றி விடுவது என்று அறியாமல் தன் மகளை மார்புடன் அணைத்துக்கொண்டாள்.

பாகம் 1
பாகம் 3


Friday, July 11, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 1

செய்தால் அவளைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்று கேதார் தன் பெற்றோர்களிடம் கறாராக சொல்லி விட்டான். காவ்யா வேறு சாதிப் பெண். ஆனால் பார்க்க செக்க செவேல் என்று இருந்தாள். சுமுகமாகவும் இருந்தாள். நன்றாகப்  படித்திருந்தாள். நல்ல வேலையிலும் இருந்தாள். ஏதோ மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து தலையை ஆட்டினாள் சாவித்ரி அம்மாள்.

இதை கேட்ட காவ்யா  கண்கள் நிறம்பி வழிந்தன. "எங்க அப்பா மறுத்திட்டார்," என்று வருத்தப்பட்டாள்.

"ஓடி வந்திடு," வாய் கூசாமல் கேதார் சொன்னான். "நான் உன்னை காப்பாத்தறேன்."

எவ்வளவு மன்றாடியும் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை  என்ற நிலையில், வேறு வழி இன்றி வீட்டை விட்டு காவ்யா புறப்பட்டு விட்டாள். அழகான பூவை ஒரு ரசிகன் பறித்து ஆசையுடன் முகரும் பொழுது அந்த பூ தான் பூத்த மரத்தை எண்ணி பார்க்குமா? அல்ல, தன்னை ஆசையுடன் அங்கீகரிப்பவனை நினைத்து பூரித்து போகுமா?

காவ்யா பிறந்த வீட்டை அடியோடு மறந்து விட்டாள். அழகான புருஷன், தன்  அழகில் மயங்கிய புருஷன் என்று அறிந்து, ஒரு கொடி மரத்தைச்சுற்றி வளருவதுபோல அவனை தன் ஊன்றுகோலாக எண்ணி அவனை சுற்றியே படர்ந்தாள். இரு அழகிய மகள்கள் அவர்களுக்கு - இரு கண்மணிகளாக கருதினாள். அவள் உலகம் நிறைந்திருந்தது. திருமணம்தான் வேர், கேதார்தான் மரம், அவள் கொடி, மகள்கள் மொட்டுக்கள். அவள் மனதில் வீசியது தென்றல்.

அந்த சந்தோஷத்தில் பூரித்து போன அவள், ஒரு மரம் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாக சீண்டிய அவன், நாளடைவில்  கேலி செய்ய ஆரம்பித்தான். "ஏய் குண்டு," என்று தான் அவளை கூப்பிட்டான். அது போரடித்தால் பீப்பாய் என்று நக்கலடித்தான்.

அவளும் என்னென்னமோ எல்லாம் செய்து பார்த்தாள் ஆனால் வீட்டுப்பொருப்பு, குழந்தைகளை வளர்ப்பது - இதுவே சரியாக இருந்தது.

அவன் விலகுவது கூட தெரியவில்லையே. அவன் அவள் தோழி ராணியை புகழ்ந்து பேசும்பொழுது கூட கவனிக்கவில்லை. "அவளுக்கு குடும்பமா பொறுப்பா?" என்று சுட்டிக்காட்டினாள்.

ராணி அழகு என்று சொல்ல முடியாது ஆனால் சிம்பு போல உடல், மேற்கத்திய உடைகளில் கச்சிதமாக இருப்பாள். அடிக்கடி வந்து போவதால் வீட்டில் அனைவருக்கும் பழக்கம். "நீங்க ஏன்பா அவங்களுக்கு முத்தம் கொடுத்தீங்க?" என்று பெரிய மகள் அதிதி கேட்டாள். கேதார் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு தன் மகளை உள்ளே அனுப்பினான்.

காவ்யா அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். ஏதோ தவறு நடந்து விட்டது, மன்னித்து விடு என்று கேட்டுக்கொள்வான் என்று எண்ணியவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விவாகரத்து வேண்டும் என்று சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

"நாம மறுபடியும் ஆரம்ப..."

அவளை எதுவும் சொல்ல விடாமல் தடுத்தான். அவன் ஆசைகளுக்கு என்றும் இடம் கொடுத்து பழகியவள் இன்று மற்றும் என்ன புதுசாக எதிர்க்கப்போகிறாள்! அலுத்து விட்டதாம் அவளுடன் வாழ்க்கை. கூட நடந்தால் அக்காவா என்று எல்லோரும் விசாரிக்கராங்களாம். எப்படி இந்த வார்த்தைகளை தாங்கிக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எல்லாம் தன் குழந்தைகளுக்காகத்தான்.

ஆனால் இடி விவாகரத்தில் இல்லை, அதற்குப் பிறகுதான் என்று, ஒவ்வொரு நாளும் அவன் தயவுக்கு காத்திருந்த அவள் அறிய ஆரம்பித்தாள். குழந்தைகள் அவளிடம் வளர்ந்தன, ஆனால் அவர்களுடைய எல்லா செலவுகளையும் அவன் ஏற்க வேண்டய சூழல். பெரிய மகளினால் இந்த நிலமை என்று அவளைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைக்காத குறைதான் - கேதாருக்கு அவள் மீது அவ்வளவு கடுப்பு.

எங்கே போவதென்று தெரியாமல் நிற்கும் நேரத்தில் தந்தை வந்து நின்றார். "கேள்விப்பட்டேன். வீட்டுக்கு வா," என்று வலுகட்டாயமாக அழைத்துச்சென்றார்.

பறிக்கப்பட்டு கசக்கிபோட்ட பூ மறுபடியும் செடியில் ஒட்ட வைக்க முடியுமா?

ஆனால் தனக்காவது தன் ரணத்தை ஆற்ற வளர்த்த மரத்தின் நிழல் கிடைத்தது. தன் இரு மலர்களுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு மரம் கூட இல்லாமல் வேரோடு அறுக்கப்பட்டு அவதிப்படுவதை பார்க்க இயலாமல் தவித்தாள்.

அவர்கலையாவது   தன்னம்பிக்கையுடன் தன் காலிலேயே நிற்க கற்றுக்கொடுக்க முற்பட்டாள்.

பாகம் 2
பாகம் 3

Saturday, June 7, 2014

பாசத்தின் எல்லை

சவிதா முகத்தைச் சுளித்தாள். 'இதுதானா?' போல முகபாவம்.

அண்ணி லலிதா கவனித்துவிட்டாள். தன் கணவனைப் பார்த்தாள். அவனோ தன் தங்கை எது செய்தாலும் சரி என்று நினைப்பவன். அந்த முகபாவத்தை கவனித்தவன் ஒரு சலனமும் இல்லாமல் கேட்டான், "ஏன்டா, இது பிடிக்கலையா?"

"இல்லைண்ணா...இப்பல்லாம் டிசைனர் புடவைகள்தான் எல்லாரும் கட்டறாங்க. பட்டு..." என்று இழுத்தாள்.

"அவ்வளவுதானே? மாத்திட்டா போச்சு. இல்ல பில் எடுத்துண்டு போய் நீயே  மாத்திக்கோ." மனைவி தன்னை நோக்குகிறாள் என்று அறிந்தும் அவள் பக்கம் திரும்பாமல் வேதாந்த் மேலும் சொன்னான், "இந்த விலைக்கு தான்னு இல்லை, எந்த விலைக்கு வேணும்னாலும் வாங்கிக்க..."

லலிதா விருட்டென்று எழுந்துச்சென்றாள். அவளைப் பிறகு சமாதனம் செய்து விடலாம் என்ற நம்பிக்கை வேதாந்திற்கு இருந்தது. அவனுக்கு தன் தங்கையின் குணம் தெரிந்திருந்தும் ஏனோ அதை வேரோடு அறுக்காமல் அதற்கு தீனி போடுகிறாரே என்ற கோபம் அவளுக்கு வரும். ஒருநாள் இதுவே மனஸ்தாபத்திற்கு காரணமாகும் என்றும் அவனை எச்சரித்தாள். "போரும், எதுக்கெடுத்தாலும் நெகடிவா நினைக்காதே," என்று அவன் இவளை அடக்குவது சகஜம்.

அதனால் வேதாந்தின் தாய் மறைந்த பொழுது, அந்த வேதனையிலும் சவிதா நகைகளைபி பற்றி கேட்கும் பொழுது, லலிதாவிற்கு எந்த வித ஆச்சர்யமும் இல்லை. "எதை வேணும்னாலும் எடுத்துக்கொள்," என்று கணவன் சொல்லும்முன் அவளே சொல்லிவிட்டாள்.

"சரிதானே?" என்பதுபோல கணவனை பார்க்கும் பொழுது அவன் முகத்தில் எரிமலையாக கொந்தளிக்கும் கோபம் அவளை அதிரச் செய்தது.

"இப்போ இதுக்கென்ன அவசரம்? நாம என்ன அம்மா நகைய எடுத்துண்டு ஓடப்போகிறோம்னு நினைக்கிறாளா?" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். தன்னிடம் தான் இந்த சீறல் எல்லாம் என்று எண்ணியவளுக்கு இன்னும் பெரிய ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. "அண்ணா, அண்ணிகிட்ட சொன்னேனே, நகைய பத்தி... உன்கிட்ட சொல்லலையா?" என்று மாட்டி விடுகிற மாதிரி கேட்கும் பொழுது, 'சீ போ' போல அவளை ஒரு முரை முறைத்து, "அவளுக்கு ஊர்பட்ட வேலை, அம்மாவுக்கு சடங்குகள் செய்ய. அப்படியே மறந்தாலும் என்ன?" என்று கேட்டவன் மீது மரியாதை அதிகரித்தது. தன் தாய்க்கு எங்கிருந்தோ வந்தவள் காட்டும் அக்கறை பெற்றமகளுக்கு இல்லையா என்பது அவன் சொல்லாமல் சொல்வது தங்கை வாயை அடைத்தார் போல இருந்தது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே? அது இது தானா?






Saturday, April 19, 2014

சித்திரம் பேசாதடி - சிறுகதை

முகம் கழுவி நிமிர்ந்து கண்ணாடியில் பார்த்தாள் சுதா. அதில் கண்ட பிம்பத்தை மனதில் நிறுத்திக்கொண்டாள். அவள் முகம் நேரே தெரிய அவள் கணவன் ராஜின் பக்கத்தோற்றம் கண்ணாடியில் தெரிந்தது. அவர்குளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் தெளிவாக அவள் கண்ணை உறுத்தியது. அவர்களுக்கிடையே வளர்ந்து விட்ட இடைவெளி மனதைப்  புண்படுத்தியது.

அவன் அவள் மனதில் ஏற்பட்ட எந்த சலனத்தாலும் பாதிக்கப்  படாதவனாக தன் பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தான். இன்று ஆபிசிலிருந்து அவன் வேலை விஷயமாக வெளியூர் போய்விட்டு இரண்டு நாள் கழித்துதான் திரும்புவான். அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. தன் நாலு வயது மகன் வேதாந்தை பார்த்துக்கொள்வதே அவள் முழுநேர வேலையாகி விட்டது. பிறக்கும் பொழுதே எதோ குறைபாடு, தாமதமான வளர்ச்சி. பெரிய மகள் கல்பனாவைக்  கூட சில சமயம் கவனிக்க முடிவதில்லை. அதனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்ய முற்பட்டாள். இதில் தன்னைப்பற்றியோ தன் கணவனைப்பற்றியோ எங்கே நினைக்க நேரம்?

பாலை அடுப்பில் வைத்துக்கொண்டே மனதின் நெருப்பை தணிக்கப்பார்த்தாள். ராஜ் ஒத்துழைத்தால் இன்னும் நன்றாக சமாளிக்கலாம் என்று அறிந்திருந்தாள். ஆனால், அவள் வேலைக்கு போக இயலாத நிலையில் சம்பாதிக்கும் பொறுப்பு ராஜ் மேலே விழுந்தது மட்டுமில்லாமல், வேதாந்தின் மருத்துவ செலவு வேறே பெரிய பாரமாக இருந்தது.

"காபி ரெடியா?" ராஜ் அவள் சிந்தனைகளை உடைத்தான். அவள் காபி கொடுக்கும் பொழுது அவன் மெதுவாக சொன்னான், "நான் ஊர்லேர்ந்து வந்ததும் கொஞ்சம் பேசணம்."

"என்னோட பேசறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணுமா என்ன?" என்று சமாளித்தாள்.

"கொஞ்சம் பொறுமையா பெசணம். வேதாந்தும் கல்பனாவும் தூங்கின பிறகு...?"

கண்களில் நீர் சுருக்கென்றது. தலையாட்டினாள். என்ன வரப்போகிறது என்று யூகிக்க முடிந்தது அவளால். எப்படி அந்த இடியை தாங்கிக் கொள்ளப்போகிறாள்? எதுவாக இருந்தாலும் அவனெதிரில் தன்  இயலாமையைக் காட்டிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தாள். அவனை இந்த இன்பமில்லாத வாழ்க்கையில் சிறைப்படுத்தக்கூடாது என்று எண்ணினாள். செலவுகளை மட்டும் அவன் எப்பவும் போல பார்த்துக்கொண்டால் போதும் என்று பெருமூச்சு விட்டாள். வரப்போகிறவள் அதை அனுமதிப்பாளா?

அவனை பிரிவதில் வருத்தம் இருக்காதா என்ற கேள்வியை வேருடன் அழித்தாள். ஆனாலும் பொல்லாத மனது இன்னொருத்தி அவனை தன்னிடமிருந்து பிரிக்கறாளோ என்று நினைக்கச் செய்தது. வீண் சிந்தனை இது என்று தன் மகனைக் கவசமாக அணிந்து அவன் பராமரிப்பில் இறங்கினாள். ஆனால் இரவு மகன் உறங்கிய பிறகு, என்ன முயற்ச்சி செய்தும் தூக்கம் வரவில்லை. ராஜுடன் வாழ்ந்த இனிய நாட்கள் மனதைத் தீண்டியது, அவளை பலவீனப்படுத்தியது. அடக்கி இருந்த கண்ணீர் அருவியாக வழிந்தது.

*

அவன் திரும்பிய பின் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து உட்காருவதற்கே மணி 12. "இப்போ பெசணமா?"

அவன் மனதில் சந்தேகமே இல்லை. "அதிர்ச்சி அடையாதே சுதா," என்றான்.

இது போதாதா, அதிர்ச்சி அடைய? எதிர்பார்த்தாலும் அதிர்ச்சி அதிர்ச்சிதான். "சொல்லுங்க..." என்றாள் அரை மனதாக.

"இப்படி நாம வாழறதுல எனக்கு ஈடுபாடு இல்லை," என்றான். அவள் கண்களை தாழ்த்திக்கொண்டாள் . "கணவன் மனைவியின் இடையே உறவு - உடல் மட்டும் இல்ல, மனசளவுலையும்... நமக்குள்ள ஒண்ணுமே இல்லாம போனமாதிரி இருக்கு."

எங்கிருந்தோ ஒரு வேகம் எழுந்து, "வேதாந்த பார்த்துக்கறது நம்ப... என் பொறுப்பு."

"உன் பொறுப்பு..." அவன் மெதுவாக எதிரொலித்தான். "அப்ப நமக்குன்னு வாழ்க்கை இல்லாதது உனை பாதிக்கலையா?" அவன் குரலில் ஏதோ ஒன்று அவளைத் தயங்கச் செய்தது. அவனையே மௌனமாகப் பார்த்தாள். "நான் வேலைய ராஜினாமா செஞ்சுட்டேன்," என்றான்.

திகைத்தாள் அவள். "என்ன?"

"வேலையில் இருக்கும் பொறுப்புகளை கவனிக்கறதுல வீட்லயே விருந்தாளியா இருக்கற ஓர் உணர்வு. அதுனால சொந்தமா கன்சல்டண்டா வேலை செய்யப் போகிறேன். போன சில நாட்களா அதற்கு  வேண்டிய முயற்சி எடுத்துன்றிருந்ததுனாலத்தான் எக்கச்சக்க அலைச்சல். ஆனா இனிமே நானே ராஜா, நான் வெச்சதே சட்டம். கொஞ்ச நாளைக்கு, ஏன் நிறைய நாளைக்கு நாம ரொம்ப சிக்கனமா வாழ வேண்டியிருக்கும். ஆனா நாம மனசு வெச்சா இந்த கஷ்டத்தையும் சமாளிச்சிடுவோம். நானும் நீயும் சேர்ந்து வேதாந்தையும் பார்த்துண்டு கல்பனாக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறேன்..."

அவள் அழத் தொடங்கினாள். அவன் திகைத்தான். "என்னடா? உன்ன கேக்காம செஞ்சது தப்புதான். ஆனா நீ தடை சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். என்னால இப்படி விட்டேத்தியா வாழ முடியாது, சுதா. எது கிடைக்கிறதோ அதை வெச்சு பழைய இனிமையான வாழ்க்கைய அமைச்சுக்கலாம்னு நான் நினைக்கிறேன். நீயும் அப்படித்தான் நினைப்பென்னு தப்பு கணக்கு போட்டேனா?"

"ஐயோ இல்லை!" என்று அவன் மார்பில் விழுந்து அழத்தான் முடிந்தது. இதை அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, ஆனால் இதுவும் ஒரு அதிர்ச்சி தான் - இனிய அதிர்ச்சி. அதை புரிய வைக்க முடியுமா என்ற கவலை வீண் என்று அவன் வாரி இழைத்த முத்தங்கள் கூறின.

Sunday, March 23, 2014

குடும்பத்தில் ஒருவன்


"இன்னிக்கு லேட் ஆயிடும் ஆபிச்ல. உனக்கெப்படி? குட்டிய ஸ்கூல்லேர்ந்து பிக் அப் பண்ணிக்கறையா?" சௌம்யா ரகுவைக்கேட்டாள்.

"ஒரு கால் இருக்கு. பரவா இல்ல. வீட்லேர்ந்து நான் மானேஜ் பண்ணிக்கறேன்," அவன் ஆசுவாசம் கொடுத்தான்.

இன்றைக்கும் வெளிச்சாப்பாடுதான் என்று நொந்துக்கொண்டாள் சௌம்யா. ஆனால் காலையில் நேரம் இல்லை இரவுக்கும் சேர்த்து சமைக்க.

"நீயும் ஒரு சாதமாவது பண்ண கத்துகோயேன், சௌகரியமா இருக்கும்," என்று இரவு ரகுவிடம் பிரஸ்தாபித்தாள். அவன் முறைத்தான். "நான் என்ன சப்பாத்தியா பண்ண சொல்றேன்," என்று முகம் சுளித்தாள்.

மறுநாள் தன் தோழியிடம் இதைச்சொன்ன பொழுது, அவள் விளையாட்டாக இடித்டுக்கேட்டாள், "ஏய், ரொம்பதாண்டி உனக்கு! இவ்வளவு தூரம் ஒத்தாசையா இருக்காரே! சந்தோசப்படு. ரொம்ப ஆசைய வளர்த்துக்காதே! என் வீட்டுக்காரர்ட்ட இப்படி வேலைகள சொன்னா, பேசாம வேலைய விடுன்னு அடக்கிடுவார்."

இப்படியும் உலகம் இருக்கும் என்று தெரியாதவள் இல்லை சௌம்யா. அதனால்தான் நல்ல வேலையில் இருக்கும் அவள் தனக்கு கல்யாணமே வேண்டாம் என்றிருந்தாள். ரகு அவள் கட்டிய கோட்டையையே உடைத்து உள்ளே புகுர்ந்தது மட்டுமில்லாமல், அவள் பயப்பட்டதற்கு மாறாக, அவளுக்கு ஒரு பெரிய ஊன்றுக்கொலாக இருந்தான். அவன் சமைக்காதது அவளை ஒன்றும் பெரியதாக பாதிக்கவில்லை, ஆனால் அடிக்கடி வெளியில் சாப்பிடுவதை தடுக்கலாமே என்பதுதான் அவள் எண்ணம்.

அவன் நிஜமாகவே சமையல் கற்றுக்கொள்வான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. ஒரு நாள் காலை அவள் தாமதமாக எழுந்துக்கொண்டு பார்த்தால், அவன் அடுப்படியில் நின்றுக்கொண்டு தோசை சுட்டுக்கொண்டிருந்தான்! "நேத்து சௌம்யா ரொம்ப லேட்டா வந்து படுத்தாள். அதான் நான் இன்னிக்கு சன்டே ஆச்சே, ஒரு இனிய அதிர்ச்சி தரலாம்னு ப்ரெக்பச்ட் செஞ்சின்டிருக்கேன்னு," யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான். இவள் வருவதைப்பார்த்து, "இந்தா, சௌம்யா வந்துட்டா. நீ அவள்ட்டயே பேசு," என்று போனை சௌம்யாவிடம் கொடுத்து, 'அம்மா' என்று வாயசைத்தான்.

"சொல்லுங்க அத்தை," என்று சௌம்யா சந்தோசமாக பேச, "நன்னா இருக்குடி! என் மகன், அவன் கம்பெனில பெரிய போஸ்ட்ல இருக்கான். வீட்ல அவன சமையக்காரனாக்கிட்டயே !" என்று மாமியார் நறுக்கென்று கேட்பாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. கண்களில் நீர் பொங்கியது. அதை கவனித்த ரகு, "அப்பறம் பேசறேன்," என்று போனை வைத்தான்.

அவன் முகத்தில் எழுந்த கேள்விக்குறிக்கு அவள் பதில் என்ன சொல்வதென்றரியாமல் திணற, அவனே யூகித்துக்கொண்டான்.

"மொத்தத்துல என்னை என் வீட்லயே விருந்தாளியா இருக்கசொல்றாங்க அம்மா! இதையே அப்பா இப்படி இருக்கறச்சே, மனுஷன் இந்த வீட்ட சத்ரமா நினைக்கரார்னு ஏசிய நாட்களும் உண்டு. நீ விடு, தோச நன்னா வந்திருக்கான்னு சொல்லு," என்று பெருமையாக அவளுக்கு உபசரித்தான்.    


Tuesday, March 11, 2014

எடு பொறுப்பை - கவிதை



நமக்கு இயற்கை கொடுப்பது இயற்கையின் இயற்கை
அதற்கு திருப்பிக்கொடுப்பது நமக்கல்லவோ கடமை?
நவீன வளர்ச்சியில் அழிப்பதே மனிதனின் முத்திரை!
எவ்விடமும் குப்பைத்தொட்டிகளே, இது தரும் வியப்பை!

நீர், மண், வாயு, அக்னி, ஆகாசம்
எல்லாவற்றிலும் சேர்க்கப்படும் செயற்கை
சிறு சிந்தனையுடன் நடந்தால் வரும் மாற்றம்
இதற்கு நேரம் இல்லாமல் என்ன பெரிய வாழ்க்கை?

வசதி வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை
ஆனால் அதில் விளையும் தீங்குச் செயலை
அறிந்தும் செய்ய முயலும் உன் நெஞ்சை 
கட்டுப்படுத்திக்கொண்டால்  இல்லை தொல்லை 

சிறிய சிறிய செயல்களால் பல நன்மை
அதை கவனமாக செய்தால் வரும் மேன்மை
யாரோ செய்வார்கள் என்ற நம்பிக்கை
அதை விட்டு நீ முன் வந்து எடு பொறுப்பை.

Tuesday, February 11, 2014

ஆதர்ச தம்பதி

"என்ன!" கோமதியும் விவேக்கும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மற்ற போட்டியிட்ட தம்பதிகளின் கண்களில் பொறாமை தெரிந்தது. மனைவிமார்கள் தங்கள் கணவர்களைபார்த்து முணுமுணுத்தார்கள், "கவனிச்சாத் தானே எனக்குப் பிடிச்சது என்னன்னு  தெரியும்! வேல, இல்ல பாழாபோன நியூஸ் பேப்பர், இல்ல டிவி - இதுலயே சொழண்டுன்றிருந்தா எப்படி!"

சில கணவர்கள் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. "மக்காவே இரு! எப்போதும் சமயக்கட்டு, கொழந்தைங்க, ஊர் வம்பு...! ஒரு நாளாவது எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கவனிச்சிருக்கயா?" மனைவிகளைக் கண்டித்தனர்.

எல்லார் மனதிலும் ஒரே கேள்வி - இந்த தம்பதிகள் மட்டும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்! ஒரு கேள்விக்குக்கூட தவறாக  பதில் சொல்லவில்லையே!

பரிசு வாங்கிக்கொண்டு கோமதியும் விவேக்கும் வெளியேறினார்கள். மற்றவர்கள் முன்னிருந்த புன்னகை மறைந்தது. "இது நமக்கு இப்போ தேவையா?" விவேக் அலுத்துக்கொண்டான்.

"எல்லாம் உங்க வேலைதான்!" கோமதி நறுக்கென்று பதிலளித்தாள். "இப்போ இந்த தம்பதிகளுக்கான விடுமுறை பரிசுத் தொகைய என்ன செய்யறது? உங்க தங்கச்சிக்கு வேணும்னா குடுத்துடுங்க," என்ற கேள்வியும் கேட்டு பதிலும் சொன்னாள்.

விவேக் மௌனம் சாதித்தான். திடீரென்று ஏதோ தோணி நகைத்தான். "நம்ப எந்த விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுவோமோ, அதையே வெச்சு கேள்விகள் வந்தது ஆச்சர்யம் தான்."

கோமதியும் சிரித்தாள். "இல்லன்னா உங்களுக்கு என்ன தெரியும் என்னப்பத்தி."

"குத்திக்காட்டணமா இப்போ? அதுதான் பிரியறதுன்னு முடிவு செஞ்சிட்டோமே!"

"என்னமோ நான் மட்டும் தான் டிவோர்ஸ் கேட்டா மாதிரியும், உங்களுக்கு ரொம்ப என் கூட குடும்பம் நடத்த இஷ்டம் போலவும் சொல்லாதீங்க!" எச்சரித்தாள் கோமதி.

'உன் தொல்ல தாங்காம கேட்டேன்னு' சொன்னால் வண்டியிலேயே கொன்றுபபோட்டு விடுவாள் என்று அறிந்த அவன் வாயை மூடிக்கொண்டு கோமதியை அவள் பிறந்த வீட்டில் விட்டு விட்டு, "லாயர் இன்னும் ஒரு மாசத்துல டிவோர்ஸ் வந்திடும்னு சொல்லிட்டார்," என்றான். "அப்போ இந்த விடுமுறைப் பரிச என் தங்கைக்குக் கொ டுத்துடட்டுமா?" என்று கேட்டு, அவள் அனுமதிபபெற்று கிளம்பினான்.



Friday, January 10, 2014

அழகைத்தேடி

சுவாமியும் ரமணியும் அந்தப் பெண்ணையே பார்த்து நின்றனர். கண்ணைப் பறிக்கும் பளிச்சென்ற நிறம், தீர்க்கமான முகம், மெல்லிய உடல், நீளக் கருநிறக் கூந்தல் - வைத்த கண் வாங்காமல் அவர்கள் மட்டும் இல்லை, இன்னும் பலர் அப்படித்தான் மெய் மறந்தனர்.

"டேய், கல்யாணம் பண்ணிண்டா இவளதாண்டா," சுவாமி சபதம் செய்தான்.

சில மாதங்களில் அவன் தன் சபதத்தின் பாதியை அடைந்து விட்டான் - ரமணியிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டான், "ரமாவும் நானும் ஒரு கபுள் டா."

"எப்படி டா! எப்படி வலைல சிக்க வெச்ச?" ரமணி சுவாமியை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ஒரு மாதம் தான் ஆகியிருந்தது

"வலை இல்லைடா! அப்படில்லாம் துச்சப்படுத்தாத!" சுவாமி எச்சரித்தான். "ரமாவும் நானும் பல தடவ சந்திக்க நேர்ந்தது. அவ பாக்கறதுக்கு எவ்ளோ அழகோ, மனசும் அவ்ளவு சுத்தம். பூ மாதிரி..."

"குடுத்து வெச்சவண்டா..." ரமணி பெருமூச்சு விட்டான்.

சுவாமி அவனை தட்டிக்கொடுத்தான். "உனக்கும் யாராவது கிடைக்காம போக மாட்டா."

சுவாமியுடைய போன் அடிக்க, ஜன்னலோரமா அவன் போய் மெதுவா பேச, ரமாவிடமிருந்துதான் கால் என்று புரிந்து, நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறினான் ரமணி.

நல்ல நண்பன், தன் காதலிக்கு தன்னை அறிமுகப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பு நாளாக ஆகக் குறைந்து வந்தது. "என்னடா, நம்பிக்கை இல்லையா?" என்று அப்பட்டமாகக் கேட்டேவிட்டான், ரமணி.

"அப்படி எல்லாம் இல்லடா. எத்தன நாள் தாக்குப் பிடிக்கும்னு தான் தெரியல."

"ஏன்டா?" ரமணி தன் நண்பனின் சுரத்தில்லாத குரல் கேட்டு அவனை உற்றுக் கவனித்தான். "எல்லாம் சரிதானே?"

"ம்ம்ம்..." என்று மழுப்பிவிட்டான் சுவாமி.

நாளடைவில் தன் நண்பன் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. ரமாவுடனும் நேரம் கழிப்பதாகத் தெரியவில்லை. "ரமாவ பத்தி வீட்ல சொல்லிட்டயா?" என்று கேட்டான் ரமணி.

சுவாமி வெகு நேரம் பதில் சொல்லாதது போல இருந்தது ரமணிக்கு. தான் நோண்டுவானேன் என்று எண்ணி வேறு எதையோ பேச ஆரம்பித்த பொழுது சுவாமி தடுத்தான். "எங்களுக்கு ஒத்துப்போகவில்லை, அதனால நான் ரமாவோட பிரியறதுன்னு முடிவு பண்ணிட்டேன்."

ரமணி ஸ்தம்பித்து நின்றான். "தேவதை போல இருக்கற பொண்ண..."

"தேவதை... தேவதைதான். ஓவியமா இருந்தா மணிக்கணக்கா பாத்துட்டிருக்கலாம். வீட்ல மாட்டிக்கலாம், கழுத்துல இல்ல."

"புரியல," ரமணி திணறினான். "மர்மமா இருக்கு நீ சொல்றது."

"வாயத்திறந்தா பொலம்பல் தான். மொதல்ல நன்னாதான் இருந்தது. ஹீரோ மாதிரி தோணித்து. அபலைப் பெண்ணக் காப்பாத்தர வீரன் மாதிரி தோணித்து. இப்போ விட்டா போரும்னு இருக்கு." சுவாமி அவனைத் திரும்பிப் பரிதாபமாகப் பார்த்தான்.

சுவாமி அனுபவத்துல கற்றுக்கொண்ட பாடத்தை ரமணியுடன் பகிர்ந்துக்கொண்டான் - "அழகு முகத்தில் மட்டும் இல்லடா... வாழ்க்கைய ரசிக்கரதுலையும் இருக்கு. ரமா அழகுதான் ஆனா எத எடுத்தாலும் ஒரு நெகடிவ் ஆட்டிட்யூட். என் நிம்மதியே கெட்டுடுச்சுடா. சிரிக்கவே மறந்துட்டேன்!"

"என்ன சொல்ல வர?" ரமணி கேட்டான். "அழகான பொண்களப் பாத்தா நீ தூர ஓடப் போற?" என்று கிண்டலடித்தான். "எனக்குக் காம்பெடிஷன் கொறஞ்சுது..."

சுவாமி சிரித்துக்கொண்டே சொன்னான். "ரொம்ப சந்தோசப்படாத! சபதம் விடறதுக்கு முன்னாடி யோசிக்கப் போறேன்னு சொன்னேன்!"

சுவாமி பல நாட்களிற்குப் பிறகு பழைய கலகலப்புடன் இருப்பதை கண்டு ரமணி நிம்மதி மூச்சு விட்டான்.