Sunday, January 20, 2013

வறட்சி

நிரம்பி வழியும் குடம், அதில்
தேங்கி நிற்கும் நீர்
புதுமைக்கு இடமில்லை
பழமையே ஓங்கி நிற்கும்

குடத்தை உடைத்தாலோ
அழுகிய நீர் மண்ணில் கலக்கும்
ஆனால் எதில் மீண்டும்
நிரப்புவது புதிய நீரை ?

பானை நீரை வடித்து
காய வைத்து செய்வோம் தயார்
மனமென்னும் குடத்தை
நிரம்பி வரும் புது சிந்தனைக்கு



Saturday, January 12, 2013

பொங்கல் தினத்தன்று சில சிந்தனைகள்

கதிரவன், மழைமேகம், செம்மண் கூடி
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று

விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்

நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை

எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
 

Friday, January 4, 2013

பொருளாதாரம் தரும் சுய-நம்பிக்கை

ஒரு பெண் முதலில் தன் தந்தையின் பாதுகாப்பிலும் பிறகு கணவன் அல்ல மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவள் என்ற ஒரு நிலைமை இருக்கும் வரை அவளை ஒரு பொருளாகவும், ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகவும் தான் கருதப்படுவாள். அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவளுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களின் மரியாதையும் கிடைக்கும். இதையே சமூக சேவகர்கள் சொல்லி வருகிறார்கள். இதையே பாண்டிச்சேரியில் என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு சமூக சேவை நிறுவனம் பெண்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து,தேவையான உதவியும் கொடுத்து வருகிறது. பல பெண்கள் தன் தொழிலில் நிபுணர்களாக இருப்பதால் அவர்களை மற்றவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பதற்கு அந்த ஊர் அரசாங்கம் அவர்களை அழைத்து அவர்களுக்கு சம்மானமும் கொடுக்கிறது. சிறு தொழில்கள் தான். ஆனால் அதில் வரும் வருமானத்திலிருந்து தன குடும்பத்தையும் காப்பாற்றி அந்த தொழிலை வளர்க்கவும் செய்கிறார்கள். இதனால் அந்த பெண்களின் சுய நம்பிக்கையும் அதிகரித்து அந்த பெண்கள் இன்று அவர்கள் கிராமங்களில் பல மற்ற சமூக வேலைகளில் ஈடுபட்டு மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன் பெண்களை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கை இந்த தாய்மார்களில் வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு பாரதத்தின் எல்லா கிராமங்களிலும் வந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் ஆண்களிலும் பெண்களைப்பற்றின அபிப்பிராயம் மாறி பெண்களிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இயல்பாகவே வந்து விடும் அல்லவா? இதற்க்கு நாம் வேண்டிய முயற்சி செய்வோமே.