Thursday, December 5, 2013

சுமைதாங்கி

ரொம்ப அழகான வீடு. சுற்றி மரங்கள். மான்கள். கிளி, மரங்கொத்தி, மைனா, பாம்பு என பல விதமான பக்ஷிகள். ஓ, பாம்புகூட சொன்னேன், இல்லை? ஆமாம, பாம்பு, கீரிப்பிள்ளை...

இவை இருப்பதைப்பற்றி அக்கரைக்கூட இல்லாமல், அங்கே தீவிரமாக கட்டட வேலை நடக்கிறது. நம் சௌகரியத்திற்கு தான்! மெட்ரோ ரயில்.

இத்தனை நாட்களாக வெறும் மேலோட்டமாகத்தான் வேலை. ஆனால் இப்பொழுது, தீவரமாக பயிலிங் வேலை நடக்கிறது.

கோவம் கோவமாக வரது. போட்டு பூமியை இப்படி யாராவது தாக்குவாங்கள? மரங்களை இப்படி வெட்டுவாங்களா? மனித ஜன்மம் உருப்படுமா?

ஆனால் அதே மனித ஜன்மத்தில் நானும் ஒன்று. வீடு வேண்டும் என்று வாங்கும் பொழுது, ஏதோ ஒரு மரத்தை வெட்டித்தான் கட்டியிருப்பார்கள். அஸ்திவாரம் போட பூமியை தோண்டியிருப்பார்கள், பயிலிங் செய்திருப்பார்கள். அப்பொழுது எழாத அக்கறை இன்று நாமும் பாதிக்க படுவோமோ என்ற நேரத்தில் தான் எழுகிறது.

ஆனால் எதையும் தாங்கி இன்னமும் கொடுக்க தயாராக இருக்கிறது உண்மையான சுமைதாங்கி பூமி.

Friday, November 15, 2013

மறக்க முடியுமோ? - சிறுகதை

"எங்க இந்த பக்கம்?" நித்யா தன் தோழி காந்தாவைக் கேட்டாள்.

"ரவிய பார்க்க வந்தேன்."

"ரவியா?" நித்யாவின் புருவம் சுருங்கியது.

"ஞாபகமில்லையா? நம்ப காலேஜ்ல படிச்சானே? எல்லாத்லையும் பர்ச்ட்... ரொம்ப சமத்துன்னே சொல்லலாம்."

"ஓ! அவனா? இங்க பக்கத்லையா இருக்கான்?"

"இல்ல, அமெரிக்காலதான் இருக்கான். இங்க எதோ வேலைன்னு வந்தான்... நீ அவனோட டச்ல இல்லையா?" காந்தா வினவினாள் .

நித்யா இல்லையென்று தலை அசைத்தாள்.

"ஒங்க ரெண்டு பேருக்கும் தானே எப்பவுமே போட்டி?" காந்தா நகைத்தாள்.

"அதெல்லாம் அந்த காலம். இப்போ அதெல்லாம் மறந்தே போச்சு."

காந்தா  அரை மணிநேரம் இருந்து விட்டு கிளம்பினாள். தன் முகத்தில் பழைய ஞாபகங்கள் நடத்தும் போரை எப்படி மறைத்தாள் தன் நீண்டநாள் தோழியிடம் என்று நித்யாவிற்கு தெரியவில்லை. இன்னும் ஒரு நிமிடம்கூட தாக்கு பிடித்திருக்க முடியாது.

போட்டியிடுபவரிடமே மனதையும் பரி கொடுத்திருந்தாள் நித்யா. ஆனால் அந்த சமுத்தோ அவள் ஜாடைமாடையாக வெளிப்படுத்திய எந்த துப்பையும் புரிந்துகொள்ளவில்லை. காலேஜ் முடிந்து எங்கு மறைந்தானோ! அந்த ஏக்கத்தை மட்டும் இவளிடம் ஒப்படைத்திருந்தான். அது இன்றும் மனதை வாட்டியது. இப்ப காந்தா அதை மறுபடியும் தூண்டி விட்டுச்சென்றாள்! அவன் நம்பரை வாங்கிக்கொண்டிருக்கலாமோ என்ற கேள்வி மனதை வாட்டியது.

வாச பெல் அடித்தது. "அம்மா" என்று அந்த சிறுவன் இறுகக்  கட்டிக்கொண்டான்.

"என்னடா ரவி, இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ணின?" என்று கேட்கும் பொழுது அன்பு பொங்கியது - தன் மகன் மேல் மட்டுமல்ல.



Friday, October 18, 2013

தேவி வந்தனம்

மனதில் நிறைந்தாய் வலிமையாக
எதையும் எதிர்க்கும் சக்தியாக

நாவிலிருந்தாய் இனிமையாக
மென்மையான வாக்தேவியாக

நாட்டில் படர்ந்தாய் செழிப்பாக
இன்பமளிக்கும் மெய்ப் பொருளாக

உன்னை வணங்கும் ஏழை எனக்கு
வாரி வழங்கம் அன்னை நீயே

கர்வமெனும் அரக்கன் எழுமுன்
சீறி எழுந்தாய் பத்ரகாளியாக

தாயே உன் திருவடியில் கிடக்க
என்றும் அருள்வாய் முத்தேவியாக. 

Sunday, September 22, 2013

பெயரில்லாத ஒரு ஜீவன் - கவிதை

என் வீட்டின் மிக அருகில்
வளரும் ஒரு பெரிய மரம்
பெயரோ குலமோ அறிவதற்கு
என்ன பெரிய சாதனை செய்தாய்?

பல மரங்களில் அதுவும் ஒன்று
பிறந்து, வளர்ந்து, மறையும் இது
இதற்குப்போய் ஒரு கவிதையும்
நம் நேரத்தையும் வீணடிப்பதா?

ஒரே நொடியில் அழித்துவிட
ஒரு தீட்டிய கோடாரி போதும்
அதன் அழிவை வருந்துவதற்கு
எந்த ஜீவனும் இங்கே அன்று

இதை நினைத்து முடிப்பதற்குள்
பறந்து வந்தது ஒரு மரங்கொத்தி
கிளி, காகம், புறா என்று
அதில் வாழும் வாழ்வு பல

அந்த மரத்தில் வாழ்பவர்க்கு
அந்த மரமே ஒரு உலகம் அன்றோ?
அதற்கு வரும் துன்ப இன்பம்
அவைகளுக்கும் அதில் பங்குண்டோ?

பறவைகளுக்கு உணவு அதில்
கூடு கட்டி வாழ இடம்
பாம்பு ஒளிய அது புகல்
மழையில் வெய்யிலில் கிடைக்கும் நிழல்

இப்படி அதற்கு பொறுப்புகள் பல
தன்னைப் பற்றிய கவலை இல்லை
கடமை என்ற ஒரே கருத்தில்
'நான் நான்' என்ற பீத்தல் இல்லை

இருப்பதும் இறப்பதும் அவன் கையில்
பேரும் புகழும் விதியன்றோ?
தன்னிடம் இருப்பது நேர்மையொ ன்றே
உண்மையாக உழைத்திடுவோம்.


Saturday, August 24, 2013

உள்ளே வெளியே: கவிதை

பார்க்க என்ன அழகு
ஒன்றை போல மற்றொன்று!
சிறிய பெரிய வேற்றுமை
சில கருப்பு, சில வெள்ளை

கவனித்தால் இன்னும் பல
நுணுக்கங்கள், கோணங்கள் சில
கண்ணைப் பறிக்கும் ஜொலிப்பு ஒன்றில்
மனதை துளைக்கும் இருட்டு மற்றொன்றில்

ஏழ்மை, செழுமை எனப் பல எதிர்ச்சொற்கள் 
மனிதன் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள்
ஆண் பெண் என்ற பிரிவினையால் 
ஊசலாடுகிறது மனிதாபிமானமாம்

வெளியில் ஒரே ஆடைஎன்றாலும்
உள்ளே நடக்கும் போர்கள் வெவ்வேறு
அதில் விளங்கும் நன்மை தீமையில்
எரியும் மனித இனம் பல்வேறு

Tuesday, August 6, 2013

பாசம் - சிறுகதை

"என்ன ஜொலிக்கர?" பவானி அகிலாவைப் பார்த்துக்கேட்டாள்.
"புது வைரத்தோடு" என்று பெருமையுடன் அந்த சிறியத் தோடை காட்டினாள் அகிலா. "என்னோட சண்ட போட்டார். அதுக்கு சமாதானமா," என்று சிரித்தாள் அவள்.
"ஓ! சண்ட போட்டா இதெல்லாம் கடைக்குமா?"
அகிலா சிரித்துக்கொண்டே, "நானும் தான் வாங்கிகொடுத்தேன், ஒரு ஸ்மார்ட் போன்."
பவானி ஆச்சர்யத்தில் பார்த்தாள். "பலே! அப்ப நறைய சண்ட போடுவயா?"
மறுபடியும் ஒரு சிரிப்பு. "அப்படி இல்ல. ஆனா சண்ட போட்டா, சமாதானம் இப்படித்தான்."
அதற்குள் அங்கு நித்யாவும் வந்து விட்டாள். "எங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு ஜாடமாடையா சொல்லிப் பார்த்தாலும் இதுக்கெல்லாம் மனசே வராது. வெறும் ஹொடெல்ல போய் ஒரு வேள சாப்பாடுதான் அவர் செய்யற சமாதானம்."
பவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. பேச்சை மாற்றி வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் சண்டை நடக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கிட்டுக்கொண்டாள். வேலை மும்முரத்தில் அதையும் மறந்தாள்.
ஒரு வாரமிருக்கும். பலமான சண்டை, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில். யார் ஆரம்பித்தார் என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் முடிப்பதாகவும் தெரியவில்லை.
ஒரு மாதிரி சத்தம் அடங்கியதே தவிர, ஆத்திரம் அடங்க வில்லை. நேரம் ஆக ஆக, அதுவும் சிறிது சிறிதாக தணிந்தது.
 அவள் சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவன் அருகே வந்து அவளுடைய இடையை பிடித்து தன்னுடன் அணைத்துக்கொண்டான். அவள் வேண்டுமென்றே முகத்தை சுளித்துக்கொண்டாள். "என்னடா," என்று அவன் அவள் கன்னத்தில்  முத்தமிட்டான். சிணுங்கினாள், அவன் தோளில் சாய்ந்தாள், காதலில் மெய் மறந்தாள்.
மறுபடியும் அகிலாவை இரண்டு நாள் கழித்துப்பார்த்த பின்புதான் தான் கணக்கிட்டது ஞாபகத்தில் வந்தது.
ஆனால் அந்த முத்தத்தில் கிடைத்த திருப்தி பொருளில் கிடைக்குமா?  தான் போட்டது தப்பு கணக்கு. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏது விலை?
  

Friday, July 19, 2013

நமக்கும் ஒரு பொறுப்பு

ஹிந்து பத்திரிகையில் ஒரு நல்ல முயற்சி - நம்மூரில் உள்ள சாலைகளில் நடைபாதை இல்லாததையும், இருக்குமிடங்களில் பயனற்றவையாக இருப்பதை படம் பிடித்து அனுப்பித்தால், அதை பரசுராம் செய்து, அரசை அதற்கு வழி செய்ய ஒரு முயற்சி.

ஆனால், சாலையில் எதுக்குமே வழி இல்லை. இதற்க்கு சாலை பற்றாகுறை ஒரு காரணம் என்றால், அதை உபயோகிக்கும் விதம் இன்னொன்று. சாலை விதிகளை மீறும் வண்டி ஓட்டுனர் இருக்கும் வரை எந்த ஒரு முயற்சியுமே வீண் போகும். வெறும் யந்திரங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்தால் போதாது. நமது நாட்டின் மனோ பக்குவத்தை புரிந்து கொள்ளும் நாம் அதையும் மனதில் வைத்து, அதற்கேற்ப விழிப்பையும் ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பொழுது இருக்கும் சாலைகளை சரியாக உபயோகித்தால் தான் இன்னும் புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

இன்று தமிழ் அரசு பல விழிப்பு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது. சாலை பிரயோகத்தையும் தன் முயற்சிகளில் தீவிரமாக சேர்த்துக்கொள்வது முக்கியம்.

கூடவே, நாமும் படித்த முட்டாள்களாக இல்லாமல், வண்டி நமது ராஜ்யம், மற்றவர்கள் நமக்கு வழி விட வேண்டியவர்கள் போல் நடந்து கொள்ளாமல் பொறுப்பாக நடக்கக்கடமை பட்டிருக்கோம்.

ஓ, இன்னொரு விஷயம். பெண் ஒட்டுனரைப்பார்த்தால் ஹார்ன் அடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். அவர்களை பின் தள்ளி நாம் எவ்வளவுதான் முன்னால் சென்று விட முடியும், இந்த மூச்சு முட்டும் சாலைகளில்?

Saturday, June 22, 2013

வயது ஒரு தடை அல்ல

இன்று நம் நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை (ஊழலைத்தவிர), முதியோர்களின் வாழ்க்கைத்தான். மகன், மகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில், இங்கே அவர்கள் தனிமையில் போராடுவது தான்.

ஆனால் இதை கேட்கும் பொழுது சில நேரங்களில் ஆச்சரியமாகவும் இருக்கும். தன் பிள்ளைகள் கூட இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை ஏன் வருத்ததுக்குரியது ஆகி விடுகிறது? 

இப்படி தான் வயதானவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிரார்களா?

ஆனால் இல்லை. எல்லோர் வாழ்க்கையும் அப்படி ஆவதில்லை. ஒரு சிலர் தனக்கென்று சில ஹாப்பீஸ் வளர்த்துக்கொள்கிறார்கள்; தனக்கென்று சில விதிகளை நியமித்துக் கொள்கிறார்கள். 'உனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தேன், இப்போ நீ எனக்காக வாழ வேண்டும்' என்று தன மக்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு 87 வயது பெரியவரை சந்தித்தேன், அவருடைய  சரித்திரம் எழுத. 70 வயதில் தன் மகன்களுடன் சேர்ந்து ஒரு நகை கடை ஆரம்பித்து அதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். தன் மதத்திற்காக, சைவ உணவை பரப்புவதற்காக, சமூகத்தில் நன்மை வளர்வதற்காக, ஆர்கானிக் உணவு வளர்வதற்காக  என்று பலவிதமான சமூக நல வேலைகளில் இந்த வயதிலும் அவர் மும்முரமாக ஈடு படுகிறார். மகனுடன்தான் இருக்கிறார் என்றாலும், தன்னால் எவருக்கும் தொல்லை இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக தன்னை அர்பணிக்கிறார்.

இது மற்றவர்களுக்கு சாத்தியமில்லையா? நல்ல படிப்பு, ஓரளவுக்கு மதிப்பு உள்ள வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வயதான காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துகாட்டு.

இவருக்கு சமீபத்தில் சோடியம் குறைந்ததால் அவ்வப்பொழுது மயங்கி விழுவாராம். இவருடைய ஒரு நுரையீரல் தான் வேலை செய்யும். முப்பது வயது ஆவதர்ர்க்குல்லேயே ஒன்றை எடுக்க வேண்டி வந்தது. காது சரியாக கேட்காது. மனைவி இல்லை, இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. பெரிய மகனையும் இழந்திருக்கிறார்.

தனிமை, வயது, இழப்புகள் - இவை எதுவுமே நாம் செய்ய வேண்டியவற்றிற்கு தடை இல்லை என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

Thursday, June 6, 2013

மரம் கேட்கிறேன்

இன்று ஒரு தகவல் - விறகிற்க்காக மரங்கள் வளர்க்கப்பட போகின்றனவாம். கேட்க நன்றாகத்தான் இருக்கு, ஆனால் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு.
எங்கிருந்து வந்தேன் நான்? விதை பூமியில் தானே விழுந்து, வானம் பொழிந்து நீர் பாய்ச்சி, சூரியன் வெளிச்சம் கொடுத்து, காற்று ஸ்வாஸமாக மாற...
எதையும் எதிர் பார்க்காமல் வளர்ந்ததுமற்றும் அன்றி, ஜீவன் அத்தனைக்கும் அடைக்கலம் கொடுத்து, பூமித்தாயின் கைகளாகி, அனைத்தையும் என் கரங்களால் அறவணைத்து...
காற்றை சுத்தப்படுத்தி, நீரை பூமியில் இறக்கி, கொடும் வெய்யிலை தடுத்து குடையாகி...
உண்ட உணவு, ரசிக்க மலர்கள், இப்படி பலவற்றை உலகத்திற்கு அர்பணித்து...
என் இறப்பில் கூட பல பயன்கள் - விறகு, கட்டை, பிரம்பு - ஏன், காகிதம் கூடத்தான்!
இப்படி வாழ்விலும் சாவிலும் பயனையே அளிக்கும் என்னை இறக்கம் இன்றி அழித்து இன்று தவிப்பதுகூட தெரியாமல் வாழும் மனிதனே!
காற்றிற்கு விலை பேசி, அழ்காய் பாக்கேஜ் செய்திருந்தால் எனக்கு இன்று இந்த கதி வந்திருக்காது அல்லவா?
எதையும் விலை போடும் மனிதன் இருக்கும் வறை என் மதிப்பு என்ன?

Friday, May 31, 2013

என்ன வழி?

நான் படிக்கும் காலத்தில், வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் நீர், உணவு, கூரை என்று சொல்லுவார்கள். இன்று கேட்டாலோ, செல் போன், ஐ-பாட், கம்ப்யூட்டர் - இதுதான் தேவை என்று சொல்கிற காலம் வந்துவிட்டது.

நீர் நிலையை நினைத்தாலோ, வயிற்றை கலக்கிறது. தண்ணீர் கிடைப்பதே அற்புதம் அதில் சுத்தமாக இருந்தால் போனஸ். உணவு - மருந்தாக இருந்தது விஷமாக மாறி விட்டது. கூரை ஒன்றுதான் ஏதோ சில பேர்களுக்காவது கிடைக்கிறது.

பொருளாதார வளர்ச்சி நமக்கு பல விஷயங்களை விரல் நுனியில் கொண்டு சேர்கின்றன. ஆனால் இதெல்லாம் இருந்தும், நமது மூன்று அடிப்படையான தேவைகளும் இன்று முழுமையாக நிறைவேறவில்லை. இதற்க்கு வழி என்ன? 

Tuesday, May 14, 2013

கையளவு சிறிய மனசு - கவிதை

கையளவு சிறிய மனசு 
அதில் வானத்தையும் விட 
அதிக  ஆசை
பரந்த வெளியில் வீசும் 
அந்தக் காற்றை  ஈர்த்து 
கட்டுப்படுத்தும் தேஹம் 

உலகெங்கும் ஓடும் நீர் 
அதைப் பானைபோல 
அடக்கும் இந்த மண்ணுடல் 

சடலத்தை எரிக்கும் 
அதே தீயில் எரியும் 
இந்த பூபோன்ற நெஞ்சம் 

உலகத்தையே அடக்கும்
இந்த உடலையே ஆட்டும்  
அந்த கையளவு சிறிய மனசு 

Sunday, April 28, 2013

வாழக்கை சக்கரம் - கவிதை

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்?

காலம் மாற மாற
பழமை உதிர்ந்து விழ  
முடிந்ததோ வாழ்க்கையே 
என்ற ஐயம் மெல்ல எழ 

நாற் புறமும் வெறிச்சிட   
சூன்யமும் நிசப்தமும் 
மூச்சே நின்றுவிட்டதோ 
என்ற பயம் சூழ 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

இந்த பசுமை 
எங்கும் பரவ 
என்றும் நிலைக்கும் 
என்ற நம்பிக்கை  தோன்ற 

அதை ஒழிக்கும் பொருட்டு 
வாழ்க்கை தளர 
சக்கரத்தை சுழட்டும்  
கை எது என்று கேட்க 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

Friday, April 19, 2013

சோதனை - சிறுகதை



"அங்க என்ன செய்யற?" அம்மா மகளைக்கேட்டாள்.
ஐந்து வயது மகள், தன் பிஞ்சு போல் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளயாடிக்கொண்டிருப்பதை பார்த்து திரும்பிய அவள், ஏதோ கண்ணை உறுத்த உற்று கவனித்தாள்.
அந்த பொம்மையின் காது, மூக்கு, வாயில் எல்லாம் ஏதோ ஒரு சிறிய பொருள் சொருகி இருந்ததது. அந்தச் சின்ன்ப்பெண் அந்த பொம்மையின் கால்களுக்கு இடையே எதையோ சொறுகப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன செய்யற?" என்று மனம் படபடக்க அம்மா கேட்டாள்.
"பக்கத்து வீட்ல புதுசா வந்திருக்கர அங்கிள் இந்த வெளயாட்ட சொல்லிக்கொடுத்தாங்கமா. ஆனா இந்த பொம்ம சரியா இல்ல. இந்த சின்ன ஊசிக்கூட உள்ள போக மாட்டேங்குது பாரேன்!"
அம்மா மெதுவாக உட்கார்ந்து  "நீ ஒன் வயசு பசங்களோட மட்டும் தான் வளயாடணம், சரியா?"
"அந்த அங்கிள் தான் கூப்படறாம்மா. என்க்கும் பிடிக்கல. ஆனா புதுசா ஏதாவது கத்துக்கறச்ச அப்படித்தான் இருக்கும்னு சொன்னார். அப்படியாமா?" அந்த குழந்தை சொல்லும்பொழுது விம்மிக்கொண்டு அழுகை வந்தது.
தன் மகளை காப்பாற்றி விடுவாலள் அவள். ஆனால் மற்ற குழந்தைகளிற்கு என்ன வழி?

Saturday, April 6, 2013

முடிவின் முடிவு - சிறுகதை

"தேவையா? இப்படி படிச்சு நாளைக்கு என்ன மாதிரி, எவனோ பணக்காரன் ஆறதுக்கு இவன் மாடா கழுதையா ஒழைக்கணம்," கணவன் வருத்தததுடன் கேட்டான்.

மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. "அவன் காதுபட இத சொல்லிடாதீங்க! அப்பா இஞ்சினியர். நீயும் நல்லா படிச்சா அவர் பேர காப்பாத்தலாம்னு சொல்லி வெச்சிருக்கேன். நீங்க எப்படி சின்ன வயசுல படிச்சு உங்க ஊர்லையே பெரிய மனுஷனா கருதப்பட்டீங்கன்னு சொல்லியிருக்கேன். உங்கள மாதிரி வரணம்னு அவன் மனசுல பதிஞ்சிருக்கு."

பெருமூச்சு விட்ட கணவன், "அவனுக்கு என்ன பிடிக்கறதுன்னு கேட்டுண்டயா? எகோநோமிக்ஸ் பிடிச்சிருக்குன்னா அதுலயும் இப்போலாம் நல்ல ச்கோப்."

முகம் சுளித்தாள் மனைவி. "ஒங்களுக்கு ஒங்க மகன் மேலையே நம்பிக்க இல்லன்னு தெரியறது. பாருங்கோ எப்படி படிக்கறான்னு! நீங்களே ஆடிப்போக போறீங்க."

மனதில் ஒரு கலக்கம் எழுந்தாலும், மனைவி தெரிந்தே எல்லாம் செய்கிறாள் என்று தோணி அவன் மறு பேச்சு பேசவில்லை. நேரம் கிடைத்தால் அவனே மகனுக்கு உதவி செய்திருப்பான். ஆனால் வேலை பிழிந்து எடுத்தது அவனை.

இன்ஜினீயரிங் ரிசல்ட் வரும்  அன்று அவனுக்கு அவன் மனைவி தொலைபோசியில் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அழுவது மட்டும்தான் தெரிந்தது. உள் மனம் ஏதோ விபரீதம் நடந்ததை புரிந்துகொண்டது. தன் மேலாளரிடம் சொல்லிக்கொண்டு அவசரமாக வீட்டுக்கு திரும்பும் வழியில் தன் மகனுக்கு ஏதோ நேர்ந்ததிருக்கிறது என்று மெதுவாக அவன் மனைவியின் குழம்பிய வார்த்தைகளிலிருந்து அர்த்தம் கொண்டான். மனம் படபடத்தது.

வீட்டு வாசலில் சேர்ந்திருந்த கும்பல் அவன் பயந்ததை உறுதிப்படுத்தியது. அவனைக்கண்டு எல்லோரும் வழி விட்டார்கள். மனைவி எங்கிருந்தோ பறந்து வந்து அவனைக்கட்டிக்கொண்டு ஓலமிட்டாள். அதிர்ந்து நின்ற அவன், மெல்ல தன் மகனின் உடல் இருந்த இடத்திற்குச்சென்றான். 

மெதுவாக, தன் கையில் யாரோ திணித்த கடிதம் ஒன்று இருப்பது அவன் நினைவிற்கு எட்டியது. ஆனால் அதை படித்தால் அர்த்தம் புரியவில்லை.

'அப்பா, உங்கள் பேரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி என்னால் இஞ்சினியரிங்கில் மதிப்பு பெற முடியவில்லை. உங்களுக்கு அவமானத்தை சம்பாதித்து கொடுத்து உங்களை ஏறெடுத்து பார்க்க எனக்கு தைரியமில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.'

அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்தான்.

Saturday, March 23, 2013

இந்திய பண்பாடு...?


நான் நம் இலக்கியத்திலிருந்தும் நம் புராண கதைகளிருந்தும் கற்றுக்கொண்டவை - அதிதி தேவோ பவ; பெண்கள் தாய், லக்ஷ்மி; கண்ணியமும் கட்டுப்பாடும் நம் இலக்கணங்கள்.

ஆனால், இன்று ஹிந்து பேப்பரில் ஒரு வெளிநாட்டுப்பெண்மணி எழுதி இருக்கும் ஒரு கட்டுரையை படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் தன்  தோழிகளிடம் நம் நாட்டில் வரும் பொழுது எழும் எண்ணங்களைப்  பற்றி கேட்டார். அதற்க்கு அவர் தோழிகள் சொன்னது, இந்தியாவில் வரவேற்பு பிரமாதம். பலர் மிக பணிவுடனும் அக்கறையுடனும் அவர்களை வரவேற்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. ஆண்பிள்ளைகள் அவர்களுடன் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னாள் நம் மத்திய அரசு ஆமிர் கானை வைத்து இந்த அதிதி தேவோ அவ என்ற நம்முடைய கலாச்சாரத்தை நினைவூட்டினார்கள். அதில் ஏதும் பயன் இருந்ததாக தெரியவில்லை. 

அது மட்டுமின்றி, நான் யோசித்துப்பார்த்தேன். அப்படியே நான்  இந்த மாதிரி சம்பவத்தின் பொழுது அங்கு இருந்து தடுத்து நிறுத்துப்பார்த்தால், எனக்கு என்ன கதியாகும்?

இப்படிப்பட்ட பயமும் தயக்கமும் ஏன்? ஏனென்றால் பல வருடங்களாக இந்திய பெண்களுக்கே  இப்படிப்பட்ட கீழ்த்தரமான நபர்களை பொது இடங்களில் எதிர்க்க வேண்டியிருக்கு. அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்கள் ஒரு தெருகூத்து நடக்கும் ஆர்வத்துடன் அதை கண்டு கழிக்கிறார்களே தவிர, கூட நின்று எதிர்ப்பதில்லை. 

இதுவே இந்திய கலாசாரமாகிவிட்டது  என்று கூட சொல்லலாம். தெருவில் கண்ட அநாதையான் ரூபாயை கூட நாம் எடுத்துக்கொள்ள தயங்கி கோவில் உண்டியலில் போடும் பொழுது, ஒரு பெண்ணை நாம்  அவள் உடை, நடை என்று எடை போட்டு அவளை சீண்டி, வேதனை படுத்தலாமா?

இதை எப்படி மாற்றுவது? இதற்க்கு அரசு தவிர நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும்? இது ஒவ்வொரு இந்தியரும் யோசிக்க வேண்டிய விஷயம். 

Monday, March 11, 2013

வாழ்க்கை பந்தயம்

வண்டி மோதியதும்தான் அவன் கண் விழித்துக்கொண்டான். ஆனால் அதற்குள் அவனுடைய பிராணம் அவனை விட்டு விலகியது. திறந்தது உடலுடன் இருக்கும் விழியா அல்ல பிரியும் ஆவியின் கண்களா என்று அவனுக்கு சிறிதுநேரம் புரியவில்லை.

நினைவு பிரிந்தது.

நினைவு திரும்பும் பொழுது தலையில் கட்டு தெரிந்தது. எதிரே மனைவி. கண் அயர்ந்திருந்தாள். மெதுவாக எல்லாம் புலப்பட்டது. ஒரு கணமே கண் மூடியிருக்க வேண்டும். ஆனால் மறுகணமே எதிரே போகும் பெரிய வண்டி மீது அவன் போய் மோதியிருக்க வேண்டும். அவ்வளவு வேலை களைப்பு .

கண் மூடினான். இப்பொழுது கூடு வேலை என்ற வார்த்தை மனதில் களைப்பைதான் உண்டாக்கியது. எவ்வளவோ வேலைகள் இன்னும் முடிக்க வேண்டியது இருக்கு. இப்படி படுத்துக்கிடந்தால் என்ன லாபம்? எழுந்துக்கு முயற்சி செய்தான்.

மனைவி கண் முழித்தாள். அவனிடம் சட்டென்று வந்து, "எதாவது வேண்டுமா" என்று கேட்டாள். அவன் தலையசைத்து மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

மனைவி இங்கு வந்திருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது, ஆனால் ஆறுதலாகவும் இருந்தது. இந்த வேலையினால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடுவில் மனத்தாபம் தான் அதிகமாயிருந்தது.

ஒரு மாதம் கழித்து, மனைவியின் கனிவான பராமரிப்பில் உடல் குணமாகி அலுவலகத்திற்கு திரும்பும் பொழுது ஒரு சின்ன அதிர்ச்சி. அவன் இல்லாத பொழுதிலும் அலுவலகம் இழுத்து மூடப்படவில்லை. அவனுடைய வேலையை வேறு யாரோ மிக நன்றாகவே செய்திருந்தார்.

உன் தோளில் தான் இந்த அலுவலகமே நடக்கிருதா என்று மனைவி இடித்து கேட்ட பொழுது எவ்வளவோ கோபப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் ஒரு வெறும் கருவி தான், காரணகர்த்தா இல்லை என்று தெரிந்ததும் இத்தனை நாள் தன் வாழ்க்கையை வீணடித்திருக்கிறோம் என்று புலப்பட்டது. ஆனால் தன்னை ஒதுக்கிவிடப்போகிரார்கள் என்ற பயத்தில் அவன் மீண்டும் தன் திறமையை நிரூபிக்க வெகு தீவிரமாக முற்பட்டான்.

Saturday, February 23, 2013

வலது காலின் மஹிமை

முதல் முறையாக ஒரு வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் போது வலது கால் வைத்து வரச்சொல்வது நமது பண்பாடு. என் ப்ளாக்கின் பெயர் வலதுகால் என்று வைத்ததற்கும் அது தான் காரணம். தமிழ் ப்ளாக் என்ற உலகிற்குள் பிரவேசிக்கும்போது வலதுகால் எடுத்து வைப்பதாக எண்ணிக்கொண்டு அப்படி என் ப்ளாகிற்கு பெயர் வைத்தேன். என்னை பல பேர் அந்த பெயருக்கு காரணம் கேட்டதுண்டு.
போன வாரம், நான் ஒரு தமிழ் வாத்தியாரிடம் என் ப்ளாகை படிக்க சொல்லி பெயர் சொல்லும்பொழுது அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது. என்னையும் அறியாமல் இந்த பெயர் எனக்கு வேறு விதத்திலும் பொருந்தும் என்று அறிந்து கொண்டேன்.
அவர் மதுரைக்காரர். இதிலேயே யூகித்துக்கொண்டிருப்பீர்கள் - மதுரையில் சொக்கேஸ்வரர் வலது காலை தூக்கி ஆடுவார் இல்லையா? அவர் நான் அதை மனதில் வைத்துதான் இந்த பெயர் சூட்டினேன் என்று நினைத்துக்கொண்டு என்னை கேட்டதும் மெய் சிலிர்த்துப்போனேன். நான் நடனம் ஆடுவதால் இப்படி பெயர் வைத்தேன் என்று அவர் நினைத்துக்கொண்டு இது ரொம்ப நல்ல பொருத்தம் என்று பாராட்டினார்.
நம்மையும் அறியாமல எத்தனை விஷயங்கள் நமக்கு ஒன்று கூடிவிடுகின்றன!

Sunday, January 20, 2013

வறட்சி

நிரம்பி வழியும் குடம், அதில்
தேங்கி நிற்கும் நீர்
புதுமைக்கு இடமில்லை
பழமையே ஓங்கி நிற்கும்

குடத்தை உடைத்தாலோ
அழுகிய நீர் மண்ணில் கலக்கும்
ஆனால் எதில் மீண்டும்
நிரப்புவது புதிய நீரை ?

பானை நீரை வடித்து
காய வைத்து செய்வோம் தயார்
மனமென்னும் குடத்தை
நிரம்பி வரும் புது சிந்தனைக்கு



Saturday, January 12, 2013

பொங்கல் தினத்தன்று சில சிந்தனைகள்

கதிரவன், மழைமேகம், செம்மண் கூடி
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று

விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்

நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை

எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
 

Friday, January 4, 2013

பொருளாதாரம் தரும் சுய-நம்பிக்கை

ஒரு பெண் முதலில் தன் தந்தையின் பாதுகாப்பிலும் பிறகு கணவன் அல்ல மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவள் என்ற ஒரு நிலைமை இருக்கும் வரை அவளை ஒரு பொருளாகவும், ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகவும் தான் கருதப்படுவாள். அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவளுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களின் மரியாதையும் கிடைக்கும். இதையே சமூக சேவகர்கள் சொல்லி வருகிறார்கள். இதையே பாண்டிச்சேரியில் என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு சமூக சேவை நிறுவனம் பெண்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து,தேவையான உதவியும் கொடுத்து வருகிறது. பல பெண்கள் தன் தொழிலில் நிபுணர்களாக இருப்பதால் அவர்களை மற்றவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பதற்கு அந்த ஊர் அரசாங்கம் அவர்களை அழைத்து அவர்களுக்கு சம்மானமும் கொடுக்கிறது. சிறு தொழில்கள் தான். ஆனால் அதில் வரும் வருமானத்திலிருந்து தன குடும்பத்தையும் காப்பாற்றி அந்த தொழிலை வளர்க்கவும் செய்கிறார்கள். இதனால் அந்த பெண்களின் சுய நம்பிக்கையும் அதிகரித்து அந்த பெண்கள் இன்று அவர்கள் கிராமங்களில் பல மற்ற சமூக வேலைகளில் ஈடுபட்டு மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன் பெண்களை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கை இந்த தாய்மார்களில் வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு பாரதத்தின் எல்லா கிராமங்களிலும் வந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் ஆண்களிலும் பெண்களைப்பற்றின அபிப்பிராயம் மாறி பெண்களிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இயல்பாகவே வந்து விடும் அல்லவா? இதற்க்கு நாம் வேண்டிய முயற்சி செய்வோமே.