Sunday, September 13, 2015

அமாவாசையா பௌர்ணமியா? பாகம் 3

கல்யாண தேன்நிலா - பாகம் 1
தேய் பிறை பாகம் 2

இவனையா ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டோம் என்ற சந்தேகம் பிரபா மனதில் வேர் பிடித்து ஆட்டிப்படைத்தது. மணம் முடிந்த ஆரம்ப காலத்தில் இருந்த அன்பு இன்று எங்கு காணாமல் போய் விட்டது? தன் செல்வத்துடன் சிரித்து விளையாடும் நேரத்தில் கதிர் ஞாபகம் வந்தால் அப்படியே அந்தச்  சிரிப்பு மறைந்து விடும். குழந்தை மீது அந்த கோவம் பிரதிபலிக்க போகிறதே என்ற ஐயம் அவளை தன் கோவத்தை அடக்கிக்கொள்ள உதவியது. ஆனால் சில நேரங்களில், ச்சே, இதற்கு இவ்வளவு பாடு பாடுவது அவசியமா என்ற விரக்தியும் மனதை வாட்டியது.

அவன் வந்தவுடன் குழந்தையை அவனிடம் விளையாட விட்டு, வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பது போல் பாவனை செய்வாள் - சண்டைகளை தவிர்க்கத்தான். அவன் நெருங்கினால் இணங்கினாள். வெளியே அழைத்துச்சென்றால் பின் தொடர்ந்தாள். ஆனால் பாட்டை விட்டு விடு என்றால் மட்டும் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. அதுவே அவர்களுக்குள் நடுவில் சுவர் போல் நின்றது.

"நானும் தான் கிரிக்கெட் விளையாடின நாட்கள் உண்டு. குடும்பத்துக்காக அத விடல?" என்ற அவன் கேட்க ஆரம்பித்தான்.

"நான் விடச் சொல்லலையே," என்று அவனுக்கு அவள் நினைவூட்டினாள். "ஆசையா இருந்தால் திரும்பி போ வளையாட. நான் தடுக்கல," என்று கூட வற்புறுத்திப்பார்த்தாள்.

"என்னால் முடியாது," என்று அவன் அதை நிராகரிக்கும் பொழுது ஏமாற்றம் அதிகரித்தது.

"வெறும் வீடு, வேலைன்னு இருந்தா வாழ்க்கை எப்படி நன்னா இருக்க முடியும்? உனக்குன்னு ஒண்ணு இருக்க வேண்டாமா?" என்று மெதுவாக சுருதிப் பிடித்தாள். மனதில் ஒரு தெளிவு வந்தது. அவனைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை ஆராய்ந்தாள். வேலைக்குபோகும் அவனுக்கு தன்னை பற்றிய சிந்தனை இல்லை, தான் வேலையை தவிர கூட ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புக் கூட இல்லாமல் ஒரு யந்திரம் போலே இயங்கி வருகிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவன் வாழ்க்கையில் விளையாட்டு சம்பந்தமாகவே ஏதாவது ஒரு வடிகால் இருக்க வேண்டும் என்று அவள் தீவிரமாக யோசிக்கலானாள்.

மெதுவாக அவன் கவனத்தை மரதோன் மீது ஈர்த்தாள். முதலில் ஏக்கத்துடன் அதைப் பற்றி பேசின அவனில் அதில் முயற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தாள். பாட்டுகற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது தன்னுள் எழுந்த சந்தேகங்கள் தான் இன்று அவனையும் தயங்க செய்தது என்று நன்று அறிந்தாள். ஊக்கம் அளித்து அதில் முன்னேற அவனுக்கு அவள் தோள் கொடுத்தாள்.

சண்டை சச்சரவு இல்லாத வீடா? ஆனால் கூடவே சிரிப்பொலியும் போட்டிப்  போட்டுக்கொண்டு கேட்கும் இப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில்.

அமாவாசை போல் இருட்டிவிடுமோ அவர்கள் இல்லற வாழ்க்கை என்ற பயம் போய் பௌர்ணமிபோல் பிரகாசிக்கும் அன்பு நிலவில்  ஜொலித்தது கதிர்-பிரபா இல்லம்.

முற்றும்

Saturday, September 5, 2015

தேய் பிறை - பாகம் 2



"நீ எப்பவும் பிஸி," கதிர் கடு கடுத்தான். "ஏன் இவ்வளவு இழுத்து விட்டுக்கற? குழந்தைக்கு நீ வேணும் இந்த சமயத்துல... இப்போ நீ பாட்டு கத்துக்கலன்னு யாரு அழுதா?" மேலும் ஏசினான்.

பிரபா முறைத்தாள். "நா யாருக்காக பாட்டு கத்துக்கணம்? எனக்காக பாடறேன். உன்ன கேக்க சொன்னேனா?" பதிலுக்கு எகிறினாள். "குழந்தைய உன் கிட்ட பாத்துக்கோன்னு சொன்னேனா?"

"நீ தான் அம்மா. மத்தவங்க கிட்ட விட்டுட்டு போறதுல என்ன அர்த்தம்? எனக்கு உன் ப்ரெண்ட்ச துளிக் கூட பிடிக்கல..."

"எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு. அதுவுமில்லாம, அவங்க கொஞ்ச நேரம் பாத்துகிட்டதுனால நா அம்மா இல்லன்னு ஆயிடுமா? அவங்க கொழந்தைய அவங்களுக்கு தேவங்கரச்சே நான் பாத்துக்கறேன். எங்களுக்குள்ள ஒரு understanding... நீ மூக்க நுழைக்காத..." என்று கண்டித்துக்கொண்டாள்.

"அது என் கொழந்தையும் தான்," அவன் அவளுக்கு நினைவூட்டினான். 

"எனக்கு ஞாபகமிருக்கு... உனக்கு இருக்கான்னுதான் தெரியல," என்று பதிலடி கொடுத்தாள். 

"உன்னோட பேசறதே waste. எதுக்கெடுத்தாலும் argue பண்ணுவ," அவன் நகர்ந்தான்.

"அனாவச்யத்துக்கு என்ன வம்புக்கு இழுத்ததும் நீதான்," அவள் விடாமல் பின் தொடர்ந்தாள்.

"அம்மா தாயே, என்ன விட்டுடு. இந்த குட்டி மட்டும் இருந்திருக்காட்டா நான் எங்கேயாவது  தனியா போயிருப்பேன்... நமக்குள்ள இருக்கற உறவு அவளுக்காகவாவது தாங்கணும்னா கொஞ்சம் நீ விட்டு கொடுக்க கத்துக்கணம்."

"உனக்கு அந்த பொறுப்பில்லையா?"

"நான் எவ்வளவு பொருத்து போறேன்னு உனக்கு தெரியாது."

பிரபா அவனை முறைத்தாள். "நான் பண்ற adjustments எல்லாம் நான் உங்களுக்கு எடுத்து சொல்லட்டுமா?"

"என்ன, போட்டி வெச்சுக்கலாமா? உன் பிரெண்ட்ஸ வேணும்னா ஜட்ஜ் ஆக்கிடலாம்!" கதிரும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.

"என் பிரெண்ட்ஸ இழுக்காதீங்க இதுல. அவங்க கொழந்தைய பாத்துக்கறது உங்களுக்கு பிடிக்கலன்ன நீங்க ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து குழந்தைய பாத்துக்கங்க."

இருவரும் முகம் சுளித்து ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் தத்தம் வேலையில் மூழ்கினார்கள். இந்த சண்டை ஒரு தினசரி காட்சியாக மாற ஆரம்பித்தது. 

இப்படியும் ஒரு மண வாழ்க்கை தேவையா? குழந்தையை பாதிக்கும் அளவுக்கு இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு நாள் அது புரிந்துகொள்ளத்தான் போகிறது. அப்பொழுது தாய் தந்தை சேர்ந்து இருக்கிறார்கள் என்பதில் சந்தொசப்படுமா? இல்லை பிரிந்து போய் மரியாதையை காபாற்றிக்கொண்டு குழந்தைக்கும் நல்ல வாழ்க்கை அமைப்பதா? பிரபா குழம்பினாள்.

திருமணமான ஆரம்பத்தில் இருந்த சுகமான நாட்களை எண்ணி, அவை எங்கு பறந்து விட்டன என்ற நினைப்பில் அடிக்கடி மூழ்கினாள். அந்த சந்தொசமில்லாத மண வாழ்க்கை தேவையா என்ற கேள்வி அவளை வாட்டியது...

அடுத்த வாரம் - அமாவசையா பௌர்ணமியா, மூன்றாம் பாகத்தில் பார்க்கலாம்.