Monday, December 12, 2016

வருமா வராதா

விழுந்த கிளைகளை எப்படி
ஓரம் கட்டுவது?
காற்றே வா, மெதுவாக வா, ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே...

சின்ன வயதில் இதை கற்றுக்கொண்ட ஞாபகம். 'நாடா' என்ற புயல் அவிழ்ந்தது. 'வராதா ' வருமா வராதா என்ற ஜோக்குகளை மிஞ்சி 'நான் வந்துட்டேன்!' என்று தன் வலிமை மீது சந்தேகப்பட்ட சென்னை வாசிகளுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்கும் வண்ணம் வந்துவிட்டது!

Thursday, November 24, 2016

பாகப் பிரிவினை

ஏற்கனவே சந்தீப் ஊரிலில்லாதது நம்ரதாவின் வேலையை மிகவும் பாதித்தது. காலையில் தன் இரு மகன்களையும் பள்ளியில் விடுவது, மாலையில் ட்யூஷன் முடிந்த பின் கூட்டிக்கொண்டு வருவது அவனுடைய பொறுப்பு. அவள் காலையில் சமையல் முடித்து, பிற்பகல் உணவு கட்டி அனுப்பிய பிறகு தன்  அலுவலகத்திற்குச்சென்று, பிற்பகல் திரும்பும் பொழுது சஞ்சித்தையும் மாதவையும் ட்யூஷனில் விடுவது அவளுடைய பொறுப்பு. ஒரு வாரம் சந்தீப் ஊரில் இல்லாத நேரத்தில் எப்படியோ சமாளித்து விடலாம் என்று நினைத்தவள், திணறிவிட்டாள். வேலைக்காரி வராதது ஒரு கூடுதலான தலைவலி.

ஞாயிறு வந்தது, அப்பாடா என்று ஓய்வெடுக்கலாமென்றால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வளரும் பசங்களுக்கு இன்று ஒருநாள் தான் வகையாக ஏதாவது செய்து கொடுக்க முடியும். ருசியாக சமைத்து,  பாத்திரங்களை தேய்த்து, வீட்டை ஒழித்து வந்த பிறகும் தோய்க்க வேண்டிய துணிகள் அவளை, "எங்களுக்கு விடிவுகாலம்  எப்போ?" என்பது போல் கூடையில் நிரம்பி வழிந்தன. வாஷிங் மெஷின் தான் தோய்க்கும். இருந்தாலும் அதில் போட்டு, கொடியில் இருந்த துணிகளை மடித்து, செடிக்கு தண்ணி விட்டு, வீடு கூட்டி முழுகி ... அப்பப்பா, தலை சுற்றியது.

"கொஞ்சம் அம்மாக்கு ஒத்தாசை செய்ங்க. கூட்டி முழுகுங்க," என்று தன் மகன்களிடம் உத்தரவிட்டாள். அவர்கள் ஒத்தாசை செய்ய கூடிய வயதுதான். பெரியவனுக்கு பதினாலு வயது, சிறியவன் பன்னிரண்டு. துணியெல்லாம் மடித்து வைத்து விட்டு சோஃபாவில் உட்கார்ந்தபடியே கண் அயர்ந்தாள்.

திடீரென்று அவள் மகன்கள் உரத்த குரலில் சண்டை போடுவது கேட்டு அதிர்ந்து எழுந்தாள். மாதவன் அழுது கொண்டிருந்தான். 'என்ன' என்பது போல் சஞ்சித்தைப் பார்த்தாள்.

"வெறும் நடிப்பு!" என்று அவன் கடுகடுத்தான்.

"இல்ல!" என்று மாதவ் குரல் கொடுத்தான்.

பெருமூச்சு விட்டாள்  நம்ரதா. "என்ன நடந்தது?"

"அவன் என்ன அடிச்சான்," என்று மாதவ் இன்னும் அழுதான்.

மாதவ் நிஜத்தைச் சொல்கிறான் என்று தெரியும். ஆனால் அது முழு உண்மை அல்ல. சஞ்சித்தைப் பார்த்தாள்.

"அவன் கிச்சனையும்  பெட் ரூமையும் பெருக்கறேன்னு சொன்னான். இப்போ கிச்சன் வாசல்ல பண்ண மாட்டேன்னு சொல்றான். இவன் எப்பவுமே இப்படித்தான். அப்புறம் நான் குவிச்சு வெச்ச குப்பை மேல வேணும்னே ஓடி அத பறக்க வெக்கறான்!"

"இல்ல!" என்று மாதவ் மறுத்தான். இந்த வாதம் விட்டால் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் போல் இழுத்துக்கொண்டே போகும் என்று அறிந்தவளுக்கு களைப்பும் கூடச் சேர்ந்து கோவத்தை உண்டாக்கியது. கண்களில் பொறி பறந்தது, ரௌத்திர தாண்டவம் ஆட ஆயத்தமானாள்.

"ஒரு சாண் அளவு தரையை பெருக்க இவ்வளவு பெரிய போரா? உங்களுக்கெல்லாம் நான் பார்த்து பார்த்து செய்யல? ஒரு வேளை வீட்டுல கொஞ்சம் ஒத்தாசைச் செய்ய சொன்னா இப்படியா நடந்துக்கறது?" யாரிடம் நியாயம் என்று சொல்வது தெரியாமல் முழித்த அவள், "அந்த நாலு டைல பங்கு போட்டு கொடுகட்டமா?" என்று உணர்ச்சியே இல்லாத சஞ்சித் முகத்தையும், கண்ணீர் வடிக்கும் மாதவ் முகத்தையும் முறைத்துப் பார்த்துக்கேட்டாள்.

கேட்ட அவளுக்கே கோவம் மாயமாக மறைந்தது. சஞ்சித்தும் மாதவும் நகைத்தனர். மூவரும் அந்த டைல்களை பங்கு போடுவதை நினைத்து சிரித்தனர்.

"நீ பெருக்கு, நீ துடை," என்று நீதி வழங்கி நம்ரதா தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.


Friday, November 11, 2016

நினைவிருக்கிறதா?

மும்பையிலிருந்து டில்லி கிளம்பும் அதிதி மனது சிறகுபோல் படபடத்தது. வேலை விஷயமாக போகும் இந்த பயணத்தில் பழைய சில ஸஹ ஊழியர்களைச்  சந்திக்கலாம் என்று எண்ணிய அவளுக்கு ஒரு சிறிய இன்ப அதிர்ச்சி.

அதில் பரத்தும் வருவதாக சொன்னான். எங்கு சென்றான் என்று கூட தெரியாமல் காணாமல் போன அவன் இப்பொழுது, வாட்ஸ் ஆப் மூலமாக மறுபடியும் தொடர்பு கொண்டான். கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் மிகவும் கலகலவென்று பழகினான். எல்லோருக்கும் ஒரு வார்த்தை, ஒரு கேள்வி. அவளுக்கும் தான். டில்லி வரப்போகிறேன் என்று அவள் சொன்ன உடன், எங்கே, எப்போ, சந்திக்கலாமா என்று முதலில் கேட்டவனும் அவன்தான். ஐயோ டில்லி  போக வேண்டுமா என்று எண்ணிய அவள் மனதில் எப்பொழுது போகப்போகிறோம் என்கிற ஆவல் எழுந்தது.

எத்தனை நினைவுகள் அவள் மனதை வாட்டின. வேலைச் சம்மந்தமான சந்திப்புகளில்கூட பரத் பற்றிய நினைவுகள்தான். சேர்ந்து வேலை செய்த அந்த இருபத்திரண்டு தாண்டிய பருவ காலத்தில் எத்தனை சிந்தனை பரிமாற்றங்கள், எத்தனை ஜாடையில் பேச்சுகள்... காதல் என்று ஒப்புக்கொள்ளவில்லையே தவிர, சொல்லாமல் நடந்தது இருதய பரிமாற்றமும்.

அப்படித்தான் அவள் நம்பி இருந்தாள். ஆனால் அவன் திடீரென்று ஒரு நாள் "வேலையை விடப்போகிறேன்," என்று சொல்லும் பொழுது, மண்டையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. சரி, கிளம்பும் பொழுதாவது தன் உணர்வுகளை இவளிடம் பகிர்ந்து கொள்வான், தன்னுடன் வந்துவிடச் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவனோ தன் எதிர்காலத்தைப்பற்றியே பேசினான். அதில் இவளுக்கு இடம் இல்லை என்று உணர்ந்த அவள் மனம் வாடியது. இன்று நினைத்தால் கூட நெஞ்சை ஏதோ தைப்பது போலத்தான் இருந்தது. இப்படி பழைய நினைவுகளிலேயே வாழ்ந்தால் புதுமண வாழ்வு பாழாகி விடுமோ என்று பயந்த அவள் மணமே  செய்து கொள்ளாமல், கருமமே கண்ணாயினாள்.

டில்லியில் பரத்துடன்  தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்க வேண்டிக்கொண்டாள். அப்படி கிடைக்கவும் கிடைத்தது. அவன் சற்று முன்பே வந்து விட்டான்.

"உனக்கு ஜனாவை நினைவிருக்கிறதா? சுதீர் என்ன ஆனான்? ஏய், சுரேஷ் என்று ஓருவன் இருந்தான், இல்லையா?"

மற்றவர்கள் வரத் தொடங்கினர். அன்று மாலை முழுவதும், "நினைவிருக்கிறதா?" என்ற கேள்வியிலேயே போய் விட்டது.

"நாம் இருவரும் பழகினது நினைவிருக்கிறதா? அந்தக் கோவில் வரைச் சென்று திரும்புவோம், அது நினைவிருக்கிறதா? வேர்க்கடலை தின்றுகொண்டே நடப்போம், அது நினைவிருக்கிறதா? டீ வாங்கிப்  பகிர்ந்துகொள்வோமே, அது நினைவிருக்கிறதா? லேட் ஆகி விட்டால் நீ என்னை உன் பைக்கில் கொண்டு போய் விடுவாய்... அது நினைவிருக்கிறதா?"

இப்படி எத்தனை நினைவுகள்! எல்லாவற்றையும் முழுங்கி விட்டு, அதிதியும் மற்றவர்களுடன் அவசியம் இல்லாத நினைவுகளைத் தோண்டி எடுத்தாள். நினைவில் கூட இல்லாத அந்த நாட்களைப்பற்றி அவனிடம் பேசி தன் நினைவுகளைத் துச்சப்படுத்த அவள் விரும்பவில்லை.

Tuesday, October 11, 2016

பஞ்சில் ஒளிந்த இடி

கனவில் மிதக்க மென்மையான மெத்தை
அதோ தூரத்தில் மிதக்கும் மேகங்கள்
வெள்ளை பஞ்சுபோல் மிதமான அவை
தூண்டும் என் மனதில் எத்தனை கனவுகள்

ஒரு நாள், ஒரே ஒரு நாள் அதில் படுக்க
ஒரு பொழுதாவது நிம்மதியாக அதில் உலாவி
இந்திரலோகமோ, கனவுலகமோ, அதில் மிதக்க
சோம்பியும், உருண்டும், புரண்டும், உலகளாவி 

வானத்திலிருந்து கீழே உலகைப்  பார்க்க
அங்கு நடப்பதைக் கற்பனைச் செய்ய
பறவைப்போல் சுதந்திரமாக பறக்க
வடிவங்களுக்கு  சிந்தனையால் வர்ணம் பூச

இந்த கனவுகள் நிஜமாவதற்கு
ஆஹா வந்ததே அந்த விமானம்
ஆனால் மேகத்தின் நடுவே பறப்பதற்கு
வேண்டுமே தனி மனோதைரியம்

மேலும் கீழும் ஆட்டிவைக்கும்
கனவுகளெல்லாம் சிதறிப்போகும்
பனிமூட்டம் கண்ணை மறைக்கும்
நிலத்தை இரு கண்கள் ஆவலுடன் தேடும்

என்னத்தான் கனவைப்போல மிதந்தாலும்
அந்த பொல்லாத மேகம் இடியைத் தாங்கும்
 வெறும் பனித்துளிகளாக இருந்தாலும்
பாறையின் பலத்திற்கு அது ஈடாகும்

இருக்குமிடத்திலேயே கனவு காண்
மாயை இந்த உலகம் என்று புரிந்துகொள்
மனது பறந்தாலும் நிலைத்து நில் 
எதிலும் அளவோடு நடந்துகொள்.



Sunday, September 11, 2016

விடை பெறும் நேரம்


வடிவேல் கடையைத் திறந்து, தன் பையை உள்ளறையில் வைத்து, முகத்தைத் தன் கைகுட்டையால் துடைத்துக்கொண்டு, ஏஸி ஆன் செய்தான். ஒரு பழைய துணியை எடுத்து, மேஜை, ஷெல்ஃப் மீது படர்ந்திருந்த தூசியை துடைத்தான். அழகு பொருள்களை  சீராக வைத்தான்.

இன்று அவனுடைய கடைசி நாள். இன்று மாலை வீட்டிற்குச் சென்றபின் இந்த கடைப் பக்கம் வர வேண்டிய அவசியம் இல்லை. அவன் இருபத்தைந்து வருடங்களாக வேலை செய்த இந்த கடையை நோட்டம் விட்டான். அதோ, அந்த டெட்டி (teddy) - எத்தனை காலங்களானாலும் அதனுடைய மவுசு குறையாது.

அந்த ஜோடியாக ஆடும் பெட்டி - அது ஒரு காலத்தில் புதுமையாக இருந்ததால் நன்றாக ஓடியது. இபோ அதைக் கேட்பார் இல்லை.

லாஃபிங்க் புத்தா - பார்க்கும் பொழுதே என்ன இன்பம்! அதற்கு வந்த யோகம், வருபவர்களெல்லாம் அதில் பெரிதோ சிறியதோ, ஒன்றை வாங்காமல் போவதில்லை.

இந்த பொருள்களின் நடுவில் அவன் ஒரு வாழ்க்கையையே அமைத்திருந்தான். இந்த வாழ்க்கையை விட்டுச் செல்வதில் ஒரு கலக்கம் எழுந்தது. கடையில் இன்னும் இரண்டு பெண்கள் அவனுக்கு உதவியாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி, கண்ணம்மா, கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவனுடன் வேலை செய்திருக்கிறாள். இதோ, கதவை திறந்து அவள்தான் வருகிறாள். "என்ன அண்ணே, இன்னிக்கும் சீக்கிரம் வந்துட்டீங்க," என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள். "பழக்கம் விட்டுப்போகலையா?"

"உங்களுக்கு பதிலா யாரையாவது வேலைல வைக்கப்போறாங்களா?" என்று கேட்டாள்.

அதைப்பற்றி முதலாளி ஒன்றும் பேசவில்லை என்று முணுமுணுத்தான். "தெரியவில்லை. நீங்கதான் இருக்கீங்களே," என்று வடிவேல் அவளைப் பார்த்து புன்முறுவலுடன் சொன்னான்.

"ஆனால் இப்பொழுதெல்லாம் முன்ன மாதிரி இல்லையே. வாடிக்கையாளர்கள் எங்கு வருகிறார்கள்?" கண்ணம்மா பெருமூச்சுடன் சொன்னாள். வடிவேல் மௌனமாக இருந்தான். "இப்பல்லாம் யாரும் வீட்டை அலங்கரிக்கறதில்லையா? இல்ல, ஒருத்தருக்கு ஒருத்தர் கிப்ட் கொடுப்பதில்லையா?" அவள் மேலும் கேட்டுக்கொண்டே போனாள்.

"கொடுக்கறாங்க... ஆனா இன்டர்நெட் வந்ததிலிருந்து, வீட்டில் உட்கார்ந்த படியே வியாபாரம் முடிந்துவிடுகிறது," என்று வருத்தத்துடன் கூறினான் வடிவேல்.

"எப்படித்தான் ஒரு பொருளை தொட்டு ஆராயாம வாங்கறாங்களோ!" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். "இப்படியே இருந்தால் நம் கடைக்கு என்னாகும்?" என்ற கவலையும் கூட தொத்திக்கொண்டது.

"உங்க காலம் வரிலாவது இப்படியே கழியட்டும்," என்று  வடிவேல் அவளை வாழ்த்தினான். "பெண்ணை நல்லா படிக்க வைங்க. சொந்த கால்ல நிக்க கத்துக்கொடுங்க," என்றும் உபதேசித்தான்.

"உங்க பெண்ணை மாதிரி வளர்க்கப்போகிறேன்," என்று அவளும் குதூகலமாக பதிலளித்தாள்.

அன்று மாலை, சற்று முன்கூட்டியே கிளம்பினான். கடையை விட்டு விலக விலக மனம் பொங்கி எழுந்தது. இன்னும் அவனுக்கு வேலை செய்யும் வயதுதான். ஆனால் வாடிக்கை குறைந்ததால், ஆட்களைக் குறைக்க வேண்டும் என்று எண்ணிய முதலாளி, சூட்டிகையாக இருக்கும் கமலாவையும், நல்ல அனுபவம் உள்ள இவனையும் வைத்துக்கொண்டு, நடுத்தர கண்ணம்மாவை அனுப்புவதாக சொன்னார். கண்ணம்மாவிற்கு இன்னும் பள்ளிக்கூடம் போகும் வயதில் ஒரு பெண். அவள் உழைத்து சம்பாதித்துதான் அந்தப்பெண்ணை கரை சேர்க்க வேண்டும்.

இவனுக்கோ வேலைக்கு செல்லும் மகள் இருந்தாள். சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு அவளுக்கு வடிவேல் கல்வியும் தைரியமும் கொடுத்திருந்தான். தனக்கும் தன் மனைவிக்கும் வேண்டிய அளவு அவன் சேமித்திருந்தான். வேலை செய்தே தீர வேண்டும் என்ற அவசியமில்லை, செய்தால் நல்லதென்று கருதிய அவன், இன்று கண்ணம்மாவிற்காக தன் இடத்தை விட்டுக்கொடுத்தான்.

தன் வாழ்க்கை இதுதான் என்று எண்ணிய அந்த கடையிடம் கனத்த மனத்துடன் விடைபெற்றுக் கொண்டான். 

Sunday, August 21, 2016

வளைந்த கரண்டி

வீட்டை ஒழிப்பது, அப்பப்பா, என்ன ஒரு பெரிய வேலை! அதிலும் வீடு மாற்றும் பொழுது பல வருடங்களாக ஒளிந்து கிடக்கும் குப்பை சத்தைகளுக்கு அளவே இல்லை! அதோ, அந்த ஷர்ட் - கணவன் மணி எப்பொழுதும் போட்டுக் கொண்டு அலைவார்! எப்பொழுது இந்தப் பயில் வந்தது? அதோ, மகள் காவ்யா காணவில்லை என்று அழுது ஆகாத்தியம் செய்த டெட்டி இங்குதான் இருக்கிறதா! ஏன் இந்த பயில் வந்து சிக்கிக்கொண்டது?

ஐயோ, இப்படி ஒவ்வொரு பொருளைப்பற்றியும் ஆராய்ந்துக்கொண்டிருந்தால் வேலை முடிந்தா மாதிரி தான். அவசர அவசர மாக அந்தப்பையை தூக்கிப் போடவேண்டிய பொருட்களுடன் வைத்து விட்டு சமையலறைக்கு வந்து, இது இன்னும் சுலபமாக ஒழிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தாள். ஒவ்வொன்றாக பாத்திரங்களை வெளியே எடுத்து உடைசல் நெடிசல்களையெல்லாம் ஒரு  ஓரமாக வைத்தாள்.

ஒரு வளைந்த கரண்டி எட்டிப்பார்த்தது. அதைக்கண்ட அவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டாள். அதை கையில் எடுத்துப்பார்த்தாள். அப்படியே உலகம் சுழன்று அவளை ஒரு பதினைந்து இருவது வருடங்கள் பின்னால் தள்ளியது.

"சுகுணா என்னடி செய்யற?" அவள் அம்மா சமையல் அறையிலிருந்து அவளைக் கூப்பிட்டாள்.

"வரேன்மா" என்ற சுகுணா வரவில்லை.

"அடியேய்! சீக்கிரம் வா! இங்க பார், நான் வேலையா இருக்கேன். ஒத்தாசை செய்."

"இங்க பாருமா, சஞ்ஜய் மரத்துல தொங்கிண்டிருக்கான்!"

அதோ, அம்மா ஓடி வந்தாள், இதே கரண்டியுடன் தான்! அப்படியே சஞ்ஜய்  நிமிர்ந்து தரையில் குதித்தான். "ஏண்டி அம்மாட்ட வத்தி வெக்கற?" என்றுக்  கேட்டுக்கொண்டே வாசப்பக்கம் ஓடினான்!

"சண்டாளா! ஒரு நிமிஷம் சும்மா இருக்கயா! இதோ வந்துட்டேன் பார்," என்று அம்மாவும் துரத்தினாள். அவனை எட்டித் தாவி பிடித்து, பின்புறம் அந்த கரண்டியாலையே ஒன்று வைத்தாள். சுகுணாவிற்கு  தெரியும்,அவன் போடும் நாடகம் அவன் அம்மா போட்ட அடியை விட  படு பயங்கரம் என்று. "நான் சொன்னேன் மா, மரத்துல தொங்காதேன்னு," என்று அவள் இன்னும் கொஞ்சம் தூபம் போட்டாள்.

அவளம்மா இன்னும் இரெண்டு போட்டாள் அவன் பின்புறத்தில். "ஐயோ, அம்மா," என்று அவன் குதித்த அழகும், போட்ட கூச்சலும், சுகுணாவை  சிரிக்க வைத்தன. அடி வாங்கிக்கொண்டே அவன் அவளிடம் எச்சரிக்கை செய்வது போல் விரலை ஆட்டினான்.

ஏதோ தீயும் நாற்றம் வந்தது. அம்மா, "ஈஸ்வரா," என்றுச் சொல்லிக்கொண்டே சமயலறைக்கு ஓடினாள். சஞ்ஜய்  இவளை அடிக்க துரத்த இவளும் சமயலறையில் அம்மா மடியில் சரணம் புகுந்தாள். அது செய்தது கூட அறியாமல் அடுப்பை அணைத்து அம்மா  அந்த பாத்திரத்தில் ஒட்டிக்கொண்ட வெல்லத்துடன் மன்றாடினாள். அந்த அழுத்தத்தில் இந்த கரண்டி முடங்கியது!

ஒரே கோவம். "அடேய்!" என்று மறுபடியும் இவளை சீண்டும் சஞ்ஜய் அந்த கரண்டியால் ஒரு அடி வாங்கினான்.  சஞ்ஜய் அழத்தொடங்கினான். அதை கூட கவனியாமல் அந்த வெல்லப்பாகை எப்படியோ ஒரு வகையாக கடலைப் போட்டு உருட்டி - அப்பப்பா! இன்னும் அந்த பாகின் ருசி அவள் நாக்கில் ஊறியது.

முதலில் உதை வாங்கின சஞ்ஜய்க்குத்தான் அந்த உருண்டை எடுத்துக்கொடுத்தாள் அம்மா. தாய் மனம் பித்தல்லவா? மகனை பாகின்மீது வந்த கோபத்தினால் அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு வயிறு வலிக்க வலிக்க அந்த வேர்க்கடலை உருண்டையை கொடுத்து பிராயச்சித்தம் செய்து போக்க நினைத்தாள்.

அந்த கரண்டியை இப்படி அப்படி செய்து எப்படியோ சரி செய்யப்பார்த்தும் அது அந்த நாளின் ஞாபகார்த்தமாக முறுக்கிக்கொண்டே இருந்தது. ஏனோ அந்த கரண்டி, தன் தாய், அண்ணன் - மூன்றுமே ஒரு இணை பிரியாத ஞாபகமாக அவள் மனதில் வ்யாபித்துக்கொண்டனர். கல்யாணம் செய்து கொண்டு மணி வீட்டிற்கு வரும் பொழுது, அந்த கரண்டியை சீதனமாக எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். மாமியார் இருக்கும் வரை அதை எடுக்காமல் இருந்தவள் அதைப் பற்றி மறந்தே போய் விட்டாள்.

அந்த ஞாபகார்த்தத்தை பத்திரமாக தன் பொட்டிக்கொள் வைத்துக்கொண்டாள். அடுத்த முறை சஞ்ஜய் வீட்டிற்கு வரும் பொழுது இதை காட்ட வேண்டும் என்று எண்ணி, தன் மறைந்த தாய்க்காக வழிந்த இரண்டு சொட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

.  

Tuesday, August 16, 2016

ஒரே நொடி

உன் பிஞ்சு உடல் கையில் தாங்கி
உன் கூக்குரல் கேட்க ஏங்கி
என் மார்புடன் அணைக்கும் போது
போவதே தெரியவில்லை பொழுது

என்னையே நம்பி வந்தாய் என்று எண்ணினேன்
என் உயிரையே உனக்காகக் கொடுக்கத் துணிந்தேன்
என் உயிர் துறந்தபின் உன் கதி  என்ன என்று பயந்தேன்
நானில்லாமலும் நீ வாழ உனக்குக் கற்பித்தேன் 

உறவுகள் தரும் சுகமடா 
நொடியில் மறையும் மாயையடா
நாம் கைகள் பிணைத்துக் கொண்டாலுமே
நம்மை பிரிக்க முனையும் காலமடா

வாழ்க்கை மிகவும் மோசமடி
எந்த நொடியும் ஏமாற்றுமடி
உன்னையே நம்பி நீ வாழடி
உன் மனதில் உரம் ஏற்றடி.




Sunday, August 7, 2016

தாய்வீடு

மேகலா அலாரம் அடிப்பதை கேட்டு பெருமூச்சு விட்டாள். அதற்குள் விடிந்துவிட்டதா!

ஒரு ஐந்து நிமிடம் படுக்கையில் சோம்பி, பின் எழுந்து பரபரப்பாக காலைச்சடங்குகளை முடித்து, சமையல் வேலைகளை கவனிக்கலானாள்.

கணவன் சிவா எழும் ஓசை கேட்டு, காபி போட்டு மேசை மீது வைத்தாள். சின்ன மகள் நிம்மிக்கு பாலும்,  பெரியவன் தினேஷிற்கு ஜூசும் தயார் செய்தாள். இருவரையும் எழுப்புவது ஒரு பெரும் ஜோலி. அதையும் சமையலுக்கு இடையில் செய்தாள். சிவாவிடம் சொன்னால் இன்னி முழுக்க அவன் கொஞ்சி எழுப்புவதில் சென்றுவிடும், அவர்கள் பள்ளிக்கு லேட்டாகத் தான் போவார்கள். ஆகையால் அவளே இந்த பணியை தானே செய்தாள். தன்  மத்திய உணவை சிவா எடுத்து வைத்துக்கொள்வதுதான் அவளுக்கு பெரிய உதவி.

ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி விட்ட பின் அவள் அரை மணி நேரத்திற்கு யோகா செய்தாள். பிறகு காலை சிற்றுண்டி உண்டு, வெளியில் சென்று முடிக்க வேலைகளை முடித்து வந்து, மத்திய உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் உண்ண ஒரு டிபன். அவரகள் வீட்டில் நுழையும்பொழுதே நடக்கும் போர்களுக்கு சமாதானம். அவர்களை படிக்க வைக்க, வெவ்வேறு கிளாஸ்களுக்கு கூட்டிச்சென்று, அழைத்து வரும் பொறுப்பு, மறுபடியும் வீட்டு வேலைகள்...படுக்கும் பொழுது அப்பாடா என்று ஆகி விடும்.

இதே சக்ரவியூஹத்தில் இன்னும் எத்தனை நாட்கள் சுழலப்போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம்; கணவன், மக்களிடமிருந்து உதவி எதிர்பார்க்க முடியாத தவிப்பு; அவர்களும்தான் சுழலில் சிக்கியிருக்கிறார்கள் என்ற அனுதாபம்; அவர்களுடைய படிப்பு, கணவன் வேலையில் சந்திக்கும் சவால்கள், வண்டி ஓட்டுவதில் படும் அவஸ்தைகள்... அந்த கவலைகளும் தான் சேர்ந்து அவள் மேல் பாரமாக இருந்தன. தான் புலம்பினால் இந்த குடும்பம் சுக்குநூறாகி விடும் என்ற உணர்வு அவளை பல்லைக்கடித்துக்கொண்டு, ஏன், சிரித்துக்கொண்டே கூட, இந்த வாழ்க்கையை ஓட்ட கட்டாயப்படுத்தின.

அந்த வார கடைசியில் தன் தாய் வீட்டில் சென்று வாச அறையில் உட்கார்ந்தாள் மேகலா. அவள் தாய் ஜானகியிடம் அவளுடைய குழந்தைகள், "இன்னிக்கு என்ன பாட்டி ஸ்பெஷல்," என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றனர்.

வாச அறையில், சோஃபா மீது காலை தூக்கி வைத்து கண் அயர்ந்த மேகலாவிற்கு சில நேரங்களுக்கு இந்திரலோகம் சென்ற சுகம். தன் பாரம் எல்லாம் நீங்கி, தானும் ஒரு குழந்தைபோல், கவலைகள் இன்றி கனவு லோகத்தில் உலாவினாள்.

அந்த அரை மணி நேர உறக்கம் வைட்டமின் டோஸ் போல இவளுக்கு இன்னும் ஒரு வாரம் சுழலில் போராட பலம் கொடுத்தது.





Sunday, July 24, 2016

இருதய பரிமாற்றம்

சரிகா போனை கீழே வைத்தாள். முகம் வாடியது. கதிரின்  போன் இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளியேவோ அல்ல அணைக்கப்பட்டிருப்பதாகவோ தான்   இருந்தது. ஒரு புறம் கவலை, மறுபுறம்  ஏமாற்றம்.

நாட்டை விட்டுச் சென்றவன், உலகத்தைவிட்டு சென்று விட்டானா என்ற நினைப்பு தன்னையும் மிஞ்சி அவள் மனதில் எழுந்தது . ஆனால் உடனே தலை அசைத்தாள். தனக்கு தகவல் கிடைத்திருக்கும் என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் அதே நம்பிக்கை தான் ஏமாற்றத்திற்கும் காரணம். அவனைப்  பின் தொடர்ந்து சென்ற  தாய் இவளுக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாளா? சின்ன வயதிலிருந்து, "நீதான் என் மருமகள்," என்று அழுத்தந்திருத்தமாகச்  சொன்னவள், தன மகன் இறந்ததை இவளுக்கு நிச்சயமாகத் தெரியப்படுத்தியிருப்பாள். அப்படி ஒரு தகவலும் வராததுதான் இவளுக்குப்  பெரிய ஏமாற்றம்.

தன்னை சுதாரித்துக்கொண்டாள். என்னவிதமான நினைப்புகள் இவை! தேவை இல்லாமல். ஏதாவது காரணமிருக்கும் கதிரின் மௌனத்திற்கு என்று தன்னைத்  தானே தேற்றிக்கொண்டாள்.

வேற்றூரில் இருக்கும் தன் தாய்க்கு போன் செய்து, குசலம் விசாரித்து, ஆபிஸிற்குக் கிளம்பினாள். தான் தனியாக இருப்பது தான் இந்த வேதனைக்குக் காரணம் என்ற ஒரு உணர்வு அவளைப் பிடித்துக்கொண்டது. தோழிகள் இருந்தால் தன் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். மன பளு இறங்கும். வேலைக்காக ஊரை விட்டு ஊர் வந்த அவளுக்கு அங்கு நெருக்கமான தோழமை இன்னும் அமையவில்லை. புதிதாக சந்தித்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

ஆபிசில் நுழைந்ததும் ஸ்ரீனி கண்ணில் தென்பட்டான். இன்று காலை அவனுடன் ஒரு வேலை விஷயமாக சந்திக்க வேண்டும் என்று நினைவிற்கு வந்தது. தன்  மேசையிலிருந்து குறித்து வைத்துக் கொண்டிருந்ததை கையில் எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றாள். அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது அவன் "நான் நியூ யார்க்கிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும் அவள் கண்கள் அகண்டன.

"என் நண்பர் கதிர் என்பவரும் அங்கே தான் இருக்கிறார்... ஆனால் எங்கேன்னுதான் தெரியவில்லை." கண்கள் மங்கின.

"நிறைய இந்தியர்கள், தமிழர்கள் இருக்கிறார்கள்."

சற்றென்று வேலையைப் பற்றி பேச ஆரம்பித்தாள். முடிந்த பின் எழுந்த பொழுது, ஒரு ஏக்கத்துடன் கேட்டாள், "அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது வழி?"

"பேஸ்புக்கில் இல்லையா?" அவள் தலையசைத்தாள்.

"ரொம்ப நெருங்கினவரா?"

அவள் கண்கள் அவனை வருத்தத்துடன் பார்த்தன. "தொடர்புகொள்ள வழியே இல்லையென்றால் எப்படி நினைத்துக்கொள்வது என்று தெரியவில்லை," என்ற அவள் மனக்கலக்கம் அவளையும் அறியாமல் வெளியே வந்து விட்டது. "சாரி, என்னையும் அறியாமல் எதையோ உளறி விட்டேன்."
ஸ்ரீனியின் பரிவான கேள்விதான் அவளை இப்படிப் பேசச் செய்தது என்று புரிந்துகொண்டாள். அவனிடம் சிறிது ஜாக்கிரதையாகவே பழகினாள்.

ஆனால் அவன் அவ்வப்பொழுது கதிரைப்பற்றிய விவரங்கள் அவளிடம் வாங்கிக்கொண்டான். தன்னால் முடிந்த வரை அவனைத் தேடுகிறான் என்று புரிந்துகொண்டாள். "நாங்கள் சிறு வயதிலிருந்து நண்பர்கள்..." அவன்  அவளைக் கண்களில் கேள்வியுடன் பார்த்தான். "அதற்கும் மேல் என்றே எடுத்துக்கொள்ளலாம். நியூ யார்க் போன பிறகு சில நாட்கள் விடாமல் தொடர்பு கொண்டான். ஆனால் போன சில மாதங்களாக ஒரு செய்தியும் இல்லை. இங்கு இருந்த அவன் தாயும் திடீரென்று ஒரு நாள் அங்கு கிளம்பிச் சென்று விட்டாள்."

அவனிடம் பேசப்பேச, தான் எவ்வளவு முட்டாள் என்பதை அறிந்து கொண்டாள். ஸ்ரீனி அவள் சொல்வதைக் காதுக் கொடுத்து கேட்டுக்கொள்வதே அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அவன் ஒருநாள், "உன்னை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை," என்று சொன்னதும் அவளுக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது.

"உன்னை ஒரு நண்பனென்று தான் பழகுகிறேன்."

"கதிரையே நினைத்திருப்பதால் உனக்கு நாம் எவ்வளவு நெருங்கி விட்டோமென்று தெரியவில்லை... அவன்... இதை நான் எப்படி சொல்வது..."

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று யூகித்த அவள், "அவனைப் பற்றி உனக்கொன்றும் தெரியாது...! ஏதும் பேசி என் மனதைக் கலைக்கப்பார்க்காதே!" என்றாள்.

"எனக்கு அவனை நன்றாகவே தெரியும்," என்று அவன் சொன்னதும் அவள் ஆடிப்போனாள். "அவன் இப்பொழுது வேலை விஷயமாகக் கலிஃபோர்னியா சென்று ஒரு வருடம் ஆகிறது. ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்காக நீ இங்கு ஏங்கிக்கொண்டு உன் வாழ்க்கையை வீணடிக்கிறாய். அவன் தாயும் அவனுடன் தான் இருக்கிறாள் ."

தலை சுற்றியது அவளுக்கு. தண்ணீர் கொடுத்து அவளைத் தாங்கி இருந்தான் ஸ்ரீனி.

இது எதிர்பார்த்ததுதான்  என்று  அவள் உள் மனம் உறுத்தியது. ஸ்ரீனியை நெருங்கித்தான் விட்டோம் என்றும் தோன்றியது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வைராக்கியம் பிறந்ததால் ஸ்ரீனியை மணந்தாள்.

சந்தோசமாக இருந்தாள்.

செய்தித்தாளில் ஒரு நாள் ஒரு இளம் பெண், சுவர்ணா, தன் காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைப் படித்துச் சலனமடைந்தாள். "நீ இருந்திருக்காவிட்டால் எனக்கும் இந்த கதிதான்," என்று ஸ்ரீனியைக் கட்டிக்கொண்டாள்.

தன் மாஜிக்காதலி சுவர்ணா இப்படி ஒரு முடிவெடுத்துக்கொள்வாள்  என்று அவன் ஒரு பொழுதும் நினைக்கவில்லை! தன் கதையையே கதிரின் கதையாக கதைத்த ஸ்ரீனி தன் போட்டோ அந்த செய்தியுடன் வராததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

Friday, July 1, 2016

தினம் ஒரு போராட்டம்

வைரம் போல் 
ஜொலிப்பேன் 
உன் கண்களைப்   
பறிப்பேன் 
கண் கூசுமென்று 
என்னைப் பூட்டாதே 
என் சுதந்திரத்தை 
நீ பறிக்காதே 


Saturday, May 21, 2016

நாட்டிலே மழை

நிலவை மறைத்தது மேகம்
அதை கண்டு சிலிர்த்தது தேகம்
கோடையில் மழையின் வேகம்
உற்சாகத்தில் பறந்தது விவேகம்

மேகமும் திரண்டது
பூமியும் குளிர்ந்தது
உடலும் தணிந்தது
புத்துணர்ச்சி ததும்பியது

ஆஹா, கதிரவன் நகைத்தான்
என்றும் நிலைப்பவன் நான்தான்
என்று; வெப்பத்தை அழைத்தான்
மேகங்களைக் கலைத்தான்

கத்திரி வெயில் திரும்பியது
போது மே என்று மனம் கதறியது
உஷ்ணத்தில் உடல் கரைந்தது
அதை நினைந்து மனம் கரைந்தது

Monday, March 7, 2016

பெண்

தாய், தெய்வம் என்றுப் போற்றப்படுவாள்
இலக்ஷ்மி என்றும் பூசிக்கப்படுவாள்
தியாகத்தின் வடிவம் என வணங்கப்படுவாள்
அரக்கிப்போல் கூடக்காட்சி அளிப்பாள்

பூப்போல் நீ என காப்பாற்றப்படுவாள்
'அம்மா தாயே' என்று ஒடுங்கச்செய்வாள்
உலகம் தீயது என்று காக்கப்படுவாள்
'போடி வெளியே' என்றும் உதைக்கப்படுவாள்

பிறக்கும் முன்னே அழிக்கப்படுவாள்
பிறந்தபின் ராணிபோலும் வளர்க்கப்படுவாள்
உன் கடமை இதே என்று அடக்காப்படுவாள்
இதுதான் இறகு என்று பறக்கவும் செய்வாள் 

விதி என்று பெருமூச்சு விட்ட அவள்
இன்று சீரி சிங்கம் போல் எழுவாள்
தெய்வம் அரக்கி இரண்டும் இல்லை என்பாள்
 என்னை மனுஷியாக வாழ விடு என்று கெஞ்சுவாள் 

Wednesday, February 17, 2016

பழுது - கவிதை

ஒரு பழைய துணியை எடுத்தாள்
வீட்டில் படிந்த தூசியை துடைத்தாள்
வருபவர்கள் புகழ்வதை ரசித்தாள்
அவள் பெருமையில் பூரித்தாள் 

முகம் கழுவி அதற்கு அழகு சேர்த்தாள்
கண்ணில் மை, இதழ்களில் நிறம் பூசினாள்
ஆடையின் பளபளப்பால் தன்னை அலங்கரித்தாள்
 நகைகளின் ஜொலிப்பில் தன்னை மறந்தாள்

சிப்பந்தியிடம் கடிந்துக்கொண்டாள்
தோழியுடன் வம்பு பேசினாள்
இளக்காரம் செய்து நகைத்தாள்
மனதில் படிந்த பழுதை துடைக்க மறுத்தாள்.