Thursday, November 24, 2016

பாகப் பிரிவினை

ஏற்கனவே சந்தீப் ஊரிலில்லாதது நம்ரதாவின் வேலையை மிகவும் பாதித்தது. காலையில் தன் இரு மகன்களையும் பள்ளியில் விடுவது, மாலையில் ட்யூஷன் முடிந்த பின் கூட்டிக்கொண்டு வருவது அவனுடைய பொறுப்பு. அவள் காலையில் சமையல் முடித்து, பிற்பகல் உணவு கட்டி அனுப்பிய பிறகு தன்  அலுவலகத்திற்குச்சென்று, பிற்பகல் திரும்பும் பொழுது சஞ்சித்தையும் மாதவையும் ட்யூஷனில் விடுவது அவளுடைய பொறுப்பு. ஒரு வாரம் சந்தீப் ஊரில் இல்லாத நேரத்தில் எப்படியோ சமாளித்து விடலாம் என்று நினைத்தவள், திணறிவிட்டாள். வேலைக்காரி வராதது ஒரு கூடுதலான தலைவலி.

ஞாயிறு வந்தது, அப்பாடா என்று ஓய்வெடுக்கலாமென்றால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வளரும் பசங்களுக்கு இன்று ஒருநாள் தான் வகையாக ஏதாவது செய்து கொடுக்க முடியும். ருசியாக சமைத்து,  பாத்திரங்களை தேய்த்து, வீட்டை ஒழித்து வந்த பிறகும் தோய்க்க வேண்டிய துணிகள் அவளை, "எங்களுக்கு விடிவுகாலம்  எப்போ?" என்பது போல் கூடையில் நிரம்பி வழிந்தன. வாஷிங் மெஷின் தான் தோய்க்கும். இருந்தாலும் அதில் போட்டு, கொடியில் இருந்த துணிகளை மடித்து, செடிக்கு தண்ணி விட்டு, வீடு கூட்டி முழுகி ... அப்பப்பா, தலை சுற்றியது.

"கொஞ்சம் அம்மாக்கு ஒத்தாசை செய்ங்க. கூட்டி முழுகுங்க," என்று தன் மகன்களிடம் உத்தரவிட்டாள். அவர்கள் ஒத்தாசை செய்ய கூடிய வயதுதான். பெரியவனுக்கு பதினாலு வயது, சிறியவன் பன்னிரண்டு. துணியெல்லாம் மடித்து வைத்து விட்டு சோஃபாவில் உட்கார்ந்தபடியே கண் அயர்ந்தாள்.

திடீரென்று அவள் மகன்கள் உரத்த குரலில் சண்டை போடுவது கேட்டு அதிர்ந்து எழுந்தாள். மாதவன் அழுது கொண்டிருந்தான். 'என்ன' என்பது போல் சஞ்சித்தைப் பார்த்தாள்.

"வெறும் நடிப்பு!" என்று அவன் கடுகடுத்தான்.

"இல்ல!" என்று மாதவ் குரல் கொடுத்தான்.

பெருமூச்சு விட்டாள்  நம்ரதா. "என்ன நடந்தது?"

"அவன் என்ன அடிச்சான்," என்று மாதவ் இன்னும் அழுதான்.

மாதவ் நிஜத்தைச் சொல்கிறான் என்று தெரியும். ஆனால் அது முழு உண்மை அல்ல. சஞ்சித்தைப் பார்த்தாள்.

"அவன் கிச்சனையும்  பெட் ரூமையும் பெருக்கறேன்னு சொன்னான். இப்போ கிச்சன் வாசல்ல பண்ண மாட்டேன்னு சொல்றான். இவன் எப்பவுமே இப்படித்தான். அப்புறம் நான் குவிச்சு வெச்ச குப்பை மேல வேணும்னே ஓடி அத பறக்க வெக்கறான்!"

"இல்ல!" என்று மாதவ் மறுத்தான். இந்த வாதம் விட்டால் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் போல் இழுத்துக்கொண்டே போகும் என்று அறிந்தவளுக்கு களைப்பும் கூடச் சேர்ந்து கோவத்தை உண்டாக்கியது. கண்களில் பொறி பறந்தது, ரௌத்திர தாண்டவம் ஆட ஆயத்தமானாள்.

"ஒரு சாண் அளவு தரையை பெருக்க இவ்வளவு பெரிய போரா? உங்களுக்கெல்லாம் நான் பார்த்து பார்த்து செய்யல? ஒரு வேளை வீட்டுல கொஞ்சம் ஒத்தாசைச் செய்ய சொன்னா இப்படியா நடந்துக்கறது?" யாரிடம் நியாயம் என்று சொல்வது தெரியாமல் முழித்த அவள், "அந்த நாலு டைல பங்கு போட்டு கொடுகட்டமா?" என்று உணர்ச்சியே இல்லாத சஞ்சித் முகத்தையும், கண்ணீர் வடிக்கும் மாதவ் முகத்தையும் முறைத்துப் பார்த்துக்கேட்டாள்.

கேட்ட அவளுக்கே கோவம் மாயமாக மறைந்தது. சஞ்சித்தும் மாதவும் நகைத்தனர். மூவரும் அந்த டைல்களை பங்கு போடுவதை நினைத்து சிரித்தனர்.

"நீ பெருக்கு, நீ துடை," என்று நீதி வழங்கி நம்ரதா தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.


No comments:

Post a Comment