Saturday, September 8, 2018

உறவுகள் ஜாக்கிரதை - 2

முதல் பாகம் படிக்க 

சஞ்சீவ் இனிப்புடன் வந்தான்.

"என்ன, வேற வேலை கடைச்சிடுத்தா?" என்று ராதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.


"ஒரு விதத்தில் அப்படியும் சொல்லலாம்," என்று சஞ்சீவ் முகத்தில் சந்தோஷம் ஜொலித்தது. ராதா முகத்தில் எழுந்த கேள்விக்கு அவன் புன்னகையுடன், "சிங்கிளா இருந்த எனக்கும் ஒரு ஜோடி கிடைச்சுட்டாங்க."

"சூப்பர்!" என்று ராதா அவனை வாழ்த்தினாள். மனதில் எதோ இடித்தது, ஆனால் தன்னை மணக்க போகும் அஸ்வினை நினைவுப் படுத்தி அதை நிராகரித்தாள். அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் நிச்சியதார்த்தம். அதற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டிருந்தன. அஸ்வினுடன் பேசவேண்டும் என்று ஆசை, ஆனால் நிச்சயம் ஆகும்வரை காத்திருக்கும்படி அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.

"எப்ப  கல்யாணம்?" என்று சஞ்சீவைக் கேட்டாள்.

"நேர கல்யாணம் தான். பிரியா நாலு மாதங்கள்ல வேலை  விஷயமா அமெரிக்கா போக போறாங்க. ஆறு மாதங்கள் அங்க இருக்கணுமாம். அதனால சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிடலாம்னு சொன்னாங்க."

"பேஷ் பேஷ்!" என்று ராதா உற்சாகமாகச் சொன்னாள். அடுத்த சில நாட்களில் அவர்களுக்குள் தத்தம் வரன்களை பற்றின பேச்சு நாட்களை கழிக்க உதவியது. பிரியா ஒரு பெரிய ஐ டி கம்பனில வேலை செய்வதினால் அதிகமாக சஞ்ஜீவுடன் பேச முடியவில்லை என்பதை ராதா புரிந்துகொண்டாள். திருமணம் ஆன பின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற தன்னுடைய  பயத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். அவனுடைய ஆதரவான வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக இருந்தன. எந்த மாதிரி பிரியாவுக்கு அன்பு பரிசுகள் வாங்க வேண்டும் என்று அவனுக்கு உதவினாள்.

அவளுடைய நிச்சியதார்த்தத்தன்னிக்கு அவன் அவளுக்கு ஒரு பட்டு துப்பட்டா அன்பு பரிசளித்தான். "வாவ்!! ரொம்ப அழகா இருக்கு," என்று அவள் அதை தன் அலங்கார உடை மேலே போட்டுப்பார்த்து அருகில் நிற்கும் அஸ்வின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் இதழ்களால் மட்டுமே புன்னகைத்தான்.

மறுநாள் மறுபடியும் சஞ்ஜீவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள். "நீங்கதான் எப்படி பார்த்து வாங்கணும்னு சொல்லிகுடுத்தீங்க," என்று அவன் அவளுக்கே எல்லா பெருமையையும் சேர்த்தான்.

ராதா அஸ்வினுடன் இன்னும் ஆழமாக பழக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாள். அவனுக்கு போன் செய்து பேசத் தொடங்கினாள்.  அவ்வப்பொழுது அவளுடைய வெட்கச் சிரிப்பு கேட்கும். அவளுக்காக சந்தோஷமாக இருந்தாலும் சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும் சஞ்ஜீவுக்கு. அவள் அஸ்வினோடு பேசும்போது கவனிக்கக் கூடாது என்று எண்ணினாலும் கவனம் அங்கேயே ஈர்க்கப்படும். அதனால் அவளுக்கு அஸ்வினுக்கும் ஏதோ  கருத்து வேறுபாடு என்றதை உணர்ந்தான். என்ன என்று கேட்க ஆவலாக இருந்தாலும் தன்னையே அடக்கிக் கொண்டான். அவள் மிகவும் கலங்கி இருப்பதை கண்டும் காணாத மாதிரி வேலையில் கவனம் செலுத்துவது போல் நடித்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவள் வாழ்க்கையில் மேலும் மேலும்  புயல் அடிப்பது போல் இருந்தது. அவனுக்கு அவளிடம் ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது, ஆனால் எப்படி என்று தெரியவில்லை. ஒரு நாள் அவள் அழுவது போல்  தோன்றவே அவனால் சும்மா இருக்க முடியவில்லை. "ராதா... ஏதாவது பிரச்னையா?"

"சஞ்ஜீவ், நாங்கள் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்."

சஞ்ஜீவுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்றீங்க?" என்று அதிர்ச்சியடைந்தான்.

தயங்கித் தயங்கிச் சொன்னாள். "அஸ்வினுடைய தாய் தனிக்குடித்தனத்தை பத்தி பேசினதுனால நான் ஒரு நாள் அஸ்வின் கிட்ட அத பத்தி கேட்டேன். வர்றதுக்கு முன்னாடியே எங்களை பிரிக்க பார்க்கறயான்னு என்ன ரொம்ப கேவலமா கேட்டுட்டார். ஏன் இப்படி பேசறீங்க, உங்கம்மாதானே சொன்னாங்கன்னு கேட்டதுக்கு அப்படி இல்லவே இல்லைன்னு... அதுல முதல்ல ஆரம்பிச்சிது. சரி, எனக்கு அது முக்கியமில்லன்னு சொல்லிட்டேன் அதனால சமாதானம் ஆச்சு. ஆனா அவர் என்ன ரொம்ப சந்தேகப்பட ஆரம்பிச்சார். எது சொன்னாலும் தப்பாவே பார்க்கறா மாதிரி இருந்துது. கடைசில..." தன்னையும் மிஞ்சி அழுகை வரவே முகத்தை மூடிக்கொண்டாள். "மஹாபலிபுரத்துக்கு ஒரு வீகென்ட் போகலாம்னு கூப்பிட்டார். முதல்ல எனக்கு புரியல ஆனா அப்புறம்...!" கூச்சத்தில் வாயை மூடினாள். "அதவிட , பெண்களுக்கு இதெல்லாம் சகஜம்... அவரே அப்படி உறவுகள் வெச்சிகிட்டதா சொன்னார் சஞ்ஜீவ்."

சஞ்ஜீவால் அவளுடைய மனோ நிலை புரிந்துகொள்ள முடிந்தது. "நல்ல வேளை வெளிப்படையா சொல்லிட்டார், இல்லையா?" என்று அஸ்வின் சார்பாக பேசினான்.

"ஆமாம், அவர் என் மேல சந்தேகப்படாம இருந்தா அப்படி எடுத்துக்கிட்டிருப்பேன். ஆனா அவர் நான் வெறும் வேஷம் போடறேன்னு சொன்னதுதான் எனக்கு தாங்க முடியல. எதை எடுத்தாலும் சந்தேகப்படறவர் கூட நான் எப்படி வாழ முடியும்?"

அடுத்த சில நாட்களில் அவளிடம் கண்ட மாற்றத்தில் பழைய ராதா எங்கோ காணாமல் போனது போல் இருந்தது. ஏமாற்றமும் கசப்பும் தெரிந்தது. "மன்னிச்சிக்கோ... நான் எதோ தெரியாம..." என்று அவன் ஆரம்பிக்கும் போது, "ச்சீ சஞ்ஜீவ், இதில உங்களுக்கு எந்த பங்கும் இல்ல. அவரோட ரூபத்தையே மெதுவாதானே நானும் பார்த்தேன்..." என்று பெருந்தன்மையுடன் சொன்னாள் ராதா. சஞ்ஜீவின் இல்லற வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று அவனை பிரியாவுடன் நேரம் கழிக்க தூண்டினாள். ஆனால் இவர்கள் எடுக்கும் முயற்சியில் அவள் ஒத்துழைக்க முடியாமல் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து பின்வாங்கினார்கள்.

அவனுடைய திருமணம் ஜே ஜே  என்று நடந்தது. அவர்கள் தேன்நிலவுக்கு போயிருக்கும் போது தனக்கு  ஆபீசில் எப்படி நேரம் கழியும் என்று கவலைப்பட்ட ராதாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. சஞ்ஜீவ் தன் இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவள் அவனிடம் வேகமாகச் சென்றாள். அவனுடைய முகம் வெளிறியிருப்பதைக் கண்டு பிரமித்தாள். "என்ன சஞ்ஜீவ்? ஏதாவது வேலைல பிரச்னையா? என்கிட்டே சொல்லியிருக்கலாமே? நீங்க ஏன் வந்தீங்க?"

அவன் கண்களில் நீர் ததும்பியது. "சஞ்ஜீவ்!" என்று கதறினாள்.

"மோசம் போயிட்டேன், ராதா!" என்று குரல் நடுங்கக் கூறினான். "பிரியாக்கு ஒரு காதலன் இருக்கானாம். அவளோட பெற்றோர்கள் அவனை ஏத்துக்காததுனால என்ன கல்யாண செஞ்சிக்க ஒப்புகிட்டாளாம். இப்ப நான் அவள விவாகரத்து செய்யணுமாம். இனி அவ பெற்றோருக்கு அவ மேல எந்த அதிகாரமும் இல்லையாம்..."

இடி விழுந்தாற்போல் இருந்தது ராதாக்கு. அவன் தோளில் ஆதரவாகக் கையை வைத்தாள். அவன் அவள் கையைப் பற்றி மெளனமாக கண்ணீர் விட்டான். அவள் கண்களிலும் நீர் வழிந்தது.

(முற்றும்)



No comments:

Post a Comment