Sunday, June 9, 2019

பயணங்கள் தொடரும்

ஸ்ரீரூபா ரயிலில் ஏறி ஜன்னல் அருகில் அமர்ந்தாள். அவளுடையது அதன் பக்கத்தில் இருந்த சீட், ஆனால் அந்த இருக்கைக்கு உரிமையாளர் வரும் வரை வெளியே ஸ்டேஷனில் நடப்பதை வேடிக்கை பார்த்து நேரத்தை கழிக்கலாம் என்று எண்ணினாள்.


ரயில் கிளம்பும்வரை யாரும் வந்து அவளை எழுந்துகொள்ள சொல்லவில்லை. நிம்மதியாக பொழுது போகும் என்ற எதிர்பார்ப்புடன் இன்னும் தளர்ந்து அமர்ந்தாள். ஆனால் அந்த சுகத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஒருவன் பையுடன் இடத்தைத் தேடிக்கொண்டு வந்து விட்டான். மேலே இருக்கும் நம்பரை தன் டிக்கெட்டில் இருந்ததுடன் ஒப்பிட்டு பார்த்து அவளை பார்ப்பதற்குள் அவளே எழுந்தாள். "உங்களுடைய இடம். நான் யாரும் வரவில்லை என்று நினைத்து உட்கார்ந்தேன். இதோ..."

"இல்லை, பரவாயில்லை, உங்களுக்கு வேண்டுமென்றால் அமருங்கள். நான் தூங்கத்தான் போகிறேன்," என்று அவனும் பவ்யமாக உபசரித்தான். அடுத்ததாக என்ன செய்வது என்று அவள் குழம்பினாள், ஆனால் வந்தவன் அவளுடைய இடத்தில் அமரவே அவள் மீண்டும் ஜன்னல் அருகே அமர்ந்தாள். பையிலிருந்து ஒரு கதை புத்தகத்தை எடுத்து, அடையாளமாக வைத்திருந்த காகிதத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

அவன் எட்டி புத்தகப் பெயரை பார்க்க முயல்கிறான் என்று உணர்ந்து அதை அவனுக்கு காண்பித்தாள். "ஓ, நல்ல எழுத்தாளர். இவருடைய மற்ற புத்தகங்களை படித்திருக்கிறீர்களா?" என்று அவன்  கேட்டான் . தன்னுடைய பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான். அதே எழுத்தாளர், மற்றொரு புத்தகம்.

அதை ஆவலுடன் எடுத்துப்பார்த்தாள் ஸ்ரீரூபா. "இல்லை, இதை படித்ததில்லை. முதன்முறையாக இந்த எழுத்தாளரை படிக்கப் போகிறேன்." பின் அட்டையிலில் இருக்கும் சுருக்கத்தைப் படித்தாள்.

"அவருடைய கதைகள் யதார்த்தமாக இருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையே அவ்வளவு அழகாக கோர்த்திருப்பார்."

அவள் படிக்கும் புத்தகத்தின் கதையும் தன் வாழ்க்கையைப் போலவே என்ற எண்ணம் ஸ்ரீரூபாக்கு ஏற்பட்டதுண்டு. "ஆமாம். இதில் ஒரு கேரக்டர் அப்படித்தான், என்னுடைய பாஸைப் பற்றி படிக்கிறது போல இருக்கும். எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து, நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முயல்வாள். கொஞ்சம் எரிச்சல்  வரும். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனமா இருப்பாள். தான் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவாள்! தான் செய்யாமல் விட்டதற்கு மற்றவர்களை பொறுப்பாக்குவாள். மகா போர்!"

அவன் சிரித்தான். "ஆமாம், எனக்கும் அப்படி ஒருவரை தெரியம்... அவரும் பாஸ் மாதிரிதான்!" அவன் சொன்ன விதத்தில் ஒரு விரக்தியும் கசப்பும் தெரிந்ததனால் அவளுக்கு இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் முன் பின் தெரியாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிக ஆர்வம் காட்டுவது அழகில்லை என்று திசையைத் திருப்பும் வகையில், "பெங்களூரு வேலை விஷயமாக போகிறீர்களா?" என்று கேட்டாள்.

"பெங்களூரில்தான் வேலையே!"

"ஓ, நீங்கள் சென்னைவாசி இல்லையா?"

"சென்னை சொந்த ஊர். வளர்ந்ததெல்லாம் அங்கேதான். புகுந்த இடம்தான் பெங்களூரு," என்றான்.

"பெண்களுக்குத்தான் புகுந்த இடம், பிறந்த இடமெல்லாம் ," என்று அவள் கூறும்போது அவள் குரலிலும் விரக்தி தெரிந்தது.

"என் நிலைமைக்கு அது பொருந்தும். முதலாளியின் மகளை மணந்தேன், இப்பொழுது அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஆடுகிறேன்."

"எல்லா ஆண்களும் சொல்வதுதான்  இது. ஆனால் வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சும்மாவா சொல்வார்கள்? உங்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்," என்று அவள் விளையாட்டாகக் கூறினாள். "நான் கொஞ்சம் பளிச்சென்று பேசுவதனால் என் கணவர் பாவம் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் பேசாமல் இருந்து எவ்வளவு சாதிக்கிறார் என்று யாருக்கும் தெரியாது," என்று கூறினாள். ஒருவித ஏமாற்றம் அவள் மனதில் இருப்பதை தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தினாள். அவன் அனுதாபத்துடன், "என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். என் மனைவியும் அமைதியானவள்தான். அஹங்காரமோ, திமிரோ கிடையாது. ஆனால் தான் நினைத்ததையே நடத்திக் காட்டுபவள்..."

இப்படி ஆரம்பித்த உரையாடல்,  குடும்பம், வேலை, உறவுகள் என்று பல கோணங்களை தொட்டுவிட்டது. நேரம் கழிவதே  தெரியவில்லை. பல காலங்களாக மனதில் அடக்கி வைத்திருந்த ஏமாற்றங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாத இன்பங்களையும் பற்றி பேச ஏதோ இந்த ரயில் பயணத்திற்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தது போல் தோன்றியது.

பெங்களூரு வந்துவிட்டதே என்று தோன்றியது. பயணம் இன்னும் தொடராதா என்ற ஏக்கம் எழுந்தது.

"மீண்டும் சந்திப்போம்," என்று பிரிந்தார்கள். தான் இவ்வளவு மணி நேரம் பேசியவரின் பெயர் கூட தெரிந்துகொள்ளாமல் பேசினார்கள். போன் நம்பர் கூட வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் மறக்கவும் முடியவில்லை. ஏதோ ஒரு ஜன்மத்தில்  நிச்சயமாக ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும். பேசியதே ஆறுதலாக இருந்தது, ஒரு இனிமையான நினைவாக அவர்கள் மனதில் பதிவாயிற்று.

இப்படித்தான் சில பயணிகள் சந்தித்து பிரிகின்றனர், ஒரு ஜன்மத்தில் ஒரு முறையே சந்திக்கின்றனர், மீண்டும் சந்திக்கும்போது இன்னார் என்று அறியாமலேயே இணைகின்றனர், மீண்டும் பிரியத்தான்.






2 comments: