Sunday, June 7, 2015

வாழ்க்கையின் லட்சியம்


ஒரு 22 வயதே ஆன இளைஞன், வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாமல் மாய்ந்தான் என்ற செய்தி நம்மை ஆட்டி வைத்தது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான், ஆனால் இதில் ஆச்சரியமென்ன?

இன்று நம் வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், எல்லாருமே பணம் சம்பாதித்தும் அதை செலவழிக்க வழியை தேடியும், அதை ஈடு கட்ட மேலும் இன்னும் சம்பாதிப்பதிலே தானே நேரத்தை செலவழிக்கிறோம்? டார்கெட் என்று நம் தலையில் நம் மேலாளர்கள் ஏதோ கணக்கு போட்டு ஒரு எண்ணை கட்டி விடுகிறார்கள். அது கொண்டுவந்தால் மேலும் இன்சென்டிவ் என்ற சலனத்தையும் நம் மனதில் ஊசி போல் நுழைத்து விடுகிறார்கள். வேலையில் உயர்வையும் அந்த டார்கெட்டை சந்திப்பதுடன் பிணைத்துவிடுகிறார்கள். மொத்தத்தில் பணம் செய்யும் ஒரு கருவியாகி விடும் நம் வாழ்க்கையில் அழுத்தமே நிஜமாக நிற்கிறது.

இந்த சிந்தைனைகளுடன் நான் போராடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீடியோ பார்த்தேன் - ஒருவர் 2 லக்ஷம் சம்பளம் கிடைக்கும் தருணத்தில், போதுமடா சாமி உனக்கு அர்பணித்த அடிமை வாழ்க்கை என்று அந்த வேலையில் இருந்து தப்பித்து ஓடி விவசாய துறையில் இறங்கி இருக்கிறார். இப்படி பல நல்ல வேலைகளில் இருக்கும், 30இலிருந்து 50 வயதுவரையானவர்களை இண்டர்வ்யு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தன் திறமைகளை அவர்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சோஷியல் செக்டரில் இறங்குகிறார்கள்.

நம் புராணங்களில் எதையுமே அளவோடு செய் என்ற அறிவுரை ஓங்கி நிற்கிறது. சம்பாதிப்பது என்பது உடலை காத்து, மனது, ஆத்மாவுக்கு வேண்டிய நற்பணிகளையும், நல்ல சிந்தனைகளை வளர்க்கவும்  வழி தேடுவதற்கே. ஆனால் இன்று, சம்பாதிப்பதொன்றே நம் வாழ்க்கையின் குறிகோளாக மாறி விட்டது. அதை வேண்டாம் என்று ஒதுக்குபவற்களுக்கு வேண்டிய தைரியமும், வாழ வழியும் கிடைப்பது அரிது. விலைவாசியோ தாண்டவமாடுகிறது. எங்கே பார்த்தாலும் பணத்தின் ஆதிக்கம்.

ஒரு சக்கிரவ்யுஹத்தில் மாட்டிக்கொண்ட பயமே நம்மை இதை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறது. நம் குழந்தைகளையும் நாம் அதே வழியில் தள்ளுகிறோம்.

வாழ்க்கையின் லட்சியம் என்ன - இதை சிந்தித்து, சம்பாதிப்பது மட்டுமல்ல என்று அறிந்து, மற்ற மனதிற்கு இதமான, நம் ஜீவனுக்கு பயனான விஷயங்களில் ஈடுபட நாம் வழி வகுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்த 22 வயது இளைஞனை போல பல இளைஞர்களை நாம் பலியாகுவதை பார்க்கத் தான் போகிறோம். சில நாட்களில், இப்படி ஒரு செய்தி நம்மில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, என்ற பயமும் உண்டாகிறது.


  

Thursday, March 26, 2015

கள்ளக் காதல்

"அடுத்த சந்திப்பு எப்போ?" விஜயன் கேட்டான்.

"இது என்ன கேள்வி! வேலன் அடுத்த தடவ ஊருக்கு போகரச்சே தான்..." என்று சொல்லி ராதா படுக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் பின்னழகை ரசித்தவாறே விஜயன் பெரு மூச்சு விட்டான். "இப்படி மாசத்துக்கொரு தடவ சந்திக்கறது கஷ்டமா இருக்கு."

"என் மீது காதல் கொண்டாயோ என் மன்னவனே?" என்று ராதா நகைத்தாள்.

அவன் ஒரே எட்டில் எழுந்து அவள் மீது பாய்ந்து அவளைப் பின்னாடியில் இருந்து கட்டிப்பிடித்தான். "என்ன பேர் வேண்ணா வெச்சுக்கோ. இப்போல்லாம் வீட்ல கூட உன் ஞாபகம் தான்."

எதிரே இருந்த கண்ணாடியில் கண்கள் சந்தித்தன. "எசகு பிசகா எதையாவது செஞ்சு வேச்சிடாதே," ராதா சிரித்துக்கொண்டே எச்சரித்தாள். "உமாக்கு சந்தேகம் வரக்கூடாது."

"பேசாம எங்கேயாவது ஓடி போய்டலாம்."

"சீ! ஓடற வயசா இது!" என்று சிரித்தாள்.

"என்ன வயசாயிடுத்து இப்போ உனக்கு? உன் டீனேஜ் பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்க," என்று சீண்டினான்.

மனதுக்கு இதமாக இருந்தது இந்தப்பேச்சு. "இப்படியே பேசிண்டிருந்தா நீ உன் மீட்டிங்குக்கு போனா மாதிரி தான்." அவனைத் தள்ளி விட்டு உடைகளை அணிந்து கிளம்பினாள் ராதா.

தனித்தனியாக வெளியேறினார்கள். போன இரண்டு வருடங்களில் எப்படி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் சந்திப்பது என்பதற்கு நிறைய வழிகள் கண்டுபிடித்தவர்கள் இவர்கள். ஒரு புத்தகமே போடலாம். குடும்ப நண்பர்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள் - குடும்பத்துடன். எங்கேயோ, எப்பவோ, அவர்கள் மனங்கள் பிணைந்து விட்டன - கவற்ச்சியில். அது இப்படி உருவம் எடுத்தது. குடும்பத்தை விடவும் இஷ்டமில்லை, இந்த உறவை அறுக்க மனதும் இல்லை. உல்லாசம் ஒன்றுதான் இப்பொழுதிற்கு ஓங்கி நின்ற குறிகோள்.

நடக்கற வரைக்கும் நடக்கட்டும் என்ற மனப்பான்மை.

**

எப்பவும் போல் அந்த ஞாயிறு ராதாவின் கணவன் வேலன் ஊரிலிருந்து திரும்பிய பின் குடும்பங்களுடன் சந்தித்தனர். விஜயன் மகன் ஆதியும், ராதா  மகள் பூஜாவும் தான் இந்த முறை எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

"அம்மா, அப்பா," என்று குசல விசாரணைக்குப் பிறகு ஆதி ஆரம்பித்தான். "அங்கிள் ஆண்டி," என்று ராதவையும் வேலனையும் பார்த்துச்சொன்னான்.

"என்ன, பீடிகை பலமா இருக்கு," என்று வேலன் சிரித்தான்.

"ஆமாம்பா," என்று பூஜா ஆதி பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். ராதா மனம் சஞ்சலப்பட்டது.

"நானும் ஆதியும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறோம்," என்று பூஜா தைர்யமாக பேசினாள். ராதாக்கு தலை சுற்றியது. "பூஜா. உனக்கு இப்போதான் 18 வயது முடிந்திருக்கு!"

"கவலப்படாதம்மா, நாங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கணம்னு சொல்லல! ஆனா, எங்களுக்குள்ள இருக்கற காதல வச்சு நாங்க கல்யாணத்த நிச்சயம் பண்ணிக்கலாம்னு நினைக்கறோம். போன இரண்டு வருஷமா எங்களுக்குள்ள ஏற்பட்ட காதல் இப்போ வளர்ந்து எங்கள வாட்டுது. ஆனா நாங்க அவசர பட விரும்பல. கல்யாணம் நாங்க படிச்சு முடிச்சப்பறம்தான்," என்று சிரித்துக்கொண்டே பூஜா சொன்னாள்.

ராதாவும் விஜயனும் தலையில் விழிந்த இடியை பொறுக்கவும் முடியாமல், வலியை சொல்லவும் முடியாமல் திணறினர்.

Sunday, February 22, 2015

திறனோ திறன்

"ம், ஸ்ருதி நன்னா பிடி," குரு அதட்டினார். கற்பகம் முயற்சி செய்தாள். பிருந்தா செய்வது போல பாவனை செய்தாள். "பலே" என்று குரு சொல்லும் பொழுது தனக்கும் சேர்த்துதான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

"போட்டில கலந்துக்க போற. மனசுல அந்த தெய்வத்தை நெனச்சிண்டு பாடு. பரிச நெனச்சிண்டு இல்ல," குரு மேலும் கற்பகத்திற்கு உபதேசித்தார். "வெற்றி உனக்கே," என்றும் ஆசிர்வதித்தார்.

கற்பகம் வழி முழுக்க தான் கற்றுக்கொண்ட பாடத்தையே மனுதிலேயும், மெதுவாகவும் பாடிப்பார்த்துக்கொண்டாள். பிருந்தாவோ மனதில் பொறுமிக்கொண்டே வந்தாள். வெற்றி உனக்கே என்று அவர் கற்பகமிடம் மட்டுமே சொன்னார் என்பதை அவளால் மறுக்க முடியவில்லை.

"ஏண்டி முகம் வாடிற்கு?" என்று பிருந்தாவின் அம்மா உருகினாள்.

"நான் நன்னா பாடலையா மா?" என்று பிருந்தா கண்ணில் நீருடன் கேட்டாள்.

"யாருடா அப்படி சொன்னா?" என்று அம்மா பொங்கி எழுந்தாள். நடந்ததை சொன்னாள் பிருந்தா. "கவலைப்படாதே," என்று தேத்திய அம்மா உடனே ஒரு பெரிய வங்கியில் நிர்வாகியாக இருக்கும் தன் கணவருக்கு போன் செய்தாள். "குழந்த மனசு ஒடஞ்சி இருக்கா. ஏதாவது செய்யக் கூடாதா?" என்று அவரையும் கிளப்பி விட்டாள்.

போட்டியை ஏற்பாடு செய்பவர்களுக்கு அடித்தது  யோகம். திடீரென்று ஒரு பெரிய வங்கி அவர்களுடைய நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய தொகை கொடுப்பதாக முன் வந்தது. என்ன, அவர்கள் சொல்லும் போட்டியாளருக்குத்தான் முதல் பரிசு கொடுக்கணமாம். யோசிப்பதற்கு என்ன இருந்தது? சரி என்று பணத்தையும் வாங்கி பெயரையும் குறித்துக்கொண்டார்கள்.

"நீ நன்னா பாடு. பரிசு உனக்குத்தான்," என்று அம்மா ஆசுவாசப் படுத்தினாள்.

போட்டி முடிந்தது. "ஆறுதல் பரிசு ஒன்று - மீனாக்ஷி," என்று அறிவித்தது ஆச்சர்யத்தில் மூழ்கினர் பார்ப்பவர்கள். முதல் பரிசோ, இரண்டாவது பரிசோ என்று எதிர்பார்த்தப்பெண்ணிற்கு ஆறுதல் பரிசா?

"இரண்டாவது - குமரேஷ்."

மௌனம் நிலவியது. நிச்சயமாக மூன்றாவது இடத்தை பிடிப்பான் என்று நம்பினார்களே!

ஏற்பாடு செய்தவர்களும் இந்த மௌனத்தை பார்த்தார்கள். சற்றென்று "மூன்றாவது பரிசு, பிருந்தா, இரண்டாவது, ஸ்ரீசரண், முதல் பரிசு, கற்பகம்," என்று சொல்லி முடித்தார்கள். அந்த சபையே கை தட்டி உர்ச்சாகப்பட்டதைப் பார்த்து பெரிய நிம்மதி மூச்சு விட்டார்கள்.

"என்ன இது?" என்று பிருந்தா அப்பா சினம் கொண்டதை பார்த்து, அவசரமாக சமாதானப்படுத்தினார்கள். "திறமைக்கு பரிசு குடுக்கலைன்னா இந்த நிகழ்ச்சிய மதிச்சு யாரும் வர மாட்டாங்க. அப்புறம் இந்த பணத்தை வெச்சு நான் என்ன செய்யறது?" என்று புரிய வைத்தான். இன்னும் மெல்லிய குரலில், தயங்கி சொன்னான், "கொஞ்சம் நன்னா பயிற்சி எடுத்துண்டு, சாதனை பண்ணி போட்டில கலந்துக்க சொல்லுங்க. இந்த பணம் வாங்காமலேயே பரிசு கொடுக்கிறோம்."

முகத்தில் பளார் என்று அறைந்தார்போல் இருந்தது, பிருந்தாவின் பெற்றோர்களுக்கு.


Tuesday, December 30, 2014

புகலிடம்

"ஆஆ... அம்மா!" அலறினாள் பானு.

"என்னடா?" என்றுப் பதறிக்கொண்டு ஓடி வந்தாள் சந்த்யா.

"பூச்சி!" கையை நீட்டினாள் 10-வயது மகள்.

"சீ!" என்ற சந்த்யாவின் உடல் சிலிர்த்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து அதை வேகமாக அடித்துக் கொன்றாள்.

அவள் மகள் முகம் சுளித்தாள். "ஏன்தான் இவ்வளவு பூசிகள் இந்த புது வீட்ல வரதோ!"

"சுத்தி நறைய மரங்கள் இருக்கறதுனாலத்தான்!" அவள் அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். சின்னச சின்ன பூச்சிகள் இரவில் வீட்டிற்குள் நுழைவதால் ஜன்னக்கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டியிருந்தது.ஒரு முறை ஒரு வௌவால் கூட வந்து இவர்களை ஆட்டி வைத்தது. புறா மொட்டை மாடியை தன இருப்பிடமாகக்கொண்டிருந்தது. நாள் முழுக்க பறவைகளின் சச்சரவு அமைதியை கெடுத்தது.  இரவில் ஒருமுறை ஆந்தை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வந்ததை மறந்தே விட்டாளே!

இதில்  காலையில் அவர்கள் வீடு இருந்த குடியிருப்பு சமுதாயத்தில் பாம்பு பார்த்ததாக வதந்தியா நிஜமா என்று வேற தெரியவில்லை.

நகரத்தைவிட்டு தள்ளி இருக்கலாம் என்று இங்கு வந்தால் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் இடையில் வாழ வேண்டியிருக்கே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது சந்த்யாவிற்கு.

அந்த வாரமே அந்த சமுதாயத்தில் பொது சந்திப்பில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசி எப்படி இந்த உபத்ரவத்தை எப்படி சரி செய்வது என்று கலந்தாலோசித்தாள்.

தாங்கள் இருக்குமிடத்தை ஆக்கிரமித்து தங்களையே இருப்பிடம் இல்லாமல் செய்வது மட்டுமில்லாமல் உயிரையே பிடுங்கும் இந்த மனிதர்களின் உபத்ரவத்தை எப்படி சரி செய்வதென்று இந்த பூச்சிப்பொட்டுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தெரியவில்லையே! இன்று புகலிடமே இல்லாமல், சிமன்ட் தரைகளில் அவஸ்தை படும் இந்தப் பிராணிகளும் ஒரு மாநாடு போட்டால்...?

Saturday, November 8, 2014

விட விட தொடரும்

"நேரம் ஆறது. கிளம்பலாமா?" அனுராதா கணவன் சரவணனைக் கேட்டாள்.

தோழன் வீட்டிற்கு ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். "என்ன அவசரம்?" சரவணன் முணுமுணுத்தான்.

திடீறென்று ஒரு புது வரவினால் மற்றவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டா மாதிரி இருந்தது. சரவணனும் எட்டிப்பார்த்தான். அட, ஷ்ரேயாவா இது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். "காக்கா மாதிரி இருந்த நீ எப்போ கிளியா மாறின?" என்று நேராகவே கேட்டுவிட்டான்.

அவன் தோளை ஆசையாக குத்திவிட்ட ஷ்ரேயா, "நீ மட்டும் என்னாவாம்? ஒட்டட குச்சி மாதிரி இருப்ப, இப்ப நல்ல ஆஜானுபாஹுவா ஆயிட்ட?" என்று பதிலுக்கு கிண்டலடித்தாள்.

அனுராதா கண்ணை உருட்டினாள். அவர்கள் பேசும் தோரணையைப் பார்த்தால் இன்று அவர்கள் வார்தாலாபம் முடியும் என்று தோணவில்லை.

சரவணனுக்கு போரவில்லைத்தான்! ஷ்ரேயாவின் நம்பர் வாங்கிக்கொண்டான். தொடர்பு கொண்டான். சந்தித்தார்கள். நட்பு வளர்ந்தது. அது வளர வளர காதலா அல்ல ஆசையா - இனம் தெரியாத ஒன்றும் கூடவே வளர்ந்தது.

தனியாக இருக்கும் ஷ்ரேயாவின் வீடு சந்திப்புகளிற்கு சௌகரியமாக அமைந்தது. தொட தொட தொடரும் ஆசையில் சரவணன் மூழ்கினான். வீட்டில் மனைவி, மகன், அப்பா, அம்மா எல்லாரும் எதிரிகளாகத் தென்பட்டனர்.

"எங்கேயாவது போய்டலாம் வா," ஷ்ரேயாவும் தூண்டி விட்டாள். கொழும்பில் சந்தோசமாக இருக்கும் தருணம், அனுராதா - அவன் ஆபிஸ் வேலையாக பொயிருக்கிறான் என்ற நம்பிக்கையில் - மெசேஜ் அனுப்பினாள், "அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. உடனே கிளம்பி வரவும்."

அனு சந்தேகப்படுகிறாளோ? இது இவனைப் பிடிப்பதற்கு சூழ்ச்சியோ என்றுக்கூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான். அதுதான் உண்மை, தந்தைக்கு பக்கவாதம் என்று தெரிந்ததும், தலை தெறிக்க சென்னைக்கு திரும்பினான்.

அடுத்த சில மாதங்கள், அவன் வாழ்க்கை தந்தையின் உடல் நிலையை சுற்றியே அமைந்தது. அதில் ஒரே வடிகால் அவன் ஷ்ரேயாவுடன் இருக்கும் சில நேரங்கள் தான்.

அனுவோ படுக்கையில் தலை வைக்கும்முன்னே தூங்கி விடுவாள். அவள் தலையை வருடிக்கொடுக்க அவனுக்கு ஒரு சில நேரம் தோன்றும். ஆனால் கடந்த சில மாதங்களில் உறவே இல்லாததால் புதுமையாக இருந்தது. அவள் இருவருக்கும் நடுவில் தாம்பத்திய உறவு இல்லாததைப்பற்றி வருந்துவதாகக்  கூட தெரியவில்லை.

இந்த நினைப்பு வரும்பொழுது, அவள் மீது எரிச்சல் கூட வரும். பேசாமல் ஷ்ரேயாவுடனேயே போய் இருக்கலாமா என்றுகூட தோண ஆரம்பித்தது.

ஷ்ரேயாவிடம் கேட்டே விட்டான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளை உற்று நோக்கினான். "என்ன, நான் சொன்னது பிடிக்கலையா?"

"அனு தன் அலுப்ப போக்க எங்க போவாங்க?"

அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"போங்க சரவணன், வீட்டுக்கு போங்க. சந்தோசத்துல பங்கேற்பவங்கள விட கஷ்டத்துல கை கொடுக்கரவங்கதான் மேல். இந்த நேரத்துல அனு உங்க பாரத்த சுமக்கறாங்க. நீங்க அங்கிருந்து தப்பிக்க இங்க வந்துட்டீங்கன்னா உங்களுக்கே உங்க மேல மதிப்பு இருக்காது."

அவள் சொல்வதிலுள்ள உண்மையை அறிந்த சரவணன் முதலில் தன் கடமைகளை சுமக்க கிளம்பி விட்டான்.




Friday, October 10, 2014

கேள்வி எழும் நேரம்

"ஏன் இவ்வளவு கம்மி மார்க் வாங்கிருக்கே?" லக்ஷ்மி கோவமாக தன் மகளைக் கேட்டாள்.

சுவாதி வாயை இறுக மூடிக்கொண்டு நின்றாள்.

"என்ன கொழக்கட்டையா முழுங்கிருக்க? கேக்கறேனில்ல?"

அப்பவும் சுவாதி பதில் சொல்லாமல் இருக்க லக்ஷ்மி இன்னும் கோபமாகக் கேட்டாள், "மாசத்துக்கு அவ்வளவு காசு கொடுத்து ட்யுஷன் அனுப்பறேனே? வாங்கற பாதி சம்பளம் அதுக்குத்தான் போறது, தெரியுமில்ல? ஒன்ன கூட்டிட்டு பொய் வர ஒரு கார், ஒரு டிரைவர் வேற! மாசத்துக்கு இருபதாயிரமாவது உன் படிப்புக்கே போறது. அது தவிர ஸ்கூல் பீஸ் வேற. கணக்கு போட்டுப்பார்!"

"நானா கேட்டேன்?" என்று வடுக்கென்று சுவாதி கேட்டாள். பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது. "என்ன திமிரொனக்கு!"

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே, கண்ணில் பொங்கிய நீரை அடக்கிய சுவாதி எதிர்த்துப் பேசினாள், "எனக்கு நீயே வீட்ல சொல்லிக்கொடு, நான் படிக்கறேன்னு நான்தான் திருப்பி திருப்பி சொல்றேனே!"

அந்து 13-வயதுப் பெண் குரலில் தன் தாயுடன் சிறிது நேரமாவது கழிக்க வேண்டும் என்ற ஏக்கம் அந்த கோவத்தில் குமுறும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பொறுப்புகளில் அமுங்கி இருக்கும் லக்ஷ்மிக்கு கேட்டால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த சண்டை இப்படியே நீடிக்க, பக்கத்துக்கு அறையில் துணிகளை மடித்துக்கொண்டிருந்த பாக்கியம் கண்களில் நீர் ததும்பியது.

"நீ மட்டும் படிச்ச்சிருந்தன்னா எனக்கு ஒத்தாசையா இருந்திருக்கும் இல்லையாம்மா?" என்று ஊரில் இருந்த மகள் வித்யா இன்று பகல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. அவளும் சுமாராகத் தான் மார்க்ஸ் வாங்கி இருந்தாள்.

"படிச்சிருந்தாலும் இப்படி வேற ஊருல இருந்தா என்ன பலன்?" என்று பாக்கியம் அலுத்துக்கொண்டாள்.

"படிச்சிருந்தா நம்ம ஒரே எடத்துல இருந்திருக்கலாம். உன்னால என்னையும் சென்னை கூட்டிட்டு போயிருக்க முடியுமே!" என்று வித்யா கூரியப்பொழுது பெருமையாக இருந்தது.

ஆனால் தான் வேலை செய்யும்  இடத்தில் நடக்கும் கூத்தைப்பார்த்தால் சந்தேகம் எழுந்தது. படித்திருந்தால் தன் மகளுக்கு ஒத்தாசையாக இருந்திருப்போமா அல்ல தன் வேலையில்  மூழ்கி இருந்திருப்போமா என்ற கேள்வி மனதை உளைத்தது. அருகில் இருந்தும் இல்லாத தாய்மார்கள் போல் ஆகி விட்டிருப்போமா என்று தன்னையே  ஆராய்ந்தாள்.

படிப்புடன், வேலையில் பொறுப்புகளுடன், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன், தன் குடும்பத்தை பராமரிக்கவும் தன் மகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மறுநாளே லீவெடுத்துக்கொண்டு அவளைத் தேற்றி விட்டு, படிக்க ஊக்கம் கொடுத்து கிளம்பி விட்டாள் பாக்கியம்.





Thursday, August 14, 2014

கதை சொல்லும் நேரம் - Time for Stories

ஹரிஸ்ரீயில் தமிழில் கதை சொல்லவேண்டும், சொல்கிறாயா என்று கிழக்கு பதிப்பகத்தில் இருந்து என் தோழி கேட்டவுடன்,  என்று உடனே சொல்லிவிட்டேன்.



இந்த காலத்துப்பசங்களுக்கு ஒரு கதையும் தெரிவதில்லை என்ற அதே தவறான கணக்குப்போட்டேன். சரிப்பார்த்துக்கொண்ட பல கதைகள் ஒரு சில குழந்தைகளுக்கு தெரியவே செய்தது. அதனால் கடைசியில், நானே என் குழந்தைகளுக்காக கற்பனை செய்த ஒரு கதை - சபக் சபக் என்றது பூதம் என்ற கதையை சொன்னேன். அவர்கள் அதை ரசித்தது எனக்கு பத்திற்கு பத்து மதிப்பெண் போட்ட திருப்தி.

புதிதாக ஒன்றை செய்த பெருமை...

Harishree Vidyalayam needed a Tamil storyteller on the occasion of Tamil Day in their school. When my friend from New Horizon Publishing asked me if I would, as ever, I was ready.

Going with the common view that children of today do not know many of the popular tales, I prepared a few and unleashed it on them. But, a few seemed to know all of them.

Finally, I narrated the story, Chapak Chapak Goes the Ghost, which I had written for my children. The Harishree children enjoyed it thoroughly. I felt as if they had marked me ten on ten.

I felt proud at having tried something new.