Tuesday, December 30, 2014

புகலிடம்

"ஆஆ... அம்மா!" அலறினாள் பானு.

"என்னடா?" என்றுப் பதறிக்கொண்டு ஓடி வந்தாள் சந்த்யா.

"பூச்சி!" கையை நீட்டினாள் 10-வயது மகள்.

"சீ!" என்ற சந்த்யாவின் உடல் சிலிர்த்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து அதை வேகமாக அடித்துக் கொன்றாள்.

அவள் மகள் முகம் சுளித்தாள். "ஏன்தான் இவ்வளவு பூசிகள் இந்த புது வீட்ல வரதோ!"

"சுத்தி நறைய மரங்கள் இருக்கறதுனாலத்தான்!" அவள் அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். சின்னச சின்ன பூச்சிகள் இரவில் வீட்டிற்குள் நுழைவதால் ஜன்னக்கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டியிருந்தது.ஒரு முறை ஒரு வௌவால் கூட வந்து இவர்களை ஆட்டி வைத்தது. புறா மொட்டை மாடியை தன இருப்பிடமாகக்கொண்டிருந்தது. நாள் முழுக்க பறவைகளின் சச்சரவு அமைதியை கெடுத்தது.  இரவில் ஒருமுறை ஆந்தை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வந்ததை மறந்தே விட்டாளே!

இதில்  காலையில் அவர்கள் வீடு இருந்த குடியிருப்பு சமுதாயத்தில் பாம்பு பார்த்ததாக வதந்தியா நிஜமா என்று வேற தெரியவில்லை.

நகரத்தைவிட்டு தள்ளி இருக்கலாம் என்று இங்கு வந்தால் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் இடையில் வாழ வேண்டியிருக்கே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது சந்த்யாவிற்கு.

அந்த வாரமே அந்த சமுதாயத்தில் பொது சந்திப்பில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசி எப்படி இந்த உபத்ரவத்தை எப்படி சரி செய்வது என்று கலந்தாலோசித்தாள்.

தாங்கள் இருக்குமிடத்தை ஆக்கிரமித்து தங்களையே இருப்பிடம் இல்லாமல் செய்வது மட்டுமில்லாமல் உயிரையே பிடுங்கும் இந்த மனிதர்களின் உபத்ரவத்தை எப்படி சரி செய்வதென்று இந்த பூச்சிப்பொட்டுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தெரியவில்லையே! இன்று புகலிடமே இல்லாமல், சிமன்ட் தரைகளில் அவஸ்தை படும் இந்தப் பிராணிகளும் ஒரு மாநாடு போட்டால்...?

Saturday, November 8, 2014

விட விட தொடரும்

"நேரம் ஆறது. கிளம்பலாமா?" அனுராதா கணவன் சரவணனைக் கேட்டாள்.

தோழன் வீட்டிற்கு ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். "என்ன அவசரம்?" சரவணன் முணுமுணுத்தான்.

திடீறென்று ஒரு புது வரவினால் மற்றவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டா மாதிரி இருந்தது. சரவணனும் எட்டிப்பார்த்தான். அட, ஷ்ரேயாவா இது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். "காக்கா மாதிரி இருந்த நீ எப்போ கிளியா மாறின?" என்று நேராகவே கேட்டுவிட்டான்.

அவன் தோளை ஆசையாக குத்திவிட்ட ஷ்ரேயா, "நீ மட்டும் என்னாவாம்? ஒட்டட குச்சி மாதிரி இருப்ப, இப்ப நல்ல ஆஜானுபாஹுவா ஆயிட்ட?" என்று பதிலுக்கு கிண்டலடித்தாள்.

அனுராதா கண்ணை உருட்டினாள். அவர்கள் பேசும் தோரணையைப் பார்த்தால் இன்று அவர்கள் வார்தாலாபம் முடியும் என்று தோணவில்லை.

சரவணனுக்கு போரவில்லைத்தான்! ஷ்ரேயாவின் நம்பர் வாங்கிக்கொண்டான். தொடர்பு கொண்டான். சந்தித்தார்கள். நட்பு வளர்ந்தது. அது வளர வளர காதலா அல்ல ஆசையா - இனம் தெரியாத ஒன்றும் கூடவே வளர்ந்தது.

தனியாக இருக்கும் ஷ்ரேயாவின் வீடு சந்திப்புகளிற்கு சௌகரியமாக அமைந்தது. தொட தொட தொடரும் ஆசையில் சரவணன் மூழ்கினான். வீட்டில் மனைவி, மகன், அப்பா, அம்மா எல்லாரும் எதிரிகளாகத் தென்பட்டனர்.

"எங்கேயாவது போய்டலாம் வா," ஷ்ரேயாவும் தூண்டி விட்டாள். கொழும்பில் சந்தோசமாக இருக்கும் தருணம், அனுராதா - அவன் ஆபிஸ் வேலையாக பொயிருக்கிறான் என்ற நம்பிக்கையில் - மெசேஜ் அனுப்பினாள், "அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. உடனே கிளம்பி வரவும்."

அனு சந்தேகப்படுகிறாளோ? இது இவனைப் பிடிப்பதற்கு சூழ்ச்சியோ என்றுக்கூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான். அதுதான் உண்மை, தந்தைக்கு பக்கவாதம் என்று தெரிந்ததும், தலை தெறிக்க சென்னைக்கு திரும்பினான்.

அடுத்த சில மாதங்கள், அவன் வாழ்க்கை தந்தையின் உடல் நிலையை சுற்றியே அமைந்தது. அதில் ஒரே வடிகால் அவன் ஷ்ரேயாவுடன் இருக்கும் சில நேரங்கள் தான்.

அனுவோ படுக்கையில் தலை வைக்கும்முன்னே தூங்கி விடுவாள். அவள் தலையை வருடிக்கொடுக்க அவனுக்கு ஒரு சில நேரம் தோன்றும். ஆனால் கடந்த சில மாதங்களில் உறவே இல்லாததால் புதுமையாக இருந்தது. அவள் இருவருக்கும் நடுவில் தாம்பத்திய உறவு இல்லாததைப்பற்றி வருந்துவதாகக்  கூட தெரியவில்லை.

இந்த நினைப்பு வரும்பொழுது, அவள் மீது எரிச்சல் கூட வரும். பேசாமல் ஷ்ரேயாவுடனேயே போய் இருக்கலாமா என்றுகூட தோண ஆரம்பித்தது.

ஷ்ரேயாவிடம் கேட்டே விட்டான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளை உற்று நோக்கினான். "என்ன, நான் சொன்னது பிடிக்கலையா?"

"அனு தன் அலுப்ப போக்க எங்க போவாங்க?"

அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"போங்க சரவணன், வீட்டுக்கு போங்க. சந்தோசத்துல பங்கேற்பவங்கள விட கஷ்டத்துல கை கொடுக்கரவங்கதான் மேல். இந்த நேரத்துல அனு உங்க பாரத்த சுமக்கறாங்க. நீங்க அங்கிருந்து தப்பிக்க இங்க வந்துட்டீங்கன்னா உங்களுக்கே உங்க மேல மதிப்பு இருக்காது."

அவள் சொல்வதிலுள்ள உண்மையை அறிந்த சரவணன் முதலில் தன் கடமைகளை சுமக்க கிளம்பி விட்டான்.




Friday, October 10, 2014

கேள்வி எழும் நேரம்

"ஏன் இவ்வளவு கம்மி மார்க் வாங்கிருக்கே?" லக்ஷ்மி கோவமாக தன் மகளைக் கேட்டாள்.

சுவாதி வாயை இறுக மூடிக்கொண்டு நின்றாள்.

"என்ன கொழக்கட்டையா முழுங்கிருக்க? கேக்கறேனில்ல?"

அப்பவும் சுவாதி பதில் சொல்லாமல் இருக்க லக்ஷ்மி இன்னும் கோபமாகக் கேட்டாள், "மாசத்துக்கு அவ்வளவு காசு கொடுத்து ட்யுஷன் அனுப்பறேனே? வாங்கற பாதி சம்பளம் அதுக்குத்தான் போறது, தெரியுமில்ல? ஒன்ன கூட்டிட்டு பொய் வர ஒரு கார், ஒரு டிரைவர் வேற! மாசத்துக்கு இருபதாயிரமாவது உன் படிப்புக்கே போறது. அது தவிர ஸ்கூல் பீஸ் வேற. கணக்கு போட்டுப்பார்!"

"நானா கேட்டேன்?" என்று வடுக்கென்று சுவாதி கேட்டாள். பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது. "என்ன திமிரொனக்கு!"

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே, கண்ணில் பொங்கிய நீரை அடக்கிய சுவாதி எதிர்த்துப் பேசினாள், "எனக்கு நீயே வீட்ல சொல்லிக்கொடு, நான் படிக்கறேன்னு நான்தான் திருப்பி திருப்பி சொல்றேனே!"

அந்து 13-வயதுப் பெண் குரலில் தன் தாயுடன் சிறிது நேரமாவது கழிக்க வேண்டும் என்ற ஏக்கம் அந்த கோவத்தில் குமுறும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பொறுப்புகளில் அமுங்கி இருக்கும் லக்ஷ்மிக்கு கேட்டால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த சண்டை இப்படியே நீடிக்க, பக்கத்துக்கு அறையில் துணிகளை மடித்துக்கொண்டிருந்த பாக்கியம் கண்களில் நீர் ததும்பியது.

"நீ மட்டும் படிச்ச்சிருந்தன்னா எனக்கு ஒத்தாசையா இருந்திருக்கும் இல்லையாம்மா?" என்று ஊரில் இருந்த மகள் வித்யா இன்று பகல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. அவளும் சுமாராகத் தான் மார்க்ஸ் வாங்கி இருந்தாள்.

"படிச்சிருந்தாலும் இப்படி வேற ஊருல இருந்தா என்ன பலன்?" என்று பாக்கியம் அலுத்துக்கொண்டாள்.

"படிச்சிருந்தா நம்ம ஒரே எடத்துல இருந்திருக்கலாம். உன்னால என்னையும் சென்னை கூட்டிட்டு போயிருக்க முடியுமே!" என்று வித்யா கூரியப்பொழுது பெருமையாக இருந்தது.

ஆனால் தான் வேலை செய்யும்  இடத்தில் நடக்கும் கூத்தைப்பார்த்தால் சந்தேகம் எழுந்தது. படித்திருந்தால் தன் மகளுக்கு ஒத்தாசையாக இருந்திருப்போமா அல்ல தன் வேலையில்  மூழ்கி இருந்திருப்போமா என்ற கேள்வி மனதை உளைத்தது. அருகில் இருந்தும் இல்லாத தாய்மார்கள் போல் ஆகி விட்டிருப்போமா என்று தன்னையே  ஆராய்ந்தாள்.

படிப்புடன், வேலையில் பொறுப்புகளுடன், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன், தன் குடும்பத்தை பராமரிக்கவும் தன் மகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மறுநாளே லீவெடுத்துக்கொண்டு அவளைத் தேற்றி விட்டு, படிக்க ஊக்கம் கொடுத்து கிளம்பி விட்டாள் பாக்கியம்.





Thursday, August 14, 2014

கதை சொல்லும் நேரம் - Time for Stories

ஹரிஸ்ரீயில் தமிழில் கதை சொல்லவேண்டும், சொல்கிறாயா என்று கிழக்கு பதிப்பகத்தில் இருந்து என் தோழி கேட்டவுடன்,  என்று உடனே சொல்லிவிட்டேன்.



இந்த காலத்துப்பசங்களுக்கு ஒரு கதையும் தெரிவதில்லை என்ற அதே தவறான கணக்குப்போட்டேன். சரிப்பார்த்துக்கொண்ட பல கதைகள் ஒரு சில குழந்தைகளுக்கு தெரியவே செய்தது. அதனால் கடைசியில், நானே என் குழந்தைகளுக்காக கற்பனை செய்த ஒரு கதை - சபக் சபக் என்றது பூதம் என்ற கதையை சொன்னேன். அவர்கள் அதை ரசித்தது எனக்கு பத்திற்கு பத்து மதிப்பெண் போட்ட திருப்தி.

புதிதாக ஒன்றை செய்த பெருமை...

Harishree Vidyalayam needed a Tamil storyteller on the occasion of Tamil Day in their school. When my friend from New Horizon Publishing asked me if I would, as ever, I was ready.

Going with the common view that children of today do not know many of the popular tales, I prepared a few and unleashed it on them. But, a few seemed to know all of them.

Finally, I narrated the story, Chapak Chapak Goes the Ghost, which I had written for my children. The Harishree children enjoyed it thoroughly. I felt as if they had marked me ten on ten.

I felt proud at having tried something new.







Saturday, July 26, 2014

சிதறியப் பூக்கள் - பாகம் 3

"ஹாய் காவ்யா! என்ன, ஜாக்பாட் அடிச்சிருக்க போல இருக்கு?" என்று நயனா கேட்டாள். அவள் மகள் கீர்தி அதிதியின் வகுப்பில் படித்தாள். என்ன என்பதுபோல காவ்யா பார்த்தாள். "ஐ, ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கற பார்த்தயா? நீங்கெல்லாம் அமெரிக்கா லீவ்ல போறதா அதிதி சொன்னா?"

காவ்யா முழித்தாள். "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே..." கேதார் ஏதாவது உளறினானோ அதிதியிடம் என்று யோசித்தாள். "என்னடா, அமெரிக்கா போகப்போறதா சொன்னயாமே?" என்று தன் மகளை அன்றிரவு மெதுவாகக் கேட்டாள் அவள்.

"சும்மா தமாஷுக்கு" என்று அதிதி சொன்னதும் நிம்மதியாயிற்று.

ஆனால் இந்த சின்னப் பொய்கள் துளிர் விட்டு பெரிய மரமாகுவதை அவள் முதலில் கவனிக்கவில்லை. சிறிய பெரிய புகார்கள் வர ஆரம்பித்தன. வீட்டில் சண்டைகள் அதிகரித்தன. இப்பொழுது அதிதிக்கு 10 வயது. விவரம் புரிய ஆரம்பிக்கும் வயது. பொய்களின் மாளிகையோ அவள் வயதிற்கு மீறியவையாக வளரவே காவ்யா திக்குமுக்காடினாள். படிப்பிலோ சறுக்கு மரம் போல விளையாடினாள். ஒரு முறை மதிப்பெண் ஏறினாள், மறுமுறை அதள பாதாளம் தான்! படிக்க வைப்பதைவிட இமாலய மலை ஏறி விடலாம்.

அப்படி மோசமாக ஏதாவது நடக்கும் நேரத்தில் கேதார் பேசினால் அன்று முழுவதும் ஏதோ ஒரு சச்சரவு, சொல்ல முடியாத கோபம். சின்னச்சின்ன விஷயங்களிற்கு அழுகை, எரிந்து விழுதல், கூச்சல், சண்டை.

 விசாரிக்கக் கூட பயந்தாள். அதிதியை விட்டு  கேதார் தாராவிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது விஷயத்தை ஊகித்துக்கொண்டாள் காவ்யா.

அப்பவும் பெரிய மகளிடம் பேசத் தயங்கினாள். எப்படி விபரீதமாக போகமோ என்று பயந்தாள்.

ஆசிரியர்கள் அழைத்துப் பேசினார்கள். "கிளாஸ்ல கவனிக்க மாட்டேங்கறா, மத்தப்பசங்களையும் தொந்தரவு பண்ணறா."

"இந்த மாதிரி மக்கு நம்ப குடும்பத்துல இருந்ததே இல்ல. அந்த தறுதலையன் கொடுத்த சொத்து," என்று தந்தையும் சேர்ந்து தன் மகளைத் திட்டும் பொழுது உடைந்து போனாள் காவ்யா.

வேறு வழி இன்றி மகளை இது அது என்று ஏதோ விஷயங்களைத்தொட்டு என்ன பிரச்னை என்று தயங்கித்தயங்கி பேச்சைத்தொடங்கினாள்.

"அப்பா ராணி ஆண்டிய அம்மான்னு கூப்ட சொல்றாங்க. நான் மாட்டேன்னு சொன்னதுனால என்கூட பேச மாட்டேன்னு சொன்னார்," அதிதி சொல்லி முடிப்பதற்குள் தாரா அங்கு வந்தாள்.

"அம்மா, ராணி ஆன்டிய அம்மான்னு சொன்னா அப்பா என்ன அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நான் சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டேன் அப்பாவும் என்ன கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார்," என்று சந்தோஷத்தில் பூரித்துவரும் தாராவை அணைத்துக்கொள்வதா  இல்லை மடியில் சாய்ந்து விக்கி விக்கி அழும்  அதிதியை சமாதானப்படுத்துவதா என்று காவ்யாவிற்கு புரியவில்லை.

பாகம் 1
பாகம் 2





Saturday, July 19, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 2


காவ்யா குழந்தைகளை தன் தந்தை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்தாள். கேதாருக்கு அன்று மாலை தொலைபேசியில் தகவல் சொன்னாள்.

"என்ன? உன் தந்தை வீட்டிற்கா? அதான் உறவு இல்லைன்னு முருக்கிகிட்டார் இல்ல? இப்போ என்ன கரிசனம்?"

"நீங்க ராணியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரப்ப நான் எங்க போவேன்?" என்று அவள் சுட்டிக்காட்டினாள்.

"இங்கேயே பக்கத்துல எங்கையாவது வீடு பாத்துக்க. எனக்கு குழந்தைகள வாரத்துல ஒரு நாள் பார்க்கறத்துக்கு அனுமதி உண்டு. அத நான் உன் அப்பன் வீட்டில வந்து பார்க்க மாட்டேன்."

காவ்யா ச்தம்பித்துவிட்டாள். "நான் கூட்டிட்டு வரேன்."

கேதார் முதலில் மௌனமாக இருந்தான். "உங்கப்பனையே செலவுகளையும் பார்த்துக்க சொல்லு," என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

காவ்யா பிரமித்துப்போனாள். அவள் விவாகரத்திற்கு பிறகு எங்கே வாழ வேண்டும் என்ற சுதந்திரம் கூட போய் விட்டதா? தன் தந்தைக்கு உடனே விஷயத்தைச் சொன்னாள்.

அவர் கோபம் இன்னும் பயத்தைக் கொடுத்தது. "என்ன! அவன் இதை சாக்காக  காட்டி தப்பிக்க பார்க்கிறான்! நீ வா. அப்படி ஏதாவது பிரச்சன பண்ணினான்னா கோர்ட்ல பாத்துக்கலாம்."

தன் தந்தை சொன்ன வார்த்தைகள் ஆறுதலை கொடுத்தாலும், கேதார் ஏதோ திட்டத்தோடு செயல் படுவது புரிந்தது காவ்யாவிற்கு.  அவன்  ஏன் மாறிவிட்டான்?  இல்லை, அவன் எப்பவுமே இப்படித்தான். ஆனால் விட்டுக்கொடுத்து பழகிவிட்டதால் அது பெரிய விஷயமாக அப்பொழுது தெரியவில்லை. இப்பவும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பி வாழ்க்கையை தொடர்ந்தாள்.

அவன் மிரட்டினாற்போல் பள்ளிக்கூடத்தில் பணம் கட்ட மறுத்தப்பொழுது அவள் தந்தை வானம் பூமி ஒன்றாக்கி, நீதிமன்றம் மூலம் அவனை மடக்கினார். இது எப்படி பாதிக்குமோ என்று நினைத்த காவ்யாவிற்கு பதில் மறுநாளே கிடைத்தது. "அதிதி இடம் போன குடு," என்று அந்த எட்டு வயது குழந்தையை தூதாக உபயோகிக்க ஆரம்பித்தான்.

சுர்ரென்று மனதில் பொறாமை தலை எடுத்தது. ச்சீ! மகளிடம் பொறாமையா? "என்ன சொன்னார் அப்பா?" அதிதி போனை வைத்தப்பின் கேட்டாள், "ஒண்ணுமில்லை," என்று அந்தப்பெண் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பில் பூரித்து மிதப்பாள். தாய் வாய் திறந்து ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

தாயிடம், "ரொம்ப குண்டா இருக்க, அதுனாலத்தான் அப்பா நம்மை விட்டு போயிட்டார்," என்று ஒரு நாள் அவள் சொன்னதும் அதிர்ச்சியடைந்தாள். மகளிடம் சொல்லவேண்டிய விஷயமா இது? "அம்மா, நீ ஒடம்ப கொரச்சா அப்பா திரும்பிவந்திடுவாங்களா?" என்று தெனாவட்டாக போன மகள் பரிதாபமாக கேட்கும் பொழுது மனம் உருகினாள். என்ன சொல்லி இந்த பிஞ்சு மனதைத்  தேற்றி விடுவது என்று அறியாமல் தன் மகளை மார்புடன் அணைத்துக்கொண்டாள்.

பாகம் 1
பாகம் 3


Friday, July 11, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 1

செய்தால் அவளைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்று கேதார் தன் பெற்றோர்களிடம் கறாராக சொல்லி விட்டான். காவ்யா வேறு சாதிப் பெண். ஆனால் பார்க்க செக்க செவேல் என்று இருந்தாள். சுமுகமாகவும் இருந்தாள். நன்றாகப்  படித்திருந்தாள். நல்ல வேலையிலும் இருந்தாள். ஏதோ மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து தலையை ஆட்டினாள் சாவித்ரி அம்மாள்.

இதை கேட்ட காவ்யா  கண்கள் நிறம்பி வழிந்தன. "எங்க அப்பா மறுத்திட்டார்," என்று வருத்தப்பட்டாள்.

"ஓடி வந்திடு," வாய் கூசாமல் கேதார் சொன்னான். "நான் உன்னை காப்பாத்தறேன்."

எவ்வளவு மன்றாடியும் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை  என்ற நிலையில், வேறு வழி இன்றி வீட்டை விட்டு காவ்யா புறப்பட்டு விட்டாள். அழகான பூவை ஒரு ரசிகன் பறித்து ஆசையுடன் முகரும் பொழுது அந்த பூ தான் பூத்த மரத்தை எண்ணி பார்க்குமா? அல்ல, தன்னை ஆசையுடன் அங்கீகரிப்பவனை நினைத்து பூரித்து போகுமா?

காவ்யா பிறந்த வீட்டை அடியோடு மறந்து விட்டாள். அழகான புருஷன், தன்  அழகில் மயங்கிய புருஷன் என்று அறிந்து, ஒரு கொடி மரத்தைச்சுற்றி வளருவதுபோல அவனை தன் ஊன்றுகோலாக எண்ணி அவனை சுற்றியே படர்ந்தாள். இரு அழகிய மகள்கள் அவர்களுக்கு - இரு கண்மணிகளாக கருதினாள். அவள் உலகம் நிறைந்திருந்தது. திருமணம்தான் வேர், கேதார்தான் மரம், அவள் கொடி, மகள்கள் மொட்டுக்கள். அவள் மனதில் வீசியது தென்றல்.

அந்த சந்தோஷத்தில் பூரித்து போன அவள், ஒரு மரம் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாக சீண்டிய அவன், நாளடைவில்  கேலி செய்ய ஆரம்பித்தான். "ஏய் குண்டு," என்று தான் அவளை கூப்பிட்டான். அது போரடித்தால் பீப்பாய் என்று நக்கலடித்தான்.

அவளும் என்னென்னமோ எல்லாம் செய்து பார்த்தாள் ஆனால் வீட்டுப்பொருப்பு, குழந்தைகளை வளர்ப்பது - இதுவே சரியாக இருந்தது.

அவன் விலகுவது கூட தெரியவில்லையே. அவன் அவள் தோழி ராணியை புகழ்ந்து பேசும்பொழுது கூட கவனிக்கவில்லை. "அவளுக்கு குடும்பமா பொறுப்பா?" என்று சுட்டிக்காட்டினாள்.

ராணி அழகு என்று சொல்ல முடியாது ஆனால் சிம்பு போல உடல், மேற்கத்திய உடைகளில் கச்சிதமாக இருப்பாள். அடிக்கடி வந்து போவதால் வீட்டில் அனைவருக்கும் பழக்கம். "நீங்க ஏன்பா அவங்களுக்கு முத்தம் கொடுத்தீங்க?" என்று பெரிய மகள் அதிதி கேட்டாள். கேதார் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு தன் மகளை உள்ளே அனுப்பினான்.

காவ்யா அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். ஏதோ தவறு நடந்து விட்டது, மன்னித்து விடு என்று கேட்டுக்கொள்வான் என்று எண்ணியவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விவாகரத்து வேண்டும் என்று சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

"நாம மறுபடியும் ஆரம்ப..."

அவளை எதுவும் சொல்ல விடாமல் தடுத்தான். அவன் ஆசைகளுக்கு என்றும் இடம் கொடுத்து பழகியவள் இன்று மற்றும் என்ன புதுசாக எதிர்க்கப்போகிறாள்! அலுத்து விட்டதாம் அவளுடன் வாழ்க்கை. கூட நடந்தால் அக்காவா என்று எல்லோரும் விசாரிக்கராங்களாம். எப்படி இந்த வார்த்தைகளை தாங்கிக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எல்லாம் தன் குழந்தைகளுக்காகத்தான்.

ஆனால் இடி விவாகரத்தில் இல்லை, அதற்குப் பிறகுதான் என்று, ஒவ்வொரு நாளும் அவன் தயவுக்கு காத்திருந்த அவள் அறிய ஆரம்பித்தாள். குழந்தைகள் அவளிடம் வளர்ந்தன, ஆனால் அவர்களுடைய எல்லா செலவுகளையும் அவன் ஏற்க வேண்டய சூழல். பெரிய மகளினால் இந்த நிலமை என்று அவளைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைக்காத குறைதான் - கேதாருக்கு அவள் மீது அவ்வளவு கடுப்பு.

எங்கே போவதென்று தெரியாமல் நிற்கும் நேரத்தில் தந்தை வந்து நின்றார். "கேள்விப்பட்டேன். வீட்டுக்கு வா," என்று வலுகட்டாயமாக அழைத்துச்சென்றார்.

பறிக்கப்பட்டு கசக்கிபோட்ட பூ மறுபடியும் செடியில் ஒட்ட வைக்க முடியுமா?

ஆனால் தனக்காவது தன் ரணத்தை ஆற்ற வளர்த்த மரத்தின் நிழல் கிடைத்தது. தன் இரு மலர்களுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு மரம் கூட இல்லாமல் வேரோடு அறுக்கப்பட்டு அவதிப்படுவதை பார்க்க இயலாமல் தவித்தாள்.

அவர்கலையாவது   தன்னம்பிக்கையுடன் தன் காலிலேயே நிற்க கற்றுக்கொடுக்க முற்பட்டாள்.

பாகம் 2
பாகம் 3