Tuesday, February 21, 2017

இக்கரைக்கு அக்கரை - I

"ருக்கு, ரெடியா? எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகிறது," பட்டாபி குரல் கொடுத்தான்.

"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.


"எதுக்குடா மாசாமாசம் இந்த கூத்து? நான் பார்த்துக்க மாட்டேனா இந்த மூணு நாள்?"

"இல்லம்மா, உனக்கு கஷ்டமா இருக்கும்," என்று அம்மாவை அடக்கி விட்டு மனைவியையும் குழந்தையையும் பின் சீட்டில் அமர்த்திக்கொண்டு, அவள் தாய் வீட்டிற்கு விரைந்தான்.

ஒவ்வொரு மாதமும் ருக்குவுக்கு பொங்கிக் கொண்டு வரும் அழுகை, ஆனால் தன் கணவினடம் இதைப்பற்றி பேசினால் வீண் வாதம்தான் நடக்கும். மாமியாருக்கும் மூட்டுவலி, முதுகுவலி என்று பல பிரச்னைகள். ஒரு அளவுக்கு மேல் நினைத்தாலும் செய்ய முடியாது. ஆனால் ஆசாரத்தை விட்டுக்கொடுக்கவும் மனமில்லாதவளாக திண்டாடினாள். அவள்  படும் கஷ்டத்தைப் பார்க்கும் பொழுது ருக்குவுக்கு பரிதாபமாகவும் இருக்கும், தன்னை வாட்டி எடுக்கறாளே என்று கோபமும் வரும். கணவனிடம் கொஞ்சம் கூட ஆதரவு கிடைக்காதது வருத்தியது. பட்டாபிக்கு வீட்டில் ஒத்தாசை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது. அப்படியே செய்து விட்டாலும் மாமியார், "நான் பண்றேண்டா, நீ விடு," என்று சொல்லிவிடுவார். பிள்ளை செய்வது தாய்க்கு பொறுக்காது, தாய் செய்வது பிள்ளைக்கு பிடிக்காது. சண்டைப் போட்டால் தான் தனியாக நிற்போம் என்று அறிந்து காலத்தை ஓட்டப் பார்த்தாள் ருக்கு.

அவள் தாய் மட்டும் சிறு பெண்ணா என்ன? ஆனால் அங்கு கொஞ்சம் ஆச்சாரம் குறைச்சல். சமையல் செய்யக்கூடாது, ஆனால் மற்றதெதற்கும் தடை இல்லை. இருந்தாலும் அது தாய் வீடு.

அமெரிக்காவிலிருந்து ஏழு வருடம் முன் திரும்பி வந்தபின், முதல் முறை தூரம் ஆனபோது தன் தாய் சிரமப்படுகிறாளென்று நினைத்த பட்டாபி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான். ருக்குதான் முதல் தடவை ஏதோ ஆவலில் தன் தாய்வீட்டிற்கு போகிறேன் என்று சொன்னாள். இது என்ன, ஒன்றிரு தடவைதான் அவன் இப்படிச் செய்வான் என்று எண்ணினாள். ஏழு வருடம் ஆகி விட்டது, இன்னும் இதே கதைதான்.

"சுமிக்கு பொறுப்பு வரும். நம் வீட்டிலேயே சமாளித்துவிடலாம்," என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். "அவள் படிக்க வேண்டிய வயது," என்று அவன் மறுப்புச் சொன்னான்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை. பல விஷயங்களில் ருக்குவுக்கு பட்டாபிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. பெண்ணிற்கு நடனம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு ரொம்ப ஆசை. "தண்டச்செலவு," என்று அவன் அதை நிராகரித்தான். இவளே ஆசிரியர் பயிற்சி எடுத்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக போய், அதில் கிடைக்கும் சம்பளத்தில் மிச்சப்படுத்தி சேர்த்து வைத்தப் பணத்தில் தன் மகளை ஒரு நடன பள்ளியில் சேர்த்து விட்டாள். இதுவும் இவர்களுக்கு நடுவில் ஒரு பிரச்னையாக இருந்தது.

மாமனார் ஆஸ்ப்பித்திரியில் சேர்க்கும் நிலை ஒரு முறை  வந்த பொழுது, வேறு வழியில்லாமல் வேலையிலிருந்து நின்றுவிட்டாள். அவர் காலமாகிவிட்டார். "அம்மாக்கு துணையாக இரு," என்று வேண்டிக்கொண்டான். மறுபடியும் வேலைக்கு செல்லவே முடியவில்லை.

என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், சமவயதினர் வரும்பொழுது, மாமியார், "இப்படித் தனியா விட்டுட்டு போயிட்டாரேடீ," என்று புலம்பும் பொழுது, ருக்கு மனது வலிக்கும். தன் மீது ஏதோ குறை இருப்பதாகப் பட்டது அவளுக்கு. பட்டாபியும் ஆஃபீஸிலிருந்து திரும்பியப் பிறக, தன் தாயுடன் நேரம் கழிக்க விருப்பப்பட்டான். விடுமுறையிலும் கூட தன் தாய்க்கு பிடித்த கோவில், உறவினர் இல்லம் என்றுதான் எல்லோரையும் அழைத்துச் செல்வான்.

"அப்பா, சினிமாக்கு போகலாமா? இல்ல, கோல்டன் பீச்?" மகள் கேட்டுப்பார்த்தாள்.

"பாட்டி என்னடா பண்ணுவா அங்க?"

மேலே வாதாட முயன்ற மகளை உள்ளே அழைத்துச் சென்று, "நான் அழைத்துச் செல்கிறேன். அப்பாவை தொந்தரவு செய்யாதே..." என்று ருக்கு சமாளித்தாள். இல்லையென்றால், "பெண் எதிர்த்துப் பேசுகிறாள். நீ கொடுக்கும் இடம் தான். குழந்தைக்கே இப்படியெல்லாம் பேசத் தெரியமா என்ன?" என்ற கேள்வி எழும்.

மூவரையும் எப்படி சமாளிக்க? சம்பாதிக்க அனுமதி இல்லை. இவன் கையை நம்பி நிற்கும் நிலைமை வந்தது. நடன பள்ளிக்கே அவன் தாராள மனதாக, அதிசயமாக ஒப்புக்கொண்டிருந்தான். "போகட்டும், நிறுத்த வேண்டாம், ஆனால் படிப்பில் கவனம் குறையக் கூடாது." மேலும் மேலும் செலவிற்கு கேட்க நா கூசிற்று. வீட்டுச் செலவில் மிச்சப்படுத்தி, அவளுக்கு வேண்டிய சில 'அனாவசியம்' என்று பட்டாபி பட்டம் கட்டிய விஷயங்களுக்கு அவள் செலவழித்தாள். தனக்கில்லை, மகளுக்காக என்பதனால் சங்கோசமில்லாமல் செலவழித்தாள். தன் செலவுகளை குறைத்துக்கொண்டாள்.

என்ன சொல்வது? அவன் கொடியவனில்லை. ஆனால் இன்னும் தன் சிறுவயதில் கிராமத்தில் கற்றுக்கொண்ட பாடம் அவனை விடவில்லை. அவன் வெளிநாட்டு, ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்களின் நீச்சல் குளங்கில் நீந்தினாலும், கிராமத்து குட்டையில் ஊறியவன். நகரத்திற்கு மேல் படிப்பிற்காக வந்து விட்டாலும் கிராமத்தின் மனப்பான்மை அவனை விட்டு விலகவில்லை.

ருக்குவுக்கு ஸம்ப்ரதாயங்கள் ரொம்ப பழக்கம் இல்லை. பெரியவர்களிடம் மரியாதையுடம் நடந்து கொள்பவள், அதனால் தன புகுந்தகத்தில் அவளிடம் எதிர்பார்ப்பதை நிறைவேற்றவேண்டும் என்றுதான் எண்ணினாள். ஆனால் காலத்திற்கு ஏற்றாற்போல் கணவன் இல்லாதது மனதை நெருடியது. சிறிய விஷயங்களில் கூட அவனால் முற்போக்காக நினைக்க முடியாதது அவளுடைய மென்னை அடைத்தது. வேலை இல்லாததாலும், மகளுக்காகவும் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு இந்த வாழ்க்கையை சகித்துக்கொண்டாள்.  அதனால் அவள் மனதும் உடலும் பாதிக்கப் பட்டு வருவதை எப்படிச் சரி செய்வது என்று தெரியாமல் முழித்தாள்.

"இ ன்று  சாயந்தரம் நாம் விஷாகாவைப் பார்க்கப் போகிறோம்," என்று அவன் குரல் அவள் சிந்தனையைக் கலைத்தது.

"யாரவள்?" என்று கேட்டாள்.

"என்கூட ஸ்கூல்ல படிச்சா... அப்புறம் வக்கீலுக்கு சேர்ந்துதான் படிச்சோம்... டெல்லி போயிட்டா மேல் படிப்புக்கு. அங்கேயே வக்கீலா இருக்கா. நேத்தி சென்னை வந்துருக்கா," என்று கூறினான்.

"வீட்டிற்கு அழைத்திருக்கலாமே," என்றாள்.

"எப்படி?" என்றபொழுது இதழ்களைப்  பிதுக்கிக்கொண்டாள்.

"முக்கியமா உன்ன பார்க்கணும்னு சொன்ன, அதுதான்..." என்று விளக்கினான்.

"ஏன்?"

"நம்ப கல்யாணத்திற்கு வர முடியலை, அதனால இப்பப் பார்க்கணுமாம்."

அவள் சிரித்தாள். "நமக்கு கல்யாணமாகி பதினோரு வருடங்கள் ஆகி விட்டன... இப்ப என்ன புதுசா?"

அன்று சாயங்காலம் அழகாக உடை அணிந்து அவனுக்காகக் காத்திருந்தாள். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து, மாமியார் கொடுத்த காபியை குடித்து அவசரமாக கிளம்பினான். அவன் தோரணையில் ஒரு பரபரப்பு இருந்தது. "ரொம்ப ஆவலா இருக்கீங்க போல இருக்கு?"

"சே சே, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..." என்று சமாளித்தான்.

"இத்தனை வருடம் நீங்க இப்படி ஒரு பிரெண்ட் இருப்பதாகச் சொன்னதே இல்லையே?" என்று சீண்டினாள்.

அவன் கொஞ்சம் எரிச்சலுடன், "சொல்லும்படி ஒன்றும் இல்லை," என்றான்.

"உங்களுடன் இத்தனை வருடம் தொடர்பே இல்லையா? ஆச்சர்யமாக இருக்கு, ஏன் திடீரென்று இன்னிக்கு?"

"எனக்கும் தெரியலை..."

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, "அவங்களுக்கு திருமணம் ஆயிடுத்தா?"

"இல்லை..."

"ஏன்?"

"எனக்கு எப்படித் தெரியும்?" சுள்ளென்றான். அவள் மௌனமாக இருந்தாள். ஏதோ குறுகுறுத்தது போல அவனே சொல்ல ஆரம்பித்தான், "காலேஜ் படித்த காலத்தில் நாங்கள் காதலர்களாக இருந்தோம்..."

ஒரு கணம் மூச்சு முட்டியது. எழுந்த பல கேள்விகளில் ஒரு கேள்வியைக் கேட்டாள். "ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?"

"அவள் டெல்லி போய்விட்டாள். அங்கு வேலை கிடைத்தது... உத்தியோகம் செய்தே தீருவேன் என்று ஆடம் பிடித்தாள். என் பெற்றோர் அப்படிப்பட்ட பெண் ஒத்து வராது என்று சொன்னார்கள்..."

கேட்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் அவள் அதைக் கேட்டுவிட்டாள், "பெற்றோர்கள் சொன்னார்கள் என்று அவளை விட்டதில்... உங்களுக்கு  மனவருத்தம் இல்லையா?"

தோள்களைக் குலுக்கினான். "வாழ்நாள் முழுதும் அதுவே எல்லோருக்கும் போராட்டமாக இருந்திருக்கும். அப்படி நிம்மதி இல்லாத வாழ்க்கை எதற்கு?"

"ஒரு நாளும் நீங்கள் அவளைப்பற்றி என்னிடம் சொன்னதில்லையே?"

"என்ன பயன்? இன்னிக்கும் சொல்லியிருக்க மாட்டேன்... அவளை என்றுமே சந்திக்க மாட்டேன் என்று தான் நினைத்தேன்... இப்படி சந்திக்கும் போது உன்னிடம் சொல்லாமல் இருப்பது சரி என்று படவில்லை..."

இவன் மனம்  கல்லோ என்று ருக்குவுக்கு பட்டது. எப்பொழுதுமே சரி தவறு என்ற இரு கண்ணோட்டம் தானா?

"பழசை நினைத்து குமுறுகிறவன் இல்லை நான்," என்று அவள் கேட்காதக் கேள்விக்கு அழுத்தம் திருத்தமாக பதில் சொன்னான் பட்டாபி.

அப்படிச் சொல்லி விட்டானே தவிர, அவன் மனதில் பல கேள்விகள் சுழன்றன. கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு சந்திக்கப் போகிறார்கள். அவள் எப்படி இருப்பாள் இப்போ? அழகை விட விஷாகாவிடம் ஒரு துறுதுறுப்பு இருக்கும்.

சிறு பிள்ளையாக விளையாடியவர்கள், விளையாட்டுப்போக்கில் காதலர்கள் ஆனார்கள். அவளுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் அவனை வியக்கச்செய்தது. தன் கட்டுப்பாடுகளை அவமதித்து தான் நினைப்பதை சாதிக்கும் குணம் கோபத்தை மூட்டினாலும், கூடவே ஈர்க்கவும் செய்தது. இத்தனை வருடங்களில் பழசை நினைக்காதவன் இல்லை அவன்... தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டான் - பழைய நினைவுகள் பாதிக்காது என்று.

அந்த காலத்தை நினைத்துப்பார்க்கும் பொழுது அவன் மனம் சஞ்சலப்படும். ஆனால் தன் பொறுப்புகளை உணர்ந்த அவன், அந்த நினைவுகளை அப்புறப்படுத்தக் கற்றுக்கொண்டான்.

இன்று முழுவதும் ஆஃபிஸில் சரியாக வேலை பார்க்க முடியவில்லை. எவ்வளவு முயன்றும், மனம் சஞ்சலப்படுத்தியது. அவன் வண்டி ஓட்டும்பொழுது அடிக்கடி பெருமூச்சு விடுவதை ருக்கு கவனித்தாள். என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் ஹோட்டலுக்குள் அவனைப் பின் தொடர்ந்தாள். விஷாகாவை பட்டாபி மணந்துகொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ என்ற சிந்தனையும், தன் வாழ்க்கையும் வேறு திசையில் திரும்பியிருக்கும் என்ற நினைப்பும் அவளை திணற வைக்கவே, அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து, தன்னை கட்டுப்படுத்தி விஷாகாவிற்காக காத்திருந்தாள்.

(தொடரும்)

No comments:

Post a Comment