Friday, February 10, 2017

பூ கிளப்பிய புயல்

..
"பெண்கள்  பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது  அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."

Friday, February 3, 2017

கைக்கட்டு

கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!

Monday, January 16, 2017

தடை கட்டுகள்

ஆடி ஓய்ந்த சிவா என்னும் சிவகாமி வீட்டிற்குள் நுழையும் பொழுது அவள் தாய் சரளா அவளை என்றும் இல்லாத மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். அதாவது, இன்று புன்னகைத்தவிதம் மற்ற நாட்களைவிட ஏதோ காரணத்தினால் இன்னும் மலர்ந்திருந்தது போல் தோன்றிற்று சிவாவிற்கு.

அதற்கு காரணமும் இதோ, கூடவே சொன்னாள்.

Monday, December 12, 2016

வருமா வராதா

விழுந்த கிளைகளை எப்படி
ஓரம் கட்டுவது?
காற்றே வா, மெதுவாக வா, ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே...

சின்ன வயதில் இதை கற்றுக்கொண்ட ஞாபகம். 'நாடா' என்ற புயல் அவிழ்ந்தது. 'வராதா ' வருமா வராதா என்ற ஜோக்குகளை மிஞ்சி 'நான் வந்துட்டேன்!' என்று தன் வலிமை மீது சந்தேகப்பட்ட சென்னை வாசிகளுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்கும் வண்ணம் வந்துவிட்டது!

Thursday, November 24, 2016

பாகப் பிரிவினை

ஏற்கனவே சந்தீப் ஊரிலில்லாதது நம்ரதாவின் வேலையை மிகவும் பாதித்தது. காலையில் தன் இரு மகன்களையும் பள்ளியில் விடுவது, மாலையில் ட்யூஷன் முடிந்த பின் கூட்டிக்கொண்டு வருவது அவனுடைய பொறுப்பு. அவள் காலையில் சமையல் முடித்து, பிற்பகல் உணவு கட்டி அனுப்பிய பிறகு தன்  அலுவலகத்திற்குச்சென்று, பிற்பகல் திரும்பும் பொழுது சஞ்சித்தையும் மாதவையும் ட்யூஷனில் விடுவது அவளுடைய பொறுப்பு. ஒரு வாரம் சந்தீப் ஊரில் இல்லாத நேரத்தில் எப்படியோ சமாளித்து விடலாம் என்று நினைத்தவள், திணறிவிட்டாள். வேலைக்காரி வராதது ஒரு கூடுதலான தலைவலி.

ஞாயிறு வந்தது, அப்பாடா என்று ஓய்வெடுக்கலாமென்றால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வளரும் பசங்களுக்கு இன்று ஒருநாள் தான் வகையாக ஏதாவது செய்து கொடுக்க முடியும். ருசியாக சமைத்து,  பாத்திரங்களை தேய்த்து, வீட்டை ஒழித்து வந்த பிறகும் தோய்க்க வேண்டிய துணிகள் அவளை, "எங்களுக்கு விடிவுகாலம்  எப்போ?" என்பது போல் கூடையில் நிரம்பி வழிந்தன. வாஷிங் மெஷின் தான் தோய்க்கும். இருந்தாலும் அதில் போட்டு, கொடியில் இருந்த துணிகளை மடித்து, செடிக்கு தண்ணி விட்டு, வீடு கூட்டி முழுகி ... அப்பப்பா, தலை சுற்றியது.

"கொஞ்சம் அம்மாக்கு ஒத்தாசை செய்ங்க. கூட்டி முழுகுங்க," என்று தன் மகன்களிடம் உத்தரவிட்டாள். அவர்கள் ஒத்தாசை செய்ய கூடிய வயதுதான். பெரியவனுக்கு பதினாலு வயது, சிறியவன் பன்னிரண்டு. துணியெல்லாம் மடித்து வைத்து விட்டு சோஃபாவில் உட்கார்ந்தபடியே கண் அயர்ந்தாள்.

திடீரென்று அவள் மகன்கள் உரத்த குரலில் சண்டை போடுவது கேட்டு அதிர்ந்து எழுந்தாள். மாதவன் அழுது கொண்டிருந்தான். 'என்ன' என்பது போல் சஞ்சித்தைப் பார்த்தாள்.

"வெறும் நடிப்பு!" என்று அவன் கடுகடுத்தான்.

"இல்ல!" என்று மாதவ் குரல் கொடுத்தான்.

பெருமூச்சு விட்டாள்  நம்ரதா. "என்ன நடந்தது?"

"அவன் என்ன அடிச்சான்," என்று மாதவ் இன்னும் அழுதான்.

மாதவ் நிஜத்தைச் சொல்கிறான் என்று தெரியும். ஆனால் அது முழு உண்மை அல்ல. சஞ்சித்தைப் பார்த்தாள்.

"அவன் கிச்சனையும்  பெட் ரூமையும் பெருக்கறேன்னு சொன்னான். இப்போ கிச்சன் வாசல்ல பண்ண மாட்டேன்னு சொல்றான். இவன் எப்பவுமே இப்படித்தான். அப்புறம் நான் குவிச்சு வெச்ச குப்பை மேல வேணும்னே ஓடி அத பறக்க வெக்கறான்!"

"இல்ல!" என்று மாதவ் மறுத்தான். இந்த வாதம் விட்டால் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் போல் இழுத்துக்கொண்டே போகும் என்று அறிந்தவளுக்கு களைப்பும் கூடச் சேர்ந்து கோவத்தை உண்டாக்கியது. கண்களில் பொறி பறந்தது, ரௌத்திர தாண்டவம் ஆட ஆயத்தமானாள்.

"ஒரு சாண் அளவு தரையை பெருக்க இவ்வளவு பெரிய போரா? உங்களுக்கெல்லாம் நான் பார்த்து பார்த்து செய்யல? ஒரு வேளை வீட்டுல கொஞ்சம் ஒத்தாசைச் செய்ய சொன்னா இப்படியா நடந்துக்கறது?" யாரிடம் நியாயம் என்று சொல்வது தெரியாமல் முழித்த அவள், "அந்த நாலு டைல பங்கு போட்டு கொடுகட்டமா?" என்று உணர்ச்சியே இல்லாத சஞ்சித் முகத்தையும், கண்ணீர் வடிக்கும் மாதவ் முகத்தையும் முறைத்துப் பார்த்துக்கேட்டாள்.

கேட்ட அவளுக்கே கோவம் மாயமாக மறைந்தது. சஞ்சித்தும் மாதவும் நகைத்தனர். மூவரும் அந்த டைல்களை பங்கு போடுவதை நினைத்து சிரித்தனர்.

"நீ பெருக்கு, நீ துடை," என்று நீதி வழங்கி நம்ரதா தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.


Friday, November 11, 2016

நினைவிருக்கிறதா?

மும்பையிலிருந்து டில்லி கிளம்பும் அதிதி மனது சிறகுபோல் படபடத்தது. வேலை விஷயமாக போகும் இந்த பயணத்தில் பழைய சில ஸஹ ஊழியர்களைச்  சந்திக்கலாம் என்று எண்ணிய அவளுக்கு ஒரு சிறிய இன்ப அதிர்ச்சி.

அதில் பரத்தும் வருவதாக சொன்னான். எங்கு சென்றான் என்று கூட தெரியாமல் காணாமல் போன அவன் இப்பொழுது, வாட்ஸ் ஆப் மூலமாக மறுபடியும் தொடர்பு கொண்டான். கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் மிகவும் கலகலவென்று பழகினான். எல்லோருக்கும் ஒரு வார்த்தை, ஒரு கேள்வி. அவளுக்கும் தான். டில்லி வரப்போகிறேன் என்று அவள் சொன்ன உடன், எங்கே, எப்போ, சந்திக்கலாமா என்று முதலில் கேட்டவனும் அவன்தான். ஐயோ டில்லி  போக வேண்டுமா என்று எண்ணிய அவள் மனதில் எப்பொழுது போகப்போகிறோம் என்கிற ஆவல் எழுந்தது.

எத்தனை நினைவுகள் அவள் மனதை வாட்டின. வேலைச் சம்மந்தமான சந்திப்புகளில்கூட பரத் பற்றிய நினைவுகள்தான். சேர்ந்து வேலை செய்த அந்த இருபத்திரண்டு தாண்டிய பருவ காலத்தில் எத்தனை சிந்தனை பரிமாற்றங்கள், எத்தனை ஜாடையில் பேச்சுகள்... காதல் என்று ஒப்புக்கொள்ளவில்லையே தவிர, சொல்லாமல் நடந்தது இருதய பரிமாற்றமும்.

அப்படித்தான் அவள் நம்பி இருந்தாள். ஆனால் அவன் திடீரென்று ஒரு நாள் "வேலையை விடப்போகிறேன்," என்று சொல்லும் பொழுது, மண்டையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. சரி, கிளம்பும் பொழுதாவது தன் உணர்வுகளை இவளிடம் பகிர்ந்து கொள்வான், தன்னுடன் வந்துவிடச் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவனோ தன் எதிர்காலத்தைப்பற்றியே பேசினான். அதில் இவளுக்கு இடம் இல்லை என்று உணர்ந்த அவள் மனம் வாடியது. இன்று நினைத்தால் கூட நெஞ்சை ஏதோ தைப்பது போலத்தான் இருந்தது. இப்படி பழைய நினைவுகளிலேயே வாழ்ந்தால் புதுமண வாழ்வு பாழாகி விடுமோ என்று பயந்த அவள் மணமே  செய்து கொள்ளாமல், கருமமே கண்ணாயினாள்.

டில்லியில் பரத்துடன்  தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்க வேண்டிக்கொண்டாள். அப்படி கிடைக்கவும் கிடைத்தது. அவன் சற்று முன்பே வந்து விட்டான்.

"உனக்கு ஜனாவை நினைவிருக்கிறதா? சுதீர் என்ன ஆனான்? ஏய், சுரேஷ் என்று ஓருவன் இருந்தான், இல்லையா?"

மற்றவர்கள் வரத் தொடங்கினர். அன்று மாலை முழுவதும், "நினைவிருக்கிறதா?" என்ற கேள்வியிலேயே போய் விட்டது.

"நாம் இருவரும் பழகினது நினைவிருக்கிறதா? அந்தக் கோவில் வரைச் சென்று திரும்புவோம், அது நினைவிருக்கிறதா? வேர்க்கடலை தின்றுகொண்டே நடப்போம், அது நினைவிருக்கிறதா? டீ வாங்கிப்  பகிர்ந்துகொள்வோமே, அது நினைவிருக்கிறதா? லேட் ஆகி விட்டால் நீ என்னை உன் பைக்கில் கொண்டு போய் விடுவாய்... அது நினைவிருக்கிறதா?"

இப்படி எத்தனை நினைவுகள்! எல்லாவற்றையும் முழுங்கி விட்டு, அதிதியும் மற்றவர்களுடன் அவசியம் இல்லாத நினைவுகளைத் தோண்டி எடுத்தாள். நினைவில் கூட இல்லாத அந்த நாட்களைப்பற்றி அவனிடம் பேசி தன் நினைவுகளைத் துச்சப்படுத்த அவள் விரும்பவில்லை.

Tuesday, October 11, 2016

பஞ்சில் ஒளிந்த இடி

கனவில் மிதக்க மென்மையான மெத்தை
அதோ தூரத்தில் மிதக்கும் மேகங்கள்
வெள்ளை பஞ்சுபோல் மிதமான அவை
தூண்டும் என் மனதில் எத்தனை கனவுகள்

ஒரு நாள், ஒரே ஒரு நாள் அதில் படுக்க
ஒரு பொழுதாவது நிம்மதியாக அதில் உலாவி
இந்திரலோகமோ, கனவுலகமோ, அதில் மிதக்க
சோம்பியும், உருண்டும், புரண்டும், உலகளாவி 

வானத்திலிருந்து கீழே உலகைப்  பார்க்க
அங்கு நடப்பதைக் கற்பனைச் செய்ய
பறவைப்போல் சுதந்திரமாக பறக்க
வடிவங்களுக்கு  சிந்தனையால் வர்ணம் பூச

இந்த கனவுகள் நிஜமாவதற்கு
ஆஹா வந்ததே அந்த விமானம்
ஆனால் மேகத்தின் நடுவே பறப்பதற்கு
வேண்டுமே தனி மனோதைரியம்

மேலும் கீழும் ஆட்டிவைக்கும்
கனவுகளெல்லாம் சிதறிப்போகும்
பனிமூட்டம் கண்ணை மறைக்கும்
நிலத்தை இரு கண்கள் ஆவலுடன் தேடும்

என்னத்தான் கனவைப்போல மிதந்தாலும்
அந்த பொல்லாத மேகம் இடியைத் தாங்கும்
 வெறும் பனித்துளிகளாக இருந்தாலும்
பாறையின் பலத்திற்கு அது ஈடாகும்

இருக்குமிடத்திலேயே கனவு காண்
மாயை இந்த உலகம் என்று புரிந்துகொள்
மனது பறந்தாலும் நிலைத்து நில் 
எதிலும் அளவோடு நடந்துகொள்.