Saturday, September 16, 2017

கரடுமுரடான உறவின் பாதைகள்

காயத்ரி வீட்டுக்குள் நுழைந்து, தன் பையை அதன் இடத்தில் வைத்தாள். முகம், கை மற்றும் கால்களை அலம்பிக் கொண்டு, சமையல் அறையில் நுழைந்து, இரவு சாப்பாட்டிற்கு வேண்டியதைச் செய்யத் தொடங்கினாள்.

போன் மணி அடித்தது. மாமியாருடைய நம்பர் தெரிந்தது. ஒரு நொடிக் கண்ணை மூடிக்கொண்டு, மனதைத் தேற்றிக்கொண்டு பேசுவதற்காக அதைக் கையில் எடுத்தாள்.



"நீயா? கைலாஷ் இல்லையா?"

"இல்லை. வரும் நேரம்தான்."

"சரி," என்று இழுத்தாள் மாமியார் ராஜேஸ்வரி.

"அப்பாவும் நீங்களும் சௌக்கியமா?" என்று விசாரித்தாள்.

பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன கைலாஷுக்கும் காயத்ரிக்கும் திருமணமாகி. இரு மணி போல் மகன்கள். தனிக்குடுத்தனம். மனமும் வீடும் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. மாமியார் மாமனார் உள்ளூரிலிருந்தார்கள். அடிக்கடி போக்கு வரவு இருந்தது. அதிகமாக இவர்கள் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள்...

இருந்தாலும்...

"ஆம்..."

"வந்ததும் பேசச்சொல்கிறேன்," என்று கூறி போனை வைத்தாள். அவளும் தாய்க்கும் மகனுக்கும் நடுவில் புகுற மாட்டாள். ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால் அதைக் கேட்பதை விட்டுவிட்டாள்.

சிறிது நேரத்திற்கு கைலாஷும் வீடு திரும்பினான். "உங்கள் அம்மாவுக்கு உங்களிடம் பேச வேண்டுமாம்," என்று  கூறினாள்.

"பேசிவிட்டேன். அம்மாவே மொபைலில் போன் செய்தாள். ஜுரமாம்."

இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை காயத்ரிக்கு. "என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே?" என்று கேட்டு விட்டாள்.

கைலாஷுக்குத் தெரியும், அவள் வருந்துவது. "நான் இங்கு வந்து இருக்கச் சொல்லியிருக்கேன். டாக்டரிடம் நாளைக்கு போய்விட்டு பார்க்கிறேன் என்றாள்."

கைலாஷுக்கு ஒரு அண்ணனும் உண்டு. அவனும் உள்ளூர் தான். பெரிய மருமகள் ஒரு நாளும் கூப்பிட மாட்டாள் என்று தான் மாமியார் சொல்லி நினைவு. ஆனால் இப்பொழுதெல்லாம் காயத்ரிக்கு ஒரு சின்ன சந்தேகம். அழைத்தும் அவர்கள் வராததால் அவள் கூப்பிடுவதையே நிறுத்தி விட்டாளோ என்று.

இவளுக்கு தான் இன்னும் அப்படி அலட்சியமாக  இருக்க முடியவில்லை. போன் செய்து தானும் அழைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அடக்கினாள். அவள் அப்படியே, "வந்து இருங்களேன்" என்று கூறினாலும், மகன் அதைச் சொன்னால்தான் வருவார்கள். ஒரு வாரம் என்பார்கள், இரண்டு நாட்களில் திரும்பி விடுவார்கள். "வேலை இருக்கிறது," என்று கூறுவார்கள். சரி என்று தலையாட்டி விடுவாள். தனியாக இருப்பதனால் தன் வீட்டுப் பொறுப்புகளைத்  தானே பார்த்துக்கொள்வதால் இருக்கும் என்று அவளும் அதற்கும் மேல் வற்புறுத்த மாட்டாள். வற்புறுத்தினாலும் கேட்கவா போகிறார்கள் என்ற எண்ணமும் உண்டு.

ஆனால் இதை போல் உடல் நன்றாக இல்லாத பொழுதும் அவர்கள் வராமல் இருப்பது வீம்பு என்று தோன்றும். தன் கணவனிடம் பல முறைக்கு கூறிப் பார்த்தாள், "ஏன் வயதான காலத்தில் தனியாகக் கஷ்டப்பட வேண்டும்? நம்முடன் வந்து இருக்கலாமே?"

"சொல்லிப் பாரிக்கிறேன்..." என்று கூறிய கைலாஷும் பல முறை தன் பெற்றோர்களைத் தன்னுடன் வந்து இருக்க வேண்டிக்கொண்டிருக்கிறான் . "வரோம் டா. என் மகன்களுடன் இல்லாமல் வேறு எங்கு போய் இருக்கப் போகிறோம்... ஆனால்  இப்பொழுது உடனே முடியாது... இங்கு வீட்டைச் சரி செய்ய வேண்டும், வேண்டாததைத் தூக்கிப் போட வேண்டும்..." என்று வேலைகளை நீட்டி முழக்கிக்  கொண்டு போனார்கள்.

"நல்லது தான். தூரத்தில் இருக்கும் பொழுது நிம்மதி. கூட இருந்தால் மிகவும் கடினம்," என்று அவளுடன் வேலைச் செய்பவர்கள் எச்சரித்தார்கள். அதில் நியாயம் இருக்கிறது என்று அறிந்தாலும், மனது இரண்டாகப் பிளந்து அவளைத் தவிக்க வைத்தது. பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம், என்றும் அவர்கள் தன்னை வெளி மனுஷிப் போல் நடத்துகிறார்கள் என்ற வருத்தம் இன்னொரு பக்கம்...

அந்த ஞாயிறு, காயத்ரி கைலாஷுடனும் தன் மகன்களுடனும் அவர்களைச்  சந்திக்கச் சென்றாள் . மாமியாருக்கு இப்பொழுது நன்றாகத் தேவலை. அங்கு அவர்களைப் பார்க்க மாமனாரின் தங்கையும் வந்திருந்தாள். "என்னதான் இருந்தாலும் இப்படி உள்ளூரிலேயே இருந்து கொண்டு பெரியவர்களை தனியாக விடுவது நன்றாக இல்லை," என்று வெளிப்படையாக காயத்ரியைப் பார்த்து பேசும்பொழுது அவளுக்கு சுருக்கென்றது.

"ஏண்டி  நீ வேற! அவளும் வேலைக்குப் போகிறாள்!" என்று மாமியார் குறுக்கிட்டாள்.

"உனக்கு எப்பவுமே இப்படித்தான் மன்னி, வீட்டுக் கொடுக்காமல் பேசுவாய்!" என்று நாத்தனாரும் மன்னியும் கொஞ்சிக் கொண்டார்கள்.

கைலாஷ் காயத்ரியைப் பார்த்து கண் சிமிட்டினான். அவனுக்கு உண்மை தெரிந்தால் போதும். வேறு யார் என்னப் பேசினால் என்ன, என்று காயத்ரி சிரித்துக்கொண்டே, "டீ போட்டுக்கொடுக்கட்டுமா அத்தை?" என்று எழுந்தாள். எங்கே ஏதாவது கடுமையான வார்த்தை தன் வாயிலிருந்து வந்து விடுமோ என்று பயந்து, அங்கிருந்து நகருவதே மேல் என்று சமயலறைக்குச் சென்றாள்.



No comments:

Post a Comment