Thursday, April 13, 2017

பச்சைக் கொடி, முத்துச் சரம்

 செடி கொடியை பார்த்து மகிழும் எனக்கு அதை வளர்க்கும் அளவிற்கு ஆர்வம் கிடையாது. எதுவுமே தானாக வந்தால் சரி, நான் முயற்சி எடுக்க வேண்டுமென்றால் சற்று தயங்குவது வழக்கம்.

ஒரு துளசி - எங்கிருந்தோ தேடி வரவே ஒரு தொட்டி வாங்கி வைத்தேன். நன்றாக வளர்ந்ததை பார்த்து எனக்கே ஆச்சர்யம். ஆனால் நான் பிரசவத்திற்கு என் தாய்வீட்டிற்கு சென்றபொழுது அது உயிரை விட்டது. பராமரிப்பு இல்லாமலா இல்லை அதன் காலம் முடிந்ததனாலா என்றுகூட தெரியாது.

பிறகு குழந்தைகள், பொறுப்புகள்... அவர்கள் சற்று வளர வளர, ஒன்று, இரண்டு என்று தொட்டிகள் அதிகரித்தன.

இன்று இருபதுக்கு மேல் இருக்கின்றன. செடியைப் பார்க்கும் பொழுதுதான் வாழ்க்கையில் ஆர்வம் என்பது என்ன என்று புரிந்துகொண்டேன். எனக்கு ஆர்வத்திற்கு என்றும் குறைச்சல் கிடையாது. அதைப் பற்றி சொல்லவில்லை. உயிர் என்பது எவ்வளவு ஆர்வத்துடன், பிடித்துக்கொள்ள ஒரு இடத்தை தேடி விடுகிறது. நாம் நடாத  செடி, நம் தோட்டத்தில் நட்டத்தை விட செழிப்பாக வளர்கிறது. வைத்தச் செடிகளில் பூச்சிப்  பொட்டு வரலாம், ஆனால் நடாததில்  வருவதும் இல்லை, அது வேகமாக குட்டிகளையும் போட்டு விடுகிறது.

சில நேரங்களில், நட்ட செடி போய்விட்டது என்று நினைக்கும்போது, துளிர் விட்டு மனதை குதூகலப் படுத்துகிறது.

எத்தனை விதங்கள் வாழ! குளுமை, எளிமை, அடக்கம் - இருக்கும் இடம் தெரியாமல், மௌனமாக, தன் வேலையைச் செய்துக் கொண்டு... நீர், வெயில், நிலம்... போதும்... அன்பு கிடைத்தால் இன்னும் தாங்காத சந்தோசம். வாங்குவதைவிட அதிகம் கொடுக்கும் பண்பு... பேர் கிடைக்கிறதோ இல்லையோ பூத்து குலுங்குவது பழக்கம்.

எழுந்தவுடன் என் சிறிய தோட்டத்தில் ஐந்து நிமிடம் இருந்தாலே போதும், மனதில் புத்துணர்ச்சி பெருகும்.

எதையுமே செய்ய முடியமா என்று நினைப்பது வீண். செய்து பார்த்தால் தானே தெரிந்துவிடும்.

Tuesday, March 28, 2017

கண்ணாடி

கண்ணாடியின் முன்னாடி
நான் என்னுடன் விளையாடி
என் கண்களுடன் உறவாடி
என் உண்மையென்ன என்று தேடி

அறிந்த பின்னும் அறியாமல்
பார்ப்பதெல்லாம் புரியாமல்
தவறுகள் சிலது  தெரியாமல்
அதைச் சகிக்க முடியாமல்

விழுந்தது கண்களில் திரை
நாடகம் அதில் பல வகை
தினம் ஒரு புதுக்  கதை
அதற்கும் இருந்தனர் பல ரசிகை

நிழலே நிஜமாக
பொய்யே மெய்யாக
பிம்பம்  தடுமாற
உயிர்  ஊசலாட

கண்ணாடி பொய்யாகுமா?
கண்கள் தடுமாறுமா?
கற்பனை உண்மையாகுமா?
தன்னையே ஏமாற்றமுடியுமா?

மனதும் தெளிந்தது
திரையும் கிழிந்தது
கண்ணும் கண்ணும் சந்தித்தது
புது நம்பிக்கை பிறந்தது

இதுவே நான்
நானே தான்
என் நிஜம் இதுதான்
இதில் எனக்கு பெருமைதான். 

அகமும் முகமும் ஒன்றே
நிஜத்தால் பொய்யைய் வென்றே
நம்பிக்கையுடன் முன்னே சென்றே
வாழ்வேன் இனி நன்றே 

Tuesday, March 21, 2017

நினைவுகள் விலைபோகும்

டாக்ஸியிலிருந்து மல்லிகா இறங்கினாள். வீட்டைப் பார்க்கும் பொழுது இடி விழுந்தது போல் தோன்றியது. ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் பழுது படிந்து, பாழடைந்து கிடந்தது. கண்ணில் தேம்பி நின்று கண்ணீரை மறைக்க முயன்று, டிரைவருக்குக் காசை கொடுத்து அனுப்பிவிட்டு, பெட்டியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தாள். உள்ளே தூசி படிந்திருந்தது. மூக்கை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு, பெட்டியை வாச அறையில் வைத்து, துடைப்பம் இருக்க வேண்டிய இடத்திற்கு சென்றாள். ட்ரெயினில் வந்த கிளைப்பு, மேலும் பூமியிலிருந்து எழும் தூசி... அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னாடி வர வேண்டிய அவசியமென்ன? மூத்த மகள், பொறுப்பெடுத்து பழகி விட்டது.

Saturday, February 25, 2017

இக்கரைக்கு அக்கரை - II

ருக்கு மனதில் அலைப்பாய்ந்தது . அவன் காதலித்தவளைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாததற்காக வருந்துவதா, தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுவதா, இல்லை தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயப்படுவதா?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?

Tuesday, February 21, 2017

இக்கரைக்கு அக்கரை - I

"ருக்கு, ரெடியா? எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகிறது," பட்டாபி குரல் கொடுத்தான்.

"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.

Friday, February 10, 2017

பூ கிளப்பிய புயல்

..
"பெண்கள்  பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது  அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."

Friday, February 3, 2017

கைக்கட்டு

கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!